Sunday 15 December 2013

மார்க்சிய தத்துவம்

மார்க்சிய தத்துவம்

இயங்கியல் பொருள்முதல் வாதம்

தத்துவம் பயில வேண்டிய அவசியம் என்ன?

உலகில் உள்ள அனைத்துமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றுமே மாற்றத்திற்கும் – வளர்ச்சிக்கும் உட்பட்டு வருகின்றன.
இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தில் தோன்றியதே நாம் வாழ்கின்ற பூமி. இப் பூமியில் முதலில் உயிரற்ற பொருட்களே நிலவின. அவ்வுயிரற்ற பொருட்களில் ஏற்பட்ட மாற்றத்திலே தோன்றியதுதான் உயிர்ப் பொருள்கள். அவ்வுயிர் பொருட்களின் வளர்ச்சியிலே தோன்றியவனே மனிதன்.

மனிதன் ஏனைய உயிரினங்களிடமிருந்து ஒரு முக்கிய பண்பில் வேறுபடுகிறான். ஏனைய உயிரினங்கள் தங்களை தாங்கள் வாழ்கின்ற சூழலோடுப் பிணைத்துக் கொள்கின்றன. தங்களது சூழலுக்கு அவை உட்படுகின்றன. ஆனால் மனிதனோ தனது சூழலிலிருந்து தன்னைப் பிரித்து அறிகிறான். தனது உழைப்பு மூலம் தன்னையும் தனது சூழலையும் மாற்றியமைக்கிறான். தன்னை தன் சூழலுக்கு எதிராக நிறுத்தி, அதனுடன் போராடுகிறான். அதன் மூலம்தான் தனது சூழலின் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கி தனக்கு அச்சூழலைக் கட்டுப்படுத்துகிறான்.

தனது சூழலைக் கட்டுப்படுத்துகின்ற மனிதன், அதற்கு அச்சூழலைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயற்கையின் பண்புகள் என்ன? பிரபஞ்சத்தில் இருந்து இவ்வுலகம் பூமி எப்படி தோன்றியது? பூமியின் தோற்றத்திற்கு கடவுள் போன்ற ஏதோ சில வெளிச்சக்திகள் காரணம் என்ற சிலரின் கூற்று உண்மையா? உயிர்ப் பொருட்கள் எவ்வாறு தோன்றின? மனிதன் எவ்வாறு பரிணமித்தான்? இயற்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு – வளர்ச்சிகளுக்கு அடிப்படை என்ன? புறச்சக்திகள் காரணமா, அகச்சக்திகள் காரணமா? இயற்கையின் பருப்பொருளின் வளர்ச்சி விதிகள் என்ன? இவை போன்ற பல வினாக்களுக்கு பதில்களை அறிய வேண்டியது மனிதனுக்கு அவசியமாகிறது. அவ்வாறு அறிந்து செயல்படும் போதுதான், அவனால் தனது சூழலை தனது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த முடியும்.

சூழல் என்று கூறும்போது, இயற்கைச் சூழலை மட்டும் நாம் இங்கு கொள்ளவில்லை. மனிதனின் சமுதாயச் சூழலையும் சேர்த்துத்தான் கூறுகிறோம். மனித சமுதாயத்தில் தோற்றம் என்ன? எவ்வாறு அது மாறி வருகிறது? வர்க்கங்கள் எப்போது தோன்றின? அரசுகள் எப்போது தோன்றின? சமுதாயத்தின் வளர்ச்சியின் பல கட்டங்கள் யாவை? எவ்வாறு அது ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது? வர்க்க வேறுபாடுகளை, சுரண்டல்களை முழுமையாக ஒழிக்க முடியுமா? இவை போன்ற பல வினாக்களுக்கு மனிதன் பதில்களை அறிய வேண்டியுள்ளது. அப்போதுதான் அவனால் அவனது சமுதாயத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். தனக்கு ஏற்ற வகையில் சமுதாய அமைப்பை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

மனிதன் தனது சூழலை, இயற்கை, சமுதாயச் சூழலை – அறிந்துகொள்ள சிந்திக்கிறான். அவை பற்றிய அவனது சிந்தனை சரியானதாக இருந்தால்தான் நடைமுறையில் அதை அவன் பயன்படுத்தி தனது சூழலை தனக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க முடியும். எனவே சிந்தனைகள் எவ்வாறு பிறக்கின்றன. அதன் வளர்ச்சியின் விதிகள் என்ன? சரியான சிந்தனை எவ்வாறு பிறக்கிறது? எவ்வாறு சிந்தனையைச் சரியானது தவறானது என்று சோதித்துப் பார்ப்பது? போன்ற பல வினாக்களுக்கும் அவன் பதிலைத் தேட
வேண்டியுள்ளது.

எனவே இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றுக்கும் உரிய பண்புகளை வளர்ச்சி விதிகளை மனிதன் அறிய வேண்டிய அவசியமுள்ளது. அதுவே தத்துவத்தை அறிவது என்பதாகும்.

தத்துவத்தின் மூலம் உலகைப் பற்றி விளக்குகிறோம், அறிகிறோம். உலகைப் பற்றி விளக்கம் தருவது மட்டும்தான் தத்துவத்தின் வேலையா? அவ்வாறுதான் பழைய தத்துவவாதிகள் செய்துவந்தனர். ஆனால் காரல் மார்க்ஸ் அதில் வேறுபட்டார். நமது தத்துவத்தின் நோக்கம் உலகை விளக்குவது மட்டுமல்ல உலகை மாற்றுவதும் ஆகும். உலகத்தின் பண்புகளை, விதிகளை, அறிவதன் நோக்கம் அவற்றின் உதவி கொண்டு உலகத்தை நமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதேயாகும்.

இன்று இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சிப் பணியை மேற்கொண்டுள்ள நாம், உலகத்திற்குரிய பொதுத்தன்மைகளை தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதா? உலகில் பொதுவாக சமுதாயம் எவ்வாறு வளர்ச்சியடைகிறது? பல்வேறு காலகட்டங்களில் நடந்த புரட்சிகளின் தன்மை என்ன? பல்வேறு நாடுகளில் நடந்த புரட்சியின் தன்மை என்ன? முதலாளித்துவப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் வேறுபாடு என்ன? சோசலிசப் புரட்சிக்கும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? சோசலிசப் புரட்சிக்கும் கம்யூனிசப் புரட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம் என்றால் என்ன? காலனி, அரைக்காலனி, நவீன காலனி என்றால் என்ன? இவை போன்ற பல வினாக்களுக்கு விடைகள் அறிவது அவசியம்.

இந்தியப் புரட்சியில் ஈடுபட்டுள்ள நாம் உலகத்தின் பொதுவான வளர்ச்சி விதிகளை மட்டும் புரிந்து கொண்டால் போதாது. ஏனென்றால் இந்தியாவிற்கென்றே உள்ள சில சிறப்பு விதிகளும் இருக்கின்றன. எனவே இந்திய சமுதாயத்தின் தோற்றம் என்ன? வர்க்கங்கள் அரசுகள் எப்போது தோன்றின? அவற்றின் சிறப்புப் பண்புகள் என்ன? இந்தியச் சமுதாயதின் பல்வேறு வளர்ச்சிக் காலகட்டங்கள் என்ன? அவற்றிற்கும் உலகச் சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிக் கால கட்டங்களுக்கும் வேறுபாடு ஏதும் உண்டா? இன்றைய இந்தியச் சமுதாய அமைப்பின் பண்பு என்ன? எந்தப் புரட்சிக் கட்டத்தில் நாம் உள்ளோம்? போன்ற பல வினாக்களுக்கு விடைகளை நாம் அறிதல் வேண்டும்.

சரியான தத்துவமின்றி, நம்மால் உலகை சமுதாயத்தை மாற்றியமைக்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே அத்தத்துவத்தை அறிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

உலகிற்கு சரியாக வழிகாட்டுகின்ற தத்துவம் இயங்கியல் தத்துவமேயாகும். அத்தத்துவம் காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரால் வளர்க்கப்பட்டுள்ளது. அத்தத்துவத்தை அறிந்து கொள்ள நாம் இனி முயல்வோம்.

பின்வரும் கட்டுரைகளை நீங்கள் மார்க்சியத் தத்துவத்தை அறிந்துகொள்ள ஓரளவே பயன்படும். இதன் மூலம் மட்டுமே மார்க்சியத் தத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது சாத்தியமில்லை. காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரின் மூல நூல்களையும் பிற மார்க்சிய அறிஞர்களின் நூல்களையும் படித்தல் வேண்டும். சக தோழர்களுடன் விவாதித்தல் வேண்டும்.

மேலும் மார்க்சியத் தத்துவத்தை புத்தகங்கள் மூலம் மட்டுமே படித்து முழுமையாக சரியாக அறிந்து கொள்ள முடியாது. புரட்சிகர நடைமுறையில் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றங்களில் நேரடியாக பங்குகொள்வது மூலமே மார்க்சியத் தத்துவத்தைச் சரியாக புரிந்துகொள்ள முடியும்.

கட்டுரையாசிரியர் தன்னால் இயன்றவரையில் மார்க்சியத் தத்துவத்தை விளக்க முயற்சித்துள்ளார். தவறுகள் இருக்கலாம். அவற்றை தோழமைக் கண்ணோட்டத்துடன் விமர்சனம் செய்வதை கட்டுரையாசிரியர் எதிர்பார்க்கிறார். உலகக் கண்ணோட்டம் (World Outlook)

நம்மைச் சுற்றி பல்வேறு பொருட்களைப் பார்க்கிறோம். இயற்கையிலும், சமுதாயத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அப்பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் நாம் பார்க்கும் போது அணுகும்போது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம்.

ஒரு நகரில் கடும் புயல்வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அப் புயலைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளும்போது, இரு வேறுபட்ட கருத்துகள் அவர்களிடையே நிலவுவதைக் காணலாம். ஒரு சிலர் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே - கடவுளே புயலுக்குக் காரணம். உலகில் நடக்கின்ற கொடுமைகளை காணும் கடவுள் நமக்குத் தருகின்ற தண்டனையே இப்புயல் என்று கூறலாம். வேறு சிலர் அந்நகரில் புயலுக்குக் காரணம் அப்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தக் குறைவேயாகும் என்று
கூறலாம்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவன் பஸ் விபத்தில் சிக்கி இறக்கிறான் என்று கொள்வோம். ஒரு சிலர் அவன் தலைவிதி அவ்வளவுதான், கடவுள் அவனுக்கு எழுதிவைத்தது அவ்வளவுதான் என்று கூறலாம். வேறு சிலர் பஸ் டிரைவர் கவனமாக ஓட்டியிருந்தால் அவன் பிழைத்திருக்கலாம், அல்லது அவனாவது சாலையில் கவனமாகப் பார்த்து வந்திருந்தால் விபத்தில் சிக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறலாம்.

மேற்கூறிய உதாரணங்களிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? மக்கள் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை, நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது – அணுகும்போது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். கண்ணோட்டங்கள் வேறுபட்டிருக்கின்றன என்றாலும், மக்கள் எல்லோரும் ஏதோ ஒரு கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவு.

நாம் கண்ணோட்டத்தை எப்படிப் பெறுகிறோம்? நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை, நிகழ்ச்சிகளை தினந்தோறும் காணும்போது, அவை பற்றிய ஒரு பொதுக் கருத்து ஒட்டு மொத்தமான கருத்து, நமக்கு எழுகிறது. அப்பொதுக் கருத்தின் அடிப்படையில்தான் நாம் நமது கண்ணோட்டத்தை உருவாக்குகிறோம். ஒரு சிலர் உலகில் நடப்பவை எல்லாவற்றிற்கும் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை (அது கடவுளாகவும் இருக்கலாம்) காரணம் என்று நினைக்கின்றனர். எனவே அவர்கள் எப்பொருளையும், எந் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் போது, அவை எல்லாவற்றிற்கும் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே காரணம் என்று கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கின்றனர். வெறு சிலர் உலகில் நடப்பவை எல்லாவற்றிற்கும் உலகிற்குள்ளேயேதான் காரணம் உள்ளது என்றும், உலகிற்கு
அப்பாற்பட்ட ஒரு புறசக்தி என்று ஒன்று கிடையாது என்றும் நினைக்கின்றனர். எனவே அவர்கள் எப்பொருளையும், எந்நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது, அவற்றிற்கான காரணங்களை உலகிற்குள்ளேயே தான் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கின்றனர்.

எனவே உலகக் கண்ணோட்டம் என்பது ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள புற உலகப் பொருட்களை, நிகழ்ச்சிகளைப் பற்றி கொண்டுள்ள பொதுக் கருத்து எனலாம். அவன் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறானா அல்லது தவறான கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறானா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு உலகக் கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.

இருவேறு உலகக் கண்ணோட்டங்கள்:

மேற்கூறிய உதாரணங்களைப் பார்க்கும்போது மக்களிடையே இருவேறு உலகக் கண்ணோட்டம் நிலவுவதைக் கண்டோம். ஒன்று உலகில் நடப்பவை எல்லாவற்றிற்கும் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே காரணம் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த கண்ணோட்டம். மற்றொன்று உலகில் நடப்பவை எல்லாவற்றிற்கும் உலகிற்குள்ளேயே தான் காரணம் உள்ளன என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த கண்ணோட்டம்.

நாம் வாழ்கின்ற இன்றைய சமுதாய அமைப்பு வர்க்க சமுதாய அமைப்பாகும். அதாவது இரு வர்க்கங்களைக் கொண்ட சமுதாய அமைப்பாகும். ஒன்று உழைக்கும் வர்க்கம். மற்றொன்று சுரண்டும் வர்க்கம். சமுதாயம் இரு வர்க்கங்களாகப் பிரிந்திருப்பதற்கும், உலகக் கண்ணோட்டங்களின் வேறுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். இதனை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

ஒரு தொழிலாளி நாள் முழுவதும் உழைத்து வறுமையில் வாடுகிறான் என்றும் அவனுடைய முதலாளி இருந்த இடத்தில் இருந்துகொண்டே உழைக்காமலேயே சுகமாக வாழ்கிறார் என்றும் கொள்வோம். ஏன் அந்த முதலாளியால் உழைக்காமலேயே சுகமாக வாழ முடிகிறது? அவன் கையில் மூலதனம் இருக்கிறது. எனவே அவனால் தொழிலாளியின் உழைப்பை சுரண்ட முடிகிறது. எனவே தான் உழைக்காமல் தொழிலாளியை சுரண்டி வாழ முடிகிறது. ஆனால் அந்த முதலாளியிடம் நான் சென்று “எப்படி உன்னால்
உழைக்காமலேயே சுகமாக வாழ முடிகிறது? உழைக்கின்ற தொழிலாளியோ ஏன் வறுமையில் வாடுகிறான்” என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். அவன் என்ன பதில் சொல்வான்? “நான் தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுகிறேன்” என்றா சொல்வான்? அவ்வாறு சொல்ல மாட்டான்? மாறாக “நான் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன். எனவே கடவுள் எனக்கு சுகத்தை தந்துள்ளார். அவன் பாவம் செய்தவன், எனவே அவனுக்கு கஷ்டத்தைக் கொடுத்துள்ளார்” என்று சொல்லுவான். இவ்விடத்தில் அவன் உலகில் நடப்பவை எல்லாவற்றிற்கும் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு புற சக்திதான் காரணம் என்ற உலகக் கண்ணோட்டத்தைப் பின்பற்றுகிறான். ஏன்? இந்த உலகக் கண்ணோட்டம்தான் அவனுக்கு தன்னுடைய சுரண்டலை மூடி மறைக்க பயன்படுகிறது.

தொழிலாளிக்கு இந்த உலகக் கண்ணோட்டம் பயன் தருமா? தராது. பின் அவனுக்கு எந்தக் கண்ணோட்டம் பயன் தரும்? அவனுடைய வறுமைக்கு உலகிற்குள்ளேயேதான் – அவன் வாழ்கின்ற சமுதாயத்திற்குள்ளேயேதான் – காரணம் உள்ளது என்ற உலகக் கண்ணோட்டம்தான் பயன் தரும். அவனுடைய வறுமைக்கு முதலாளியின் சுரண்டல்தான் காரணம். முதலாளியின் சுரண்டலை ஒழித்துக் கட்டினால்தான் அவனுடைய வறுமை அகலும். இதிலிருந்து நமக்கு புரிவது என்ன? தொழிலாளிக்குத் தேவையான உலகக் கண்ணோட்டம் வேறு என்பதேயாகும்.

எனவே சுரண்டும் வர்க்கம் தனது நலனைக் கட்டி காப்பதற்காக தனக்குத் தகுந்த ஒரு உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது. இக் கண்ணோட்டம் வேறு. உழைக்கும் வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கக் கூடிய உலகக் கண்ணோட்டம் வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான உலகக் கண்ணோட்டங்கள் ஆகும். எனவே சமுதாயத்தில் இரு வர்க்கங்கள் நிலவுவதால், இருவேறு உலகக் கண்ணோட்டங்கள் நிலவுகின்றன என்பது தெளிவாகிறது.

தத்துவம் என்றால் என்ன? (Philosophy)

நாம் அனைவருமே ஏதோ ஒரு உலகக் கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறோம் என்று கண்டோம். சரி, ஆனால் நாம் எல்லோருமே நமது உலகக் கண்ணோட்டத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாகச் சிந்திக்கின்றோமா? தக்க ஆதாரங்களுடன் நமது உலகக் கண்ணோட்டத்தை நிறுவ முயல்கின்றோமா? இல்லை. நம்மில் ஒரு சிலரோ அந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நம்மிடையே நிலவுகின்ற உலகக் கண்ணோட்டங்களுக்கு தக்க ஆதாரங்களுடன் ஒரு முழு வடிவம் உருவம் கொடுக்க முயல்கின்றார்கள். அவ்வாறு வடிவம், உருவம் கொடுக்கப்பட்ட உலகக் கண்ணோட்டமே தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

தத்துவவாதிகள் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றையும் ஆராய்ந்து மூன்றிற்கும் பொதுவான விதிகளை வரையறுக்கிறார்கள். அதாவது மூன்றையும் பற்றிய ஒரு பொதுக் கருத்தை உருவாக்குகிறார்கள். ஒரு உலகக் கண்ணோட்டத்தை உருவாக்குகிறார்கள். அதுவே தத்துவம் என அழைக்கப்படுகிறது.

தத்துவம் என்பது தத்துவவாதிகளின் மூளையின் விளைபொருளே என்று சொல்ல முடியுமா? முடியாது. ஏன்? அவர்கள் வாழ்கின்ற சமுதாய சூழ்நிலைதான் அவர்கள் உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கத் தளம் அமைத்துக் கொடுக்கிறது. அவர்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் நிலவுகின்ற உலகக் கண்ணோட்டங்கள்தான் அவர்கள் தங்கள் தத்துவங்களை உருவாக்கப் பயன்படுகிறது.

தத்துவத்தின் பாத்திரம் என்ன?

நிலவுகின்ற உலகக் கண்ணோட்டங்களுக்கு உருவம் கொடுப்பதுதான் தத்துவவாதிகளின் வேலையென்றால், அவர்கள் உருவாக்குகின்ற தத்துவத்திற்குப் பாத்திரமே இல்லையா? இருக்கிறது. உதாரணமாக முன்பு கூறப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கைக்கு ஒரு தத்துவவாதி ஒரு பலமான அடித்தளத்தை சரியோ தவறோ அமைத்துக் கொடுக்கிறான் என்று கொள்வோம். அடித்தளம் அமைக்கப்பட்ட அந்த நம்பிக்கை பற்றிய தத்துவம், மீண்டும் மக்கள் மத்தியில் செல்லும் போது நிலவுகின்ற அந்த கடவுள் நம்பிக்கைக்கு இன்னும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. அதாவது அந்த நம்பிக்கை கொண்ட மக்கள் மீது அதிகமான செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
தத்துவம் ஒரு பொது விஞ்ஞானமாகும் (General Science)

எனவே தத்துவம் என்பது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றிற்கும் உரித்தான பொதுவிதிகளைக் கூறுகின்ற ஒரு பொது விஞ்ஞானம் என்று அழைப்பது சரியானதாகும்.

தத்துவம் ஒரு விஞ்ஞானமென்றால் அதற்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற இயற்கை விஞ்ஞானங்களுக்கும் பொருளாதாரம், அரசியல், மானிடவியல் போன்ற விஞ்ஞானங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? இயற்பியல் என்பது பொருளின் பௌதிகத் தன்மைகள் பற்றி மட்டும் ஆராயும் விஞ்ஞானம்.  இதனைப் போலவே வேதியல் பொருளின் வேதியல் தன்மை பற்றியும், உயிரியல் பொருளின் உயிரியல் தன்மை பற்றியும் ஆராய்வது ஆகும். பொருளாதாரம், அரசியல், மானிடவியல்
போன்றவைகளும் ஒவ்வொன்றும் சமுதாயத்தில் ஒவ்வொரு பண்பை ஆராய்வது ஆகும். ஆனால் தத்துவம் என்பதோ இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றிற்கும் உள்ள பொதுத் தன்மையை ஆராயும் விஞ்ஞானமாகும். ஒரு தனிப்பட்ட தன்மையை மட்டும் ஆராயும் விஞ்ஞானமல்ல இது.

எனவே தத்துவம் என்றால் ஏதோ கடவுள் பற்றிய புராணம் என்று நாம் நினைக்கக் கூடாது. அது ஒரு விஞ்ஞானமாகும். அவ்விஞ்ஞானத்தின் துணைகொண்டு நாம் நமது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டால்தான், நம்மால் புற உலகின் மீது செயல்பட்டு வாழமுடியும்.

மார்க்சிய தத்துவம்
பருப்பொருளும் இயக்கமும் (Matter And Motion)

பருப்பொருள் என்றால் என்ன?

இவ்வுலகில் நாம் மரம், செடி, கொடிகளைப் பார்க்கிறோம். மலை, தண்ணீர், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை பார்க்கிறோம். மழை, புயல், மின்னல், இடி, போன்ற நிகழ்வுகளை காண்கிறோம். இவையெல்லாம் நமக்கு புறவயமாக நிலவுகிறது என்று கூறினால் அதன் பொருள் என்ன? மேற்கூறியவை நாம் சிந்திப்பதால் நிலவவில்லை. அதாவது நமது சிந்தனை உருவாக்கிய பொருட்கள் அல்ல அவை. நாம் அவற்றை பற்றி சிந்தித்தாலும் சிந்திக்காவிட்டாலும் அவை நிலவத்தான் செய்யும். உதாரணமாக ஒருவர்
ஒரு மரத்தைப் பார்க்கிறார் என்று கொள்வோம். அவர் மரம் என்று தன் மனதில் சிந்திப்பதாலா அம்மரம் நிலவுகிறது? அவர் அதை மரம் என்று சிந்திக்காவிட்டாலும் கூட அல்லது வேறு பொருளாக சிந்தித்தாலோ அம்மரம் மறைந்துவிடுமா? மறையாது. இதிலிருந்து என்ன தெரிகிறது. மரமானது அவரது சிந்தனைக்கு புறவயமான நிலவுகிறது. இது அவரது சிந்தனையைப் பொருத்தது அல்ல.

மேற்கூறிய பொருள்களை நாம் எவ்வாறு உணர்கிறோம். அவை நமது புலன் உறுப்புகளை (கண், காது, மூக்கு போன்றவற்றை) பாதித்து அதாவது அவற்றின் மீது செயல்பட்டு, தாங்கள் என்ன என்பதை உணர்த்துகிறது. உதாரணமாக பச்சைக் கொடியை எடுத்துக்கொள்ளுங்கள், அந்தப் பச்சை நிறம் நமது கண்ணைப் பாதித்து தான், பச்சைக் கொடி என்று உணர்த்துகிறது. ஒரு மல்லிகைப் பூ வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அந்த வியாபாரி மல்லிகைப் பூவை வீட்டிற்கு வெளியே கொண்டு வரும்போதே, வீட்டினுள்
இருக்கும் நமக்கு மல்லிகைப் பூ வியாபாரி வருகிறான் என்பது எப்படி நமக்கு தெரிந்தது? தெரிகிறது?  அந்த மல்லிகைப் பூவின் மணம் நமது மூக்கின் மீது செயல்பட்டு தான் எது என்பதை உணர்த்தியது. அது போல தூரத்தில் வருகின்ற ரயில், பஸ் போன்றவற்றை நமது கண்ணுக்குப் புலப்படுவதற்கு முன்பே, அவை என்ன என்பதை அவை ஏற்படுத்துகின்ற சத்தத்தினால் உணர்கிறோம்.

இவ்வாறு நமக்கு (நமது சிந்தனைக்கு) புறவயமாக நின்று, தான் எது என்பதை நமது புலன் உறுப்புகளை பாதிப்பது மூலம் உணர்த்துகின்ற எல்லாவற்றையும் நாம் பருப்பொருள் என்று அழைக்கலாம்.

பருப்பொருள் என்ற சொல் ஒரு பரந்துபட்ட கருத்தைக் குறிக்கிறது. உதாரணமாக மக்கள் வகை வகையான ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். பேண்ட், டிரவுசர், சட்டை, ஜிப்பா, சேலை, கவுண், ரவிக்கை போன்ற பல ஆடைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். அவையனைத்தையும் ”ஆடை” என்ற ஒரே சொல்லால் நம்மால் குறிக்க முடியாது. ஏன்? மேற்கூறியவை அனைத்திற்கும் ஒரே பொதுவான  பண்பு இருக்கிறது அது என்ன? அவை அனைத்துமே நாம் உடுத்துவதற்கு தகுதியானவை, அதாவது உடுத்துவதற்கு பயன்படக்கூடிய; பண்பை பெற்றுள்ளவை. எனவே தான் அவை எல்லாவற்றையும் அவை ஆடை என்ற ஒரே சொல்லால் குறிக்க முடிகிறது. ஆடை என்ற இந்த சொல் ஒரு பரந்துபட்ட கருத்தைக் குறிக்கிறது.

அது போலவே, ’பருப்பொருள்’ என்ற சொல்லும் ஒரு பரந்துபட்ட கருத்தை குறிக்கிறது. மனிதனின் சிந்தனைக்குப் புறவயமாக நின்று அவனது புலன் உறுப்புகளைப் பாதித்து தான் எது என்பதை உணர்த்துகின்ற எல்லாம் ”பருப்பொருள்” என்ற சொல்லால் குறிக்கப்படலாம்.

”பருப்பொருள்” என்பது தத்துவ ஞானத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு சொல்லாகும். ஒரு இனமாகும். பருப்பொருளை படைக்க முடியுமா?

புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல சாமியார்கள் தாங்கள் ”கடவுள் தூதுவர்கள்” என்றும் தங்களால் எப்பொருளையும் படைக்க முடியும் என்றும் கூறிவருகிறார்கள். குங்குமம், விபூதி, வாட்ச், எலுமிச்சை போன்றவற்றை அவர்கள் படைத்துக் காட்டுகிறார்கள். இது உண்மையா? இல்லை. மக்களின் கண்களை ஏமாற்றுவதற்க்குத் தேவையான திறன்களை வளர்த்து வைத்துள்ள அவர்கள் ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்துள்ள பொருள்களை மக்களின் கண்களுக்கு புலப்படாமல் அவற்றை வெளிக் கொண்டுவந்து தாங்கள் அவற்றைப் படைத்ததாக மக்களுக்கு கூறிவருகின்றனர். இந்த ஏமாற்று வித்தைகளை மக்களுக்கு தோலுரித்துக்காட்ட இலங்கையைச் சேர்ந்த டாக்டர் கோவூர் என்ற விஞ்ஞானி, சாய்பாபா படைக்கின்ற எல்லாப் பொருள்களையும் தானும் படைத்துக்காட்டினார். அதாவது புட்டபர்த்தி சாய்பாபா ஏமாற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்தினார். மேலும் ஒரு பூசணிக்காயை படைக்கும்படி அவர் புட்டபர்த்தி சாயிபாபா போன்றவர்களை கேட்டார். ஏனென்றால் அதை மக்களின் கண்களுக்குப் புலப்படாமல், தங்கள் உடலுக்குள் மறைத்து வைக்க முடியாது. ஆனால் இதுவரை பூசணிக்காய் படைக்கிற சாய்பாபாக்கள் தோன்றவில்லை.

இன்று வளர்ச்சியடைந்துள்ள இயற்கை விஞ்ஞானம் பருப் பொருள் படைப்பது பற்றி கூறுவது என்ன? ஒன்றுமில்லாததில் இருந்து ஒரு பொருளைப் படைக்கவும் முடியாது. அது போல் ஒரு பருப்பொருளை ஒன்றுமேயில்லாமல் அழிக்கவும் முடியாது. ஆனால் ஒரு பருப்பொருளின் வடிவத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றலாம். இதுவே விஞ்ஞானம் கூறுவது  ஆகும்.

அதாவது எப்பொருளையும் சூன்யத்திலிருந்து உருவாக்க முடியாது. உதாரணமாக ஒரு கல்லை எடுத்துக்கொள்வோம். சூன்யத்திலிருந்து அதாவது ஒன்றுமேயில்லாததில் இருந்து ஒரு கல்லை யாராவது உருவாக்க முடியுமா? முடியவே முடியாது. சரி ஒரு கல்லை எடுத்துக்கொண்டு அதை ஒன்றுமேயில்லாமல் அழிக்கமுடியுமா? முடியாது. அக்கல்லை உடைத்து மண்ணாக மாற்றலாமே ஒழிய ஒன்றுமேயில்லாமல் ஆக்க முடியாது.
 
எனவே பருப்பொருள் என்பது எப்போதுமே நிரந்தரமாக இருந்து வந்துள்ளது ( Eternal) அதற்கு படைப்பு, அழிவு என்பது கிடையாது. எப்பருப்பொருளையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.

பருப்பொருளின் நிரந்தர விதியும் கடவுள் வாதிகளும்

பருப்பொருள் நிரந்தரமாக நிலவி வருகிறது என்ற விஞ்ஞான விதியை கடவுள் வாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.  அவர்கள் கூறுவது என்ன? ஒரு குறிப்பிட்ட அனாதி காலத்திற்கு முன்பு பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லாதிருந்து பின் ”கடவுள்” போன்ற சக்திகள் தான் பருப்பொருளை படைத்தன. இதுவே அவர்கள் கூற்று. அது உண்மையாக இருக்க முடியுமா?

ஒரு காலத்தில் பிரபஞ்சத்தில் பொருளேயில்லாது இருந்திருந்தால் அது தோன்றுவதற்கு எந்தக்காரணமும் இருந்திருக்க முடியாது. எனவே கடவுள் வாதிகளின் கூற்று பொய்யானது.

கடவுள்வாதிகள் பருப்பொருளின் நிரந்தரத்துவத்தை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்கள்? பருப்பொருள்கள் படைக்கப்பட முடியாதவை என்றால் ”கடவுளுக்கு” இவ்வுலகில் இடமே இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

உலகில் நிலவுகிற எப்பொருளையும் கண்ணுக்குப் புலப்படாத எலக்ட்ரான்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் கடவுள்களை நம்மால் பார்க்க முடியவில்லையே. அதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் இருந்தால்தானே அதைப் பார்க்க முடியும்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். கடவுள் என்று ஒருவர் உண்மையில் இருந்தால்தானே நமக்குப் புலப்படுவார்.

பருப்பொருளும் இயக்கமும்

ஒரு சில ”மதத் தத்துவ அறிஞர்கள்” பொருள் நிரந்தரமாக இருந்து வந்துள்ளது என்பதை தயக்கத்துடன் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் அப்போதும் அவர்கள் கடவுளை கைவிடுவதில்லை. அவர்கள் கூறுவது என்னவென்றால் அனாதிகாலத்தில் பருப்பொருள் நிலவியது, ஆனால் அது இன்று நிலவுகின்ற பிரபஞ்சம் இல்லை, மாறாக இயக்கமற்ற உருவமற்ற ஒரு பொருளாகும். அப்பொருள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அதாவது இன்றைய நிலைக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இயக்கமே இல்லாதிருந்த பொருள் எப்படி இயக்கத்தைப் பெற்றது. அதற்குக்காரணம் கடவுள் என்ற சக்தி தேவை என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி பொருளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே இயக்கமற்ற பிரபஞ்சத்திற்கு இயக்கத்தைக் கொடுத்தது, அச்சக்தியே கடவுள் என்று அவர்கள் கூறுகின்றர்.

கடவுள் வாதிகளின் மேற்கூறிய கூற்றுசரிதானா? இயக்கமேயில்லாத பொருள் பிரபஞ்சம்  அனாதிகாலத்தில் நிலவியிருக்க முடியுமா? அப்படியென்றால் ஏதோ ஒரு இடைக்கால கட்டத்தில் தான் பருப்பொருளுக்கு இயக்கம் ஏற்பட்டதா? இதற்கான விடைகளை நவீன விஞ்ஞானத்தின் துணையுடன் நாம் ஆராயலாம்.

கடவுள் வாதிகள் கூறுவது என்ன? அனாதி காலத்தில் பொருள் இயக்கமே இல்லாதிருந்தது. பின்னால்  ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் அதற்கு இயக்கம் ஏற்பட்டது.  அவ்வாறு பொருளுக்கு  இயக்கம் கொடுக்க கடவுள் போன்ற வெளிச்சக்தி தேவை இவ்வாறு அவர்கள் எந்த அடிப்படையில் கூறுகிறார்கள்?

ஒரு இடத்தில் மேஜை இருக்கிறது என்று கொள்வோம். அது ஆடாமல் அசையாமல் இருக்கிறது. அதை நாம் அசைத்தால் அசைகிறது. நாம் அதை நகர்த்தினால் அது நகர்கிறது. சரி அப்படியென்றால் அதை நாம் அசைக்கும் வரை அதற்கு இயக்கமே கிடையாதா? நாம் தான் அதற்கு முதன் முதலாக இயக்கத்தைக் கொடுத்தோமா? இல்லை. மேஜைக்கு முதலில் இயக்கமே கிடையாது என்று  கூறுவது தவறானது. உதாரணமாக மேஜையை வெயில் படுமாறு வைத்துள்ளோம் என்று கொள்வோம். ஆனால் அது அசையாமலேயே இருக்கிறது என்று கொள்வோம். அதை நாம் அசைத்தால் அசைவு இருக்கிறது என்றும் கொள்வோம். சிறிது நேரத்தில் மேஜை சூடாக இருக்கும் ஏன்? மேஜையில் ஒரு பெளதிக இயக்கம் நடைபெற்றுள்ளது. அதாவது வெப்பமாறுதல் ஏற்பட்டுள்ளது. அப்படி என்றால் மேஜை அசையாமல் இருந்தபோதும் அதில் இயக்கம் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த இயக்கம் மேஜை நகரும் போது ஏற்பட்ட இயக்கம் அல்ல. மேஜை நகரும்போது ஏற்பட்ட இயக்கம் யாந்தீரிக இயக்கம். (Mechanical Motion) என்றழைக்கப்படும். ஆனால் வெப்ப மாறுதல் மேஜையில் உருவாக்கிய இயக்கம் பௌதிக இயக்கம் ( Physical Motion) ஆகும்.

எனவே மேஜை நகரும்போது மட்டுமே இயக்கம் ஏற்படுகிறது என்று கூறுவது தவறானது. மேஜை நகரும்போது இயக்கங்களில் ஒன்றான யாந்தீரிக இயக்கம் ஏற்படுகிறது. அவ்வளவுதான். ஆனால் யாந்தீரிக இயக்கம் ஒன்றுமட்டுமே இயக்கம் என்று கருதுகின்றவர்கள் மேஜையில் நடைபெறுகின்ற பிற இயக்கங்களை இயக்கங்களாக கருதுவதில்லை. எனவே அவர்கள் நாம்தான் அதற்கு இயக்கத்தை அளித்தவர்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் நாம் அளித்தது யாந்தீரிக இயக்கம்தான்.

இயக்கம் பல வகைப்படும். அவற்றை முக்கியமாக ஐந்தாகப் பகுக்கலாம். ஒரு பொருள் இடம் பெயர்வதால் அல்லது சுற்றுவதால் ஏற்படும் இயக்கம் யாந்தீரிக இயக்கம் எனப்படும் வெப்பம், மின்சாரம், ஆகியவற்றால் பொருளில் ஏற்படும் இயக்கம் பெளதிக இயக்கம் எனப்படும். ரசாயன கிரியைகள் ஏற்படுகின்ற இயக்கம் ரசாயன இயக்கம்  ( Chemical Motion )  எனப்படும். ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்து தண்ணீர் ஏற்படுகின்றதே. இது ராசயன இயக்கமாகும். அடுத்து உயிர் உள்ள பொருள்களில் ஏற்படுகின்ற செல்கள்
சிதைவது தோன்றுவது ரத்தம் ஓடுவது போன்றவை உயிரியில் இயக்கமாகும். (Biological Motion) அடுத்து சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அடிப்படையான இயக்கம் சமூக இயக்கமாகும் (Social Motion)

இவ்வாறு உலகில் முக்கியமான ஐந்து வகை இயக்கங்கள் நிலவுகின்றன. இவற்றில் மிக எளிமையான இயக்கம் யாந்தீரிக இயக்கமாகும். மிகவும் சிக்கலான இயக்கம் சமூக இயக்கமாகும்.

இயக்கமானது பொருள் இருத்தலின் ஒரு வடிவம் 

இயக்கமற்ற பருப்பொருள் என்று ஒன்று இருக்கவே முடியாது ஒரு பருப்பொருளை எடுத்துக்கொள்வோம். அப்பொருள் மூலக்கூறுகளால் (Molucules) ஆனது. மூலக்கூறுகள் அணுக்களால்  (Atoms) ஆனது அணு என்பது என்ன? எலெக்ட்ரான், புரோட்டான் போன்ற சக்திகளின் இயக்கத்தின் கூட்டே அணு. எலக்ட்ரான், புரோட்டான் போன்ற சக்திகளின் இயக்கம் இல்லையென்றால் அணு என்பதே கிடையாது. எலக்ட்ரான், புரோட்டான் என்ற சக்திகளின் இயக்கம் இல்லாமல் அணு என்பதே இருக்கமுடியாது. எனவே அணு என்பதே இயக்கத்தில்தான் உள்ளது. எனவே அணுக்களால் ஆகிய பருப்பொருள் இயக்கத்தில்தான் உள்ளது. இயக்கமற்ற பருப்பொருளே இருக்க முடியாது.

எனவே இயக்கம் என்பதே பருப்பொருள் இருத்தலின் ஒரு வடிவமாகும். அதாவது இயக்கத்தில்தான் பருப்பொருள் உள்ளது.

எனவே உலகில் உயிரினங்களே தோன்றியிராத காலத்தில் கூட பருப்பொருள்கள் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. ஏனெனில் பருப்பொருட்கள் மூலக்கூறுகளையும் அணுக்களையும் கொண்டது. அணுக்கள் தொடர்ந்து இயக்கத்தில்தான் இருக்கின்றன. எனவே ஒரு போதும் இயக்கமற்ற பருப்பொருளே இருந்திருக்க முடியாது.

பருப்பொருளில் அணுக்கள் இருப்பதால், தொடர்ந்து அப்பொருள்களின் பெளதிக இயக்கமும் ரசாயன இயக்கமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தாக வேண்டும். அவ்வாறு நடைபெற்றதன் விளைவே உலகில் உயிருள்ள பருப்பொருள்கள் தோன்றின.

எனவே கடவுள் வாதிகளின் கூற்று இயக்கமற்ற பொருள் என்று  ஒன்று எப்போதுமே இருந்திருக்க முடியாது பொருள் இருத்தலின் வடிவமே இயக்கமாகும்.

ஒரு பொருளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றொரு இயக்கமாக மாற்றலாம். உதாரணமாக மின் காற்றாடியை (Fan) எடுத்துக்கொள்வோம் இங்கு முதலில் மின் சக்தியின் இயக்கம் அதாவது பௌதிக இயக்கம் நடைபெறுகிறது. பின் அம்மின் சக்தி காற்றாடியை சுழற்றும் யாந்தீரிக இயக்கமாக மாற்றப்படுகிறது. ரயில் என்ஜினை எடுத்துக் கொள்வோம். இங்கு வெப்பச்சக்தியாக மாற்றப்படுகிறது. அதாவது பௌதிக இயக்கம், யாந்தீரிக இயக்கமாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு பருப்பொருளில் நடைபெறுகின்ற ஒரு இயக்கத்தை மற்றொரு இயக்கமாக மாற்ற முடியும். ஆனால் ஒன்றுமேயில்லாததில் இருந்து, எந்த ஒரு இயக்கத்தையும் உருவாக்க முடியாது. இதுதான் விஞ்ஞான விதியாகும்.

எனவே கடவுள் வாதிகளின் கருத்துப்படி அனாதிகாலத்தில் இயக்கமற்ற பொருள் என்று ஒன்று இருந்திருந்தால், பின்னால் அந்த பொருளிள் இயக்கமே உருவாகியிருக்கமுடியாது.

இதிலிருந்து நாம் தெரிவது என்ன? இயக்கம் என்பது பருப்பொருளில் எப்போதுமே உள்ளது. இயக்கத்தைப் பருப்பொருளிலிருந்து பிரிக்கவே முடியாது. எனவே பொருளுக்கு இயக்கம் அளிக்க எந்தக் ’கடவுளும்’ தேவையில்லை.

பருப்பொருளும் ஓய்வும். 

பருப்பொருள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறது என்றால், அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா? அதாவது நிலைத்துவ நிலை என்ற ஒன்றே பொருளுக்கு கிடையாதா?

எல்லாப் பருப்பொருள்களுக்கும் ஒய்வு நிலை உண்டு. ஆனால் அது சார்புடையதே  (Relative) சார்புடையது என்றால் என்ன பொருள்? உதாரணமாக நாம் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறோம்  என்று கொள்வோம். அப்படியென்றால் நாம் ஓய்வு நிலையில் இருக்கின்றோம். ஆனால் பூமியைப் பொறுத்த மட்டில் தான் நாம் ஓய்வு நிலையில் உள்ளோம். ஏனென்றால் பூமி தொடர்ந்து சூரியனைச் சுற்றி வருகிறது. அதாவது இயக்கத்தில் உள்ளது. நாம் பூமியில் இருப்பதால், நாமும் பூமியுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றுகிறோம். அதாவது இயக்கத்தில் இருக்கிறோம். எனவே சூரியனைப் பொருத்தமட்டில் நாம் இயக்கத்தில்தான் இருக்கிறோம். ஆனால் பூமியைப் பொருத்தமட்டில் நாம் ஓய்வு நிலையில் இருக்கிறோம்.

நாம் பஸ் அல்லது ரயிலில் பிரயாணம் செய்வதாக எடுத்துக்கொள்வோம், பஸ்சை அல்லது ரயிலைப் பொறுத்த மட்டில் நாம் ஓய்வு நிலையில் இருக்கிறோம். ஆனால் பஸ் இயக்கத்தில் இருக்கிறது. எனவே பஸ் அல்லது ரயிலுடன் சேர்ந்து, பூமியைப் பொருத்த மட்டில் இயக்கத்தில் உள்ளோம்.

எனவே ஓய்வு நிலை என்பது சார்புடையதே. சார்பற்ற பரிபூரணமான ஓய்வு நிலை என்பது பருப்பொருள்களுக்கு கிடையாது. ஓய்வு நிலை என்பது பருப்பொருளுக்கு தற்காலிகமானதும் சார்புடையதும் ஆகும். ஆனால் இயக்கம் என்பதோ நிரந்தரமானது.

பருப்பொருளும் இடமும். (Matter And Space) 

எந்த ஒரு பருப்பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள் அது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொண்டுதான் இருக்கும். எல்லாப் பொருட்களுக்கும் அகலம், உயரம், தடிமன் உண்டு. எனவே எந்தப் பொருளையும் இடத்தில் இருந்து பிரிக்க முடியாது. ஏதாவது ஒரு  குறிப்பிட்ட இடத்தை அடைத்துக் கொண்டு தான் அது இருக்க வேண்டும்.

எனவே இடம் என்பது பொருள் இருத்தலின் ஒரு வடிவமேயாகும். எவ்வாறு இயக்கம் என்பது பொருள் இருத்தலின் ஒரு வடிவம் என்று கண்டோமோ அது போல இடம் என்பதும் பொருள் இருத்தலின் மற்றொரு வடிவமாகும்.

பருப்பொருளின் காலமும் (Matter And Time)

ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாக பிறக்கின்றான். அடுத்து இளைஞனாக வளர்கிறான். அடுத்து முதியவனாக ஆகிறான். அடுத்து இறக்கின்றான். இவ்வாறு பிறத்தல், வளர்த்தல் , இறத்தல் ஆகியவை ஒன்றின்பின்னொன்றாக தொடர்ந்து குறிப்பிட்ட காலங்களில் நிகழ்கிறது. பிறத்தலுக்கு அடுத்து வளர்தல் நடைபெறுகிறது. வளர்தலைத் தொடர்ந்து இறத்தல் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு.

சமுதாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் முதலில் புராதன சமுதாயமாக ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு நீடித்தது. பின் அடிமைச் சமுதாயமாக ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு நீடித்தது. அதைத் தொடர்ந்து நிலவுடமை சமுதாயமும், முதலாளித்துவ சமுதாயமும், சோசலிச சமுதாயமும், கம்யூனிச சமுதாயமும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் நடைபெறுகின்றன.

இதிலிருந்து தெரிவது என்ன? உலகத்தில் பருப்பொருள்களில் ஏற்படுகின்ற மாற்றங்களும் நிகழ்ச்சிகளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் நடைபெறுகின்றன. எனவே பருப்பொருளின் இயக்கத்தை அல்லது மாற்றங்கள் நிகழ்ச்சிகளைக் குறிக்கும்போது அவை நடைபெற்ற காலத்தையும் சேர்த்துத்தான் கூறவேண்டும்.

அதாவது பருப்பொருளானது காலத்தில்தான் இயங்குகிறது எனவே காலமும் பருப்பொருள் இருத்தலின் ஒரு வடிவமேயாகும்.

எனவே இடம், காலம் என்பவை பருப்பொருள் இருத்தலின் வடிவங்களே
இடத்திற்கும் காலத்திற்கும் உள்ள வேறுபாடு.........?

ஒரு பருப்பொருளின் இடத்தை நாம் எவ்வாறு கூறுகிறோம். அதாவது அப்பொருள் அடைத்துக்கொண்டிருக்கிற  இடத்தை எவ்வாறு விவரிக்கிறோம். அப்பொருள் அகலம், உயரம், தடிமன், ஆகியவற்றை கூறுவது மூலம் தான் இடத்தை விவரிக்கிறோம்.

அதாவது இடம், என்பது மூன்று அளவுகளை உடையது. இது தான் இடத்தின் முக்கிய பண்பாகும்.

காலம் என்றால் என்ன? பருப்பொருள்களில் ஏற்படுகின்ற மாற்றங்களின் வளர்ச்சியை வரிசையைக் குறிக்கிறது. உதாரணமாக ஒரு இளைஞனை எடுத்துக்கொள்வோம். அவன் குழந்தையாகப் பிறந்த நிகழ்ச்சி இறந்த காலத்தைச் சேர்ந்தது. இளைஞனாக வாழ்கின்ற நிகழ்ச்சி நிகழ்காலத்தை சேர்ந்தது. முதியவனாக  மாறுகின்ற நிகழ்ச்சி எதிர்காலத்தை சேர்ந்தது. அவன் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் நடக்கின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட திசையில் தான் முன்னோக்கி
நிகழ்கிறது, பின்னோக்கி திரும்பாது. உதாரணமாக இளைஞனாக வாழ்கின்ற நிகழ்விற்கு பின்னால் முதியவனாக வாழும் நிகழ்வுதான் வரமுடியுமே ஒழிய குழந்தை பிறத்தல் என்ற நிகழ்வை நோக்கி பின் நோக்கி திரும்ப முடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது.

காலத்திற்கு உள்ள முக்கிய பண்பு முன் நோக்கிச் செல்வதாகும். பின்னோக்கித் திரும்ப முடியாது என்பதேயாகும்.

ஒரு பொருளைக் குறிக்கும் போது அப் பொருள் அடைத்துக் கொண்டிருக்கின்ற இடத்தையும் அது நிலவுகின்ற காலத்தையும் சேர்த்துத்தான் கூற வேண்டும். எனவே எப்பொருளும் ஒரு குறிப்பிட்ட இடத்திலும், காலத்திலும்தான் உள்ளது. எனவே, இடத்திலிருந்து காலத்தைப் பிரிக்க முடியாது. நேற்று காலை சென்னையில் இருந்தேன்.நேற்று மாலையில் கும்பகோணத்தில் இருந்தேன்,  நேற்று இரவில் தஞ்சாவூரில் இருந்தேன் என்று தான் சொல்கிறோம்.  ஏனென்றால் நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட  காலத்தில் தான், நேரத்தில் தான் இருக்கிறேன் எனவே காலத்தை இடத்திலிருந்து பிரிக்க முடியாது. அதனால்தான் பஸ், ரயில் அட்டவணையில் இந்த பஸ் அல்லது ரயில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் புறப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

எனவே காலமும் இடமும் பிரிக்கமுடியாதவை இரண்டுமே பருப்பொருள் இருத்தலின் வடிவங்களாகும். எனவே அவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது போல பருப்பொருளிலிருந்தும் பிரிக்க முடியாது.
இடம் காலம் இரண்டும் புறவயமானவை.

பருப்பொருள் என்பது புறவயமானது அதாவது நமது சிந்தனைக்கு புறவயமாக நிற்பது என்று கண்டோம். இடம் காலம் இரண்டும் பருப்பொருள் இருத்தலின் வடிவங்கள் ஆதலால் அவையும் நமக்கு புறவயமானவையே.

இப்படி கூறுவதன் பொருள் என்ன?

இடம், காலம் என்பவை நாம் நினைப்பதால் தோன்றுகிறவை அல்ல. எல்லாப் பொருட்களும் குறிப்பிட்ட இடத்திலும், குறிப்பிட்ட காலத்திலும் இருப்பதால் இடம், காலம், என்பவை பொருள் இருத்தலின் வடிவங்களாக இருப்பதால் அவை நமக்கு புறவயமானவையே.

சார்பு நிலைக் கொள்கையும் காலம் இடமும்

ஒரு பொருள் மேலே இருக்கிறது அல்லது கீழே இருக்கிறது என்று கூறும்போது எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம்? உதாரணமாக ஒரு பலகையின் மீது மாங்காய் இருக்கிறது என்று கொள்வோம். மாங்காய் எங்கேயிருக்கிறது என்று கேட்டால் அதற்கு என்ன பதில் கிடைக்கும்? பலகையின் மேல் இருக்கிறது என்ற பதில் கிடைக்கும். பலகை எங்கேயிருக்கிறது என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? மாங்காயிற்கு கீழே இருக்கிறது என்ற பதில் கிடைக்கும். அதாவது ஒரு பொருளின் இடத்தைக் கூற மற்றொரு பொருளுடன் அதை சம்பந்தப்படுத்திக் கூறுகிறோம். அதாவது இந்தப் பொருளுக்கு அந்தப் பொருள் மேலேயிருக்கிறது அல்லது கீழேயிருக்கிறது  அல்லது வலது இடது புறத்தில் இருக்கிறது என்று கூறுகிறோம்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது வலது கைபக்கம் ஒரு வீடு இருக்கிறது என்று கொள்வோம். இப்போது வீடு எங்கேயிருக்கிறது என்று உங்களிடம் கேட்டால்

வலதுகைபக்கம் வீடு உள்ளது என்று சொல்வீர்கள். இப்போது நீங்கள் பின் பக்கம் திரும்பி நிற்கிறீர்கள் என்று கொள்வோம். இப்போது வீடு எங்கே உள்ளது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் இடது கைபக்கம் உள்ளது என்று சொல்வீர்கள். எனவே நீங்கள் எப்படி நிற்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் வலது இடது என்பது உள்ளது தெளிவாகிறது.

அடுத்து ஒரு கட்டிடத்தை எடுத்துக்கொள்வோம். அக்கட்டிடத்தை வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரிகிறது. அருகில் இருந்து பார்க்கும்போது பெரியதாக தெரிகிறது. எனவே அக்கட்டிடத்தின் அளவு நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்துதான் உள்ளது. பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு, ஓடாமல் நிற்கும் ரயிலின் அளவைக் கணக்கிடுவோம். பின் அந்த ரயில் வேகமாக ஓடும் போது நாம் அதே  பிளாட்பாரத்தில் நின்று கொண்டு பார்ப்போம். இரண்டு அளவுகளும் வேறுபடும். எந்த அளவு ரயிலின் உண்மையான அளவு?

அப்படி ஒரே உண்மையான அளவு என்பது கிடையாது. ரயில் அசையாமல் நிற்கும் போது அதன் அளவு இவ்வளவு, அது வேகமாக ஓடும்பொழுது  அதன் அளவு இவ்வளவு என்று தான் நம்மால் கூறமுடியும்.

எனவே இடம் என்பது சார்புத்தன்மையுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இடத்தைப் போல காலமும் சார்புடையதே. உதாரணமாக ஒரு ராக்கெட் வினாடிக்கு 2,40,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியில் செல்கிறது என்று கொள்வோம் அந்த ராக்கெட் விண்மீனை அடைய 50 ஆண்டுகள் ஆகிறது என்று நாம் பூமியிலிருந்து கணக்கிடுகிறோம் என்று கொள்வோம். ஆனால் ராக்கெட்டில் உள்ளவர்களுக்கு அவர்களை விண்மீனை அடையும் போது 30 ஆண்டுகளே ஆகியிருக்கும். அதற்குக் காரணம் ராக்கெட்டில் பயண நேரம் 10லிருந்து 6 என்னும் விகிதத்தில் குறுகிவிடும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? காலம் என்பது சார்புடையதே. ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இருக்கும்போது நிலவுகிற காலம், வேகம் மாறும்போது தானும் மாறுகிறது.

மேற்கண்ட ராக்கெட் உதாரணத்திற்கு எந்தக் கால அளவை விண்மீனை அடையத் தேவையான காலம் என்று கொள்வது? அப்படி எந்த ஒரு காலத்தையும் கணித்துக் கொள்ள முடியாது. பூமியில் இருந்து கணக்கிட்டால் 50 ஆண்டுகள் ஆகும், வினாடிக்கு 2,40,000 கி.மீ. வேகத்தில் செல்கின்ற ராக்கெட்டில் இருந்து கொண்டு கணக்கிட்டால் 30 ஆண்டுகள் இவ்வாறுதான் கூறமுடியும்.

எனவே காலம் இடம் இரண்டுமே சார்புடையதுதான். இந்த உண்மையை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி விஞ்ஞான பூர்வமாக தெளிவுபடுத்தினார்.

இடம், காலம் என்பவற்றிற்கும் ஆரம்பம், முடிவு என்பது கிடையாது. உலகத்தின் இடம் முடிவற்றது. உலகத்தின் காலம் வரம்பு அற்றது. எனவே உலகத்தின் எல்லை இதில் ஆரம்பித்து அதில் முடிகிறது என்று கூறுவது இயலாதது. அது போல உலகம் இந்த நேரத்தில் காலத்தில் தொடங்கி, அந்த நேரத்தில் காலத்தில் முடியும் என்று கூறவும் இயலாது இந்த உண்மைகளை தற்கால விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

இதுவரை நாம் அறிந்தது என்ன?

(1) பருப் பொருள் என்பது புறவயமாக நிலவுபவை. அது நிரந்தரத் தன்மை (eternal) உடையது. அதற்கு தொடக்கம், அழிவு என்பது கிடையாது.

(2) இயக்கம் என்பது பருப்பொருள் இருத்தலின் ஒரு வடிவம் இயக்கமற்ற பருப்பொருள் என்று ஒன்று இருக்க முடியாது.

3) இடம், காலம் என்பவையும், பருப்பொருள் இருத்தலின் வடிவங்கள். அவையும் புறவயமாக நிலவுபவையாகும். இடம் எல்லையற்றது. காலம் வரம்பற்றது. இடம், காலம், இரண்டுமே சார்புடையவை. இடத்திலிருந்து காலத்தையோ அல்லது காலத்திலிருந்து இடத்தையோ பிரிக்க முடியாது.

மார்க்சிய தத்துவம்
பருப்பொருளும் மனமும் ( 1 )
(Matter And Mind)

ஆன்மா என்ற சொல்லை நம்மிடையே பலர் அடிக்கடி பயன்படுத்துவதை கேட்கலாம். யாராவது ஒருவர் இறந்துவிட்டால் சிலர் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று  வேண்டுவதைப் பார்க்கலாம். வேறு பல  சூழ்நிலைகளிலும் இந்த ஆன்மா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்மா என்றால் என்ன? அதற்கும் உடலுக்கும் என்ன உறவு? இது தத்துவத்தில் மிக அடிப்படையான கேள்விகளாகும். இவற்றிற்கான விடைகளை அளிப்பதில் பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் எவ்வாறு மாறுபட்டு நிற்கின்றன என்பதை இக்கட்டுரையில் நாம் காணலாம்.

ஆத்மா பற்றி மூட நம்பிக்கைகள்

ஒருவன் தொடர்ந்து தீய செயல்களில் ஈடுபடுகிறான் என்று கொள்வோம் அவனைப் பற்றி ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் நீங்கள் கேளுங்கள் ஏன் அவன் அவ்வாறு தீயவனாக இருக்கிறான் என்று. அவர் என்ன கூறுவார் தெரியுமா? அவன் உடலில் கெட்ட  ஆன்மா: ஆவி குடிபுகுந்து இருக்கிறது என்று கூறுவார். அதனை விரட்டுவதற்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என்பார்.

இந்து மதக்காரர்களிடம் இது மாதிரியான மூட நம்பிக்கை உண்டா? உண்டு. பேய், பிசாசு பற்றிய அவர்களுடைய நம்பிக்கையை ஆராய்ந்து பாருங்கள். அது வெளிப்படும். ஒருவருக்கு உளநோய் ஏற்படுகிறது என்று கொள்வோம். அதனால் பாதிக்கப்பட்ட அவர் திடீரென்று எதிர்பாராத செயல்களில் ஈடுபடுவார் கூக்குரலிடுவார் மயக்கமும் அடைவார். உடனே சிலர் அவரிடம் பேய் அல்லது பிசாசு, ஆவி அல்லது ஆன்மா  புகுந்துவிட்டது என்ற கூறி மந்திரவாதிகளை அழைத்து வந்து இந்த கெட்ட ஆவியை செருப்பாலும்,
துடைப்பக்கட்டையாலும் அடிப்பார்கள். உடனேயே இந்த பேய் ஓடிவிடுமாம்.

யாராவது தற்கொலை செய்துகொண்டால் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் அவர் ஆன்மா பழிவாங்கும் நோக்கத்துடன் சுற்றி அலையும் என்றும் நம்பப்படுகிறது.

சில புராணக்கதைகளைப் படிக்கும்போதுதான் ஆன்மா பற்றிய சில மூட நம்பிக்கைகள் வெளிப்படும். எடுத்துக்காட்டாக விக்கிரமாதித்தன் கதையைக் கூறலாம். விக்கிரமாதித்தனால் உயிர் அல்லது ஆன்மா கூடு விட்டு கூடு பாயுமாம். (கூடு என்பது உடலைக் குறிக்கிறது). இன்னொரு உடலுக்கு மாறிச் செல்லக்கூடியதுமாகும். யாராவது இறந்தவுடன் அவருடைய உடலில் விக்கிரமாதித்தன் ஆன்மா புகுந்து கொண்டு அந்த உடலை இயக்கும். வெளிப்பார்வைக்கு அந்த உடல் விக்கிரமாதித்தனாக தெரியாது. ஆனால்
உண்மையில் அந்த உடலை இயக்குவது விக்கிரமாதித்தனின் ஆன்மாவே.
இவையெல்லாம் எந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன?
ஆன்மா என்பது உடலில் இருந்து பிரிந்து தனியே நிற்க கூடிய ஒரு பொருளாகும். அதுதான் உடலுக்கு உயிர்த்தன்மையை அளிக்கிறது. ஒருவரின் செயல்களுக்கு அவரது ஆன்மாவே அடிப்படை. ஒருவர் இறந்த பின்னும் அவர் ஆன்மா மட்டும்  இறக்காது. உடலை விட்:டு வெளியேறி புறமாக நிற்கும்.

மூடநம்பிக்கைகளின் தத்துவ வடிவம்

மேற்கண்ட மூடநம்பிக்கைகளின் தத்துவ வடிவமே கருத்து முதல்வாதம் ஆகும். அதை விரிவாக ஆராயலாம்.

ஆன்மா என்ற சொல்லும் மனம், சிந்தனை தன்னறிவு சொற்கள் எல்லாம் ஒரே பொருளைத்தான் தத்துவத்தில் குறிக்கின்றன.எனவே நாம் மனம் என்ற சொல்லையே இனி இக்கட்டுரையில் பயன்படுத்தலாம்.

கருத்து முதல்வாதம் கூறுவது என்ன?

1) உங்களுடைய மனம் உங்களுடன் உங்கள் உடலுடன் இணைந்தது என்றாலும் அது ஒரு வித்தியாசமான உங்கள் உடலில் இருந்து பிரிந்து நிற்கக் கூடிய ஒருபொருளாகும்.

2) உடல் என்பது பருப்பொருள் (Material Substance) ஆன்மா அல்லது மனம் என்பது ஆன்மப் பொருள் (Spiritual substance) உடல் என்ற பருப்பொருளுக்கு எடை, உருவம் போன்ற பண்புகள் உண்டு? மனம் என்ற ஆன்மப் பொருளுக்கு ஊனர்தல், சிந்தித்தல், விரும்புதல் போன்ற பண்புகள் உண்டு.  மனத்தின் பண்புகள் உடல் என்ற பருப்பொருளின் பண்புகளுடன் முற்றிலும் சம்பந்தப்படாதவை.

3) உங்கள் சிந்தனை உணர்ச்சி, விருப்பம், போன்றவை உங்கள் உடலில் இருந்து பிரிந்து தனித்து நிற்கக் கூடியது மனத்தின் பண்புகள், ஆகையால் அவற்றுக்கு எந்தவித பருப்பொருள் தன்மை வாய்ந்த அடிப்படையும் கிடையாது. அதாவது நீங்கள் ஒரு நல்ல திறமையான டாக்டர் என்றால் அதற்கு காரணம் நீங்கள் படித்த படிப்போ சூழ்நிலையோ காரணமல்ல. ஏதோ ஒரு மனமே காரணமாகும். அம்மனத்திற்கும் உங்கள் பருப்பொருளுக்கும் சம்பந்தமே கிடையாது.

4) மனம்தான் உடலுக்கு உயிர்தன்மை அளிக்கிறது உடலை இயக்குகிறது.உடல் உறுப்புகளை இயக்கிச் செயல்பட வைக்கிறது. மேலும் மனமானது புலச் செயற்பாடுகளுக்கு (Sensuous Activites) உடல் உறுப்புகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் சுத்த சிந்தனைச் செயல்களுக்கு (Intellectual Activities)  அது உடல் உறுப்புகளைப் பயன்படுத்தாது. அதாவது உங்களுக்கு பருப்பொருள் தன்மை வாய்ந்த தேவைகளை உணவு உடை போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய மனம் உங்கள் உடல் உறுப்புகளை பயன்படுத்துகிறது.

ஆனால் புத்தர் மகாவீரர் போன்ற முனிவர்கள் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களது மனம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தவில்லை. தானே மனமே அத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

மேற்கூறிய கருத்துமுதல்வாதக் கருத்துகள் விஞ்ஞானத்தின் உண்மைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் கருத்துமுதல்வாதத்தின் மனம் பற்றிய கொள்கையை அடியோடு மறுக்கிறது.
பொருள் முதல் வாதம் கூறுவது என்ன?

பொருள் முதல்வாதம் விஞ்ஞானத்தின் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. அது மனத்தைப் பற்றி கீழ்க்கண்ட உண்மைகளை கூறுகிறது.

1) மனம் என்பது உடலை விட்டுப்பிரிந்து நிற்க முடியாது. மனம் என்பதே பருப்பொருளின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு விளைபொருளே. பருப்பொருளில் இருந்து மனம் என்பது பிரிந்து தனித்து நிற்க முடியாது எனவே நீங்கள் இருந்தால்தான் உடல் இயங்கி கொண்டு இருந்தால் தான் உங்கள் மனமும் நீடிக்க முடியும் நீங்கள் இல்லையென்றால் உங்கள் மனமும் இல்லை.

2) மனத்தின் எல்லாச் சிந்தனை நடவடிக்கைகளுக்கும் புலன் உறுப்புகள், சிந்தனை உறுப்புகள் ஆகிய பருப்பொருள் தன்மை வாய்ந்த உடல் உறுப்புகளின் நடவடிக்கைகளே காரணம். எனவே உங்களுடைய சிந்தனைகளுக்கு மன நடவடிக்கைகளுக்கு பருப்பொருள் தன்மை வாய்ந்த காரணங்களை அறிய முடியும்.

3) உடல் இல்லாமல் மனம் நீடிக்க முடியாதென்று பொருள் முதல்வாதம் கூறுகிறதே ஒழிய மனம் என்பது இல்லையென்று அது கூறவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதே சமயத்தில் பருப்பொருளின் விளைபொருள்தான் மனம் என்பதே ஒழிய  மனத்தின் விளைபொருள் பருப்பொருள் அல்ல என்பதையும் கவனமாக மனதில் கொள்ளவேண்டும்.

மனத்தைப் பற்றிய பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் இவை இரண்டின் கருத்துகளில் எது சரியானது என்பதை விஞ்ஞானத்தின் துணை கொண்டு ஆராயலாம்.

விஞ்ஞானம் கூறுவது என்ன?

உலகில் முதலில் உயிரற்ற பொருள்களே நிலவின. பின்  அவற்றில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக அடிப்படை உயிர்ப் பொருள் தோன்றியது. பின் அந்த உயிர்ப்பொருளில் எற்பட்ட பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின்போது அவற்றில் நரம்பு மண்டலங்களும் பின் மத்திய நரம்பு மண்டலமும் மூளையும் தோன்றின. அப்போதுதான் உயிரினங்கள் உணர்வையும், தன்னறிவையும் (Conscious) பெறத்துவங்கின. மேற்கொண்டு மனித மூளையின் வளர்ச்சியை ஒட்டி சிந்தனை நிலை வளர்ச்சியடைந்தது. எனவே பருப்பொருளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்தான் அதன் உயர்ந்த வளர்ச்சியாக மூளையின் தோற்றத்தில்தான் மனம் என்பதே தோன்றியது.எனவே பருப்பொருளிலிருந்து மனத்தைப் பிரிப்பது என்பது இயலாது.மனம் என்பதே மூளையின் விளைபொருள். எனவே சிந்தனைச் செயல்பாடு ( Mental Activity ) என்பது மனித மூளையின் செயல்பாடே. சிந்தனைச் செயல்பாட்டை அறிய மனித மூளையின் செயல்பாட்டை அறிவது அவசியம்.

மனித மூளையின் செயல்பாடு மத்திய நரம்பு மண்டலத்தின் இயக்கத்தைச் சார்ந்தது. எனவே மனித மூளையின் செயல்பாட்டை அறிய மத்திய நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பாவ்லோவின் கண்டுபிடிப்பு

பாவ்லோ (Pavlov) என்ற சோவியத் விஞ்ஞானி நரம்பு மண்டலத்தின் செயல்களை ஆராய்ந்து சில புதிய உண்மைகளை கண்டுபிடித்தார்.

பாவ்லோவின் கண்டுபிடிப்புக்கு முன்னர் விஞ்ஞானிகள் நரம்பு மண்டலத்தின் வேலையானது உடலுக்குள் பல்வேறு உறுப்புகளின் செயல்களை ஒன்றிணைத்து  ஒழுங்குபடுத்துவது என்றுதான் நினைத்திருந்தனர். அதாவது நமது உடலின் இருதயம்,

நுரையீரல், இரப்பை சுரப்பிகள் போன்ற பல்வேறு உறுப்புகளின் வேலைகளைச் செய்கிறது அல்லவா! அந்த வேலையைச் செய்வது தான் மத்திய நரம்பு மண்டலத்தின் வேலை என்று நினைக்கப்பட்டது.

ஆனால் பாவ்லோவ் நரம்பு மண்டலத்தின் மற்றொரு முக்கிய வேலையைக் கண்டுபிடித்தார். ஒரு உயிரினத்தின் நரம்பு மண்டலமானது, அந்த உயிரினத்தின் உடலுக்குள் உள்ள உறுப்புகளின் வேலையை ஒழுங்குபடுத்துவதோடு அல்லாமல், அந்த மொத்த உயிரினத்திற்கும் அது வாழ்கின்ற புறவுலகத்திற்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. அவ்வாறு அந்த மொத்த உயிரினத்திற்கும் புறவுலகத்திற்கும் இடையில் உறவுகள் உருவாக்கப்பட்டு, ஒழுங்குப் படுத்தப்படுவதால் தான், அந்த உயிரினம் புறவுலகில் வாழ முடிகிறது. தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

அதாவது நரம்பு மண்டலமானது உங்களுக்கும் நீங்கள் வாழ்கின்ற புறவுலகிற்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தி, ஒழுங்குபடுத்துகிறது. அதனால் தான் அவ்வாறு உறவுகள் ஏற்படுவதால் தான், உங்களால் புறவுலகில் செயல்பட்டு வாழ முடிகிறது.

நரம்பு மண்டலம் எவ்வாறு உறவுகளை ஏற்படுத்துகிறது.

உங்கள் காலில் ஒரு எறும்பு கடிக்கிறது என்று கொள்வோம் உடனே உங்கள் கை அந்த எறும்பு இருக்கும் இடத்திற்குச் செல்கிறது. எறும்பை அகற்றுகிறது. உங்களுக்கு வெளிப்பார்வையில் இது ஒரு எளிமையான சிறு நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் எவ்வாறு உங்களுக்கே அந்த எறும்பை அகற்ற கை செல்கிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். அப்போது அந்த நடவடிக்கையின் சிக்கலான தன்மை வெளிப்படும்.

எறும்பு உங்கள் காலை கடிக்கும்போது அந்த கடிபடும் உணர்ச்சி கடிபட்ட இடத்தில் உள்ள நரம்புகளால் உங்கள் மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. உடனே மூளை கைகளுக்கு எறும்பை அகற்றும்படி கட்டளை இடுகிறது. மூளை தான் பெறுகிற ஒவ்வொரு தூண்டுதலுக்கும் ஒவ்வொரு பதிலை (Response) அளிக்கிறது.

எறும்புடன் உங்களுக்கு உள்ள உறவைத் தீர்மானித்து அதன் மீது நீங்கள் செயல்படுவது எதனால்?  உங்கள் மூளையால்.

இவ்வாறு புறவுலகம் உங்கள் உடலில் ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு தூண்டுதலுக்கும் உங்கள் உடல் மூளையின் உதவியால் ஒவ்வொரு பதிலை அளிக்கிறது. இதைத்தான் நாம் புறவுலகுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்று கூறுகிறோம். இவ்வாறு புறவுலகில் ஒவ்வொரு தூண்டுதலுக்கும் ஒவ்வொரு பதில் என்ற அடிப்படையில் நீங்கள் புறவுலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அதனால் உங்களால் உங்கள் புறவுலகின் மீது செயல்பட்டு உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. உங்களுக்கும் புறவுலகிற்கும் இடையில் உள்ள உறவுகள் எவ்வாறு தோன்றி வளர்கின்றன?

சில உறவுகளை மனிதன் தனது பரிணாம வளர்ச்சியின் போதே பெற்றுவிட்டான். அதாவது மனிதன் தான் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு புறவுலகில் செயல்பட்டு  அந்த உறவுகளை ஏற்படுத்தவில்லை. இப்படிப்பட்ட உறவுகளை அனிச்சை செயலை (Unconditional Reflex)  அடிப்படையாகக் கொண்ட உறவுகள் எனக் கூறலாம்.

அனிச்சை செயல் என்றால் என்ன? தூசி கண்ணில் விழும்போது உடனே கண் இமைகளை மூடிக்கொள்கிறதே அதுதான் அனிச்சை செயல். எறும்பு கடித்தவுடன் கைகள் எறும்பு கடித்த இடத்திற்கு செல்கிறதே அதுதான் அனிச்சை செயல். அதாவது புறவுலகப் பொருட்கள் நிகழ்ச்சிகளினால் தூண்டப்பட்டவுடனே தானாகவே உறுப்புகள் இயங்குவதை தான் அனிச்சை செயல் என்கிறோம்.

சில உறவுகளை நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையின் போது ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியராக வேலை பார்க்கிறீர்கள் என்று கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியில் மணி அடித்தவுடன் நீங்கள் வேலையைத் தொடங்குகிறீர்கள்.

இதை “இச்சை செயல்” (Conditional Reflex) என்று அழைக்கலாம். உங்களுக்கும் மணிச்சத்தத்திற்கும் இடையில் ஒரு உறவை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள். இது உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டது. இந்த உறவு மனித இனம் எல்லாவற்றிற்கும் பொதுவல்ல. அதாவது பள்ளி மணி அடித்தவுடன் வேலை,செய்யத் தொடங்க வேண்டும் என்பது பள்ளியின் வேலை பார்க்காதவர்களுக்குத் தேவை இல்லை. அது உங்கள் சம்பந்த பட்ட உறவு.

இச்சை செயலை அடிப்படையாக கொண்ட இந்த உறவு தற்காலிகமானது. உங்கள் பள்ளியில் மணியடிப்பதற்கு பதிலாக சங்கு ஊதுகிறார்கள் என்று கொள்வோம். அப்போது நீங்கள் மணிச் சத்ததுடன் ஏற்படுத்திய உறவை விட்டு விட்டு சங்குச் சத்ததுடன் உறவை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். இவ்வாறு மேற்கண்ட இரு செயல்களின் அடிப்படையில் அமைந்த உறவுகளை நீங்கள் புறவுலகத்துடன் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அவை மூலம் தான் நீங்கள் புறவுலகில் செயல்படமுடிந்தது.

இரு செயல்களுக்கும் அடிப்படை

மேற்கண்ட இரு செயல்களுக்கும் அடிப்படை மூளையில் (Brain) தான் இருக்கிறது. மூளையில் உணர்வு மையம் (Sensory Centre) இயக்கு மையம் (Motor Centre) என்ற இரண்டு மையங்கள்  உள்ளன. உணர்வு மையம் என்பது வெளியுலக செய்திகளை தூண்டுதல்களை நரம்புகள் மூலம் பெறுகிறது. இயக்கு மையம் என்பது அந்தச் செய்திகளுக்கு தகுந்த பதில்களை ( Response ) அனுப்புகிறது.

உங்கள் காலில் எறும்பு கடித்தவுடன் அந்த கடி உணர்வு தூண்டுதல் நரம்பு வழியாக மூளையின் உணர்வு மையத்தை அடைகிறது உணர்வு மையம் அந்த செய்தியை உடனே இயக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கிறது. செய்தியைப் பெற்றவுடன் இயக்கு மையம் தகுந்த பதிலை கைகளை எறும்பு கடித்த இடத்திற்கு உடனே செல்லும்படி கட்டளையிடுகிறது. உடனே உங்கள் கைகள் கட்டளையை ஏற்று எறும்பு இருக்கிற இடத்தை நோக்கிச் செல்கிறது.

மூளையில் உணர்வு மையத்தில் இருந்து தான் பெறுகின்ற ஒவ்வொரு குறிப்பிட்ட செய்திக்கும் தூண்டுதலுக்கும் இயக்கு மையம் ஒவ்வொரு குறிப்பிட்ட பதிலை அனுப்பி உறுப்புகளை இயங்கச் செய்கிறது. அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட தூண்டுதலுக்கும் மூளையில் உள்ள உணர்வு மையம் இயக்கு மையம் இரண்டுக்குள் ஒரு உறவு ஏற்படுகிறது. இந்த உறவுதான் உங்களுக்கும் புறவுலகிற்கும் ஏற்படுகின்ற உறவின் அடிப்படையாகும்.

சில குறிப்பிட்ட தூண்டுதல் சம்பந்தப்பட்ட மட்டில் உங்கள் மூளையில் உள்ள உணர்வு மையம் இயக்கு மையம் இடையில் உள்ள உறவுகள் உங்களது சொந்த வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அவை மனிதனின் பரிணாம வளர்ச்சியின் போதே ஏற்படுத்தப்பட்டுவிடுகின்றன. உதாரணமாக தூசி உங்கள் கண்களில் ஏற்படுத்துகின்ற தூண்டுதல் சம்பந்தப்பட்ட மட்டில் உங்கள் மூளையின் மையங்களுக்கு இடையே உள்ள உறவுகள் மனித பரிணாம வளர்ச்சியின் போதே ஏற்படுத்தப்பட்ட உறவாகும். எனவே
தான் பிறந்த குழந்தைகூட கண்ணில் தூசி பட்டவுடன் கண்களை மூடிக்கொள்கிறது. குழந்தையென்றாலும் சரி, கிழவன் என்றாலும் சரிதான் தூசியின் தூண்டுதலுக்கு மூளை ஒரே மாதிரியான பதிலைத்தான் தரும். அதாவது கண்களை உடனே மூடச் செய்யும். இப்படிப்பட்ட உறவுகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத்தான் முன்னால் அனிச்சைச் செயல் என்று கண்டோம்.

வேறு சில தூண்டுதல்களுக்கு உங்கள் மூளையில் மையங்களுக்கு இடையில் உள்ள உறவுகள் நீங்களே உங்கள் வாழ்க்கையின் போது உருவாக்கியவைதான். உதாரணம் முன்பு பள்ளி ஆசிரியர் தனக்கும் மணிக்கும் ஏற்படுத்திக்கொண்ட உறவைக் கண்டோமே. மணிச்சத்தம் அளிக்கின்ற தூண்டுதல், உணர்வு மையத்தின் வழியாக இயக்கு மையத்தை அடைந்தவுடன் இயக்குமையம் வேலை செய்யத் துவங்குங்கள் என்று கட்டளையை அனுப்புகிறதோ அது நீங்களே உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக்கொண்ட
உறவின் அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது மணிச்சத்தம் அளிக்கிற தூண்டுதல் பொறுத்து மட்டில் உங்கள் மூளையில் இரண்டு மையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள உறவு உங்கள் சொந்த வாழ்வின் போது மூளையில் ஏற்பட்டதுதான் இப்படிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் நடக்கிற செயல்களைத் தான் இச்சைச் செயல்கள் என்று நாம் முன்பு கண்டோம்.

இவ்வாறு உயிரினங்களின் மூளையில் உள்ள இரண்டு மையங்களுக்கும் இடையில் உள்ள உறவுகள் இரண்டு வகைப்பட்டன. ஒன்று உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின்போதே ஏற்பட்டவை. அவை நிரந்தரமானவை அந்த உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகின்ற செயல்கள் அனிச்சைச் செயல் எனப்படும். மற்றொன்று உயிரினங்கள் தங்கள் சொந்த வாழ்வின் போது ஏற்படுத்திக்கொண்ட உறவுகளாலும் அவை தற்காலிகமானவை அந்த உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகின்ற செயல்கள் இச்சைச் செயல் எனப்படும்.

எனவே எல்லா உயிரினங்களும் தங்களுடைய மத்திய நரம்பு மண்டலம், மூளை ஆகியவற்றின் உதவி கொண்டுதான் தாங்கள் வாழ்கின்ற புறவுலகத்துடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.

பாவ்லோ கூறியபடி நரம்பு மண்டலமானது ஒரு உயிரினத்தின் உடலுக்குள் உள்ள உறுப்புகளின் வேலைகளை ஒன்றிணைத்து ஒழுங்குபடுத்துவதோடு மட்டும் அல்லாமல் அந்த மொத்த உயிரினத்திற்கும் அதன் புறவுலகிற்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தி ஒழுங்கமைக்கிறது. அவ்வாறு உறவுகள் ஏற்படுவது மூலமாகத்தான் உயிரினங்கள் புறவுலகில் செயல்பட்டு தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது.

நரம்பு மண்டலத்தின் மேற்கூறிய இயக்கங்கள் தான் உயிரினத்தின் மனத்தின் தோற்றம் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதனை அடுத்த கட்டுரையில் காணலாம்.

மார்க்சிய தத்துவம்
பருப்பொருளும் மனமும் (Matter And Mind) ( 2 )

சென்ற கட்டுரையில் உயிரினத்தின் மனத்தின் (Mind) தோற்றம் வளர்ச்சிக்கு அடிப்படையான நரம்பு மண்டலத்தின் இயக்கம் பற்றி கண்டோம். இனி எவ்வாறு நரம்பு மண்டலத்தின் இயக்கத்தின் விளைவாக மனம் தோன்றி வளர்கிறது என்பதைக் காணலாம்.

சிந்தனைச் செயல்பாடு (Mental Activity)

சிந்தனைச் செயல்பாடு என்றால் என்ன? அது மூளையின் ஒரு செயலேயாகும். மூளை என்பதோ உயிரினத்திற்கும் புற உலகிற்கும் இடையே நிலவுகின்ற மிகச் சிக்கலான உறவுகளின் உறுப்பே ஆகும் என்று சென்ற கட்டுரையில் கண்டோம். எனவே சிந்தனைச் செயல்பாடானது மூளையின் ஒரு செயலே என்று கூறும்போது அது உயிரினமானது தன்னைப் புற உலகுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வழி செய்யும் செயல்பாடுகளின் ஒரு பகுதியே என்பது தெளிவாகிறது.

சிந்தனைச் செயல்பாட்டிற்கு அடிப்படை இச்சைச் செயல்களே ஆகும். இது எவ்வாறு என்பதை இனிக்காணலாம்.

புற உலகை உணர்த்தும் தூண்டுதல்கள்

ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் என்று கொள்வோம். திடீரென அவருக்குப் பின்னால் இருந்து ஹாரன் ஒலி கேட்கிறது என்று கொள்வோம். உடனே அவர் என்ன செய்கிறார். தனக்குப் பின்னால் ஏதோ ஒரு வாகனம் பஸ் அல்லது லாரி போன்ற வாகனம் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தன் செவியைப் பாதித்த ஹாரன் ஒலியை வாகனத்துடன் தொடர்பு படுத்துகிறார். இது ஒரு இச்சைச் செயல்தானே ஹாரன் ஒலிக்கு ஒரு பொருள் அர்த்தம் உள்ளதாக கொள்கிறார்.

ஹாரன் ஒலிக்கும் வாகனத்திற்கும் இடையில் உறவை நாம் தான் செயற்கையாக உருவாக்குகிறோம். அதன் அடிப்படையில் ஹாரன் ஒலிக்கு ஒரு பொருளை அர்த்தத்தை நாம்தான் அளிக்கிறோம்.

இவ்வாறு நமது புலன் உறுப்புகளைப் பாதிக்கும் பல்வேறு தூண்டுதல்களைப் பல்வேறு புற உலகக் பொருள்களுடன் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்துகிறோம். அதன் பயனாக அத் தூண்டுதல்களைக் கொண்டு அப்பொருட்களை நிகழ்வுகளை பிரித்தறிந்து

உணருகிறோம். ஒவ்வொரு தூண்டுதலும் ஒரு பொருள் அர்த்தம் உடையதாக நமக்கு ஆகுகிறது.

இவ்வாறு நம் புலன் உறுப்புகளில் மீது செயல்படும் புறஉலகத் தூண்டுதல்கள் நமக்கு அர்த்தம் உடையதாகத் தோன்றத் தொடங்குவதை ஒட்டித்தான் நமது சிந்தனை வாழ்க்கையும் தொடங்குகிறது.

நம்மைப் பாதிக்கின்ற புற உலகத்தூண்டுதல்கள் ஒவ்வொன்றுக்கும் நாம் தகுந்த பதிலை அளிக்கின்றோம். உதாரணமாக நமது செவியை ஹாரன் ஒலி பாதித்தவுடன் விலகி நின்று வாகனத்திற்கு வழி விடுகிறோம்.

மேற்கூறிய புற உலகத் தூண்டுதல்கள் நம்மிடமிருந்து குறிப்பிட்ட பதில்களைப் பெறும், வெறும் தூண்டுதல்களாக மட்டும்தான் இருக்கிறதா? இல்லை. அவை இன்னொரு முக்கியப் பாத்திரத்தையும் பெற்றுள்ளன. அவைதான் நமக்கும் புற உலகிற்கும்

இடையில் உள்ள உறவுகளைப் பிரதிபலிக்கிற அடையாள குறியீடுகளாகவும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக ஹாரன் ஒலி, நமக்கு வாகனத்தை உணர்த்தும் அடையாளக் குறியீடாக அமைகிறது.

புற உலகத் தூண்டுதல்கள் நமது புலன் உறுப்புகளைப் பாதித்தவுடன் தாமாகவே அவை நமக்கு பிற உலகத்தை உணர்த்திவிடுமா? இல்லை. நாமும் உணர்வு பூர்வமாகச் செயல்பட்டால்தான் அவை நமக்கு புற உலகத்தை உணர்த்தும் இதை நாம் பல இடங்களில் உணரலாம்.

உதாரணமாக முன் கண்ட எடுத்துக்காட்டையே பார்ப்போம்.தெருவில் நாம் செல்லும்போது நாம் எதையே தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டே போகிறோம் என்று கொள்வோம். நமக்கு பின்னால் ஒரு வாகனம்  ஹாரன் ஒலி  எழுப்புகிறது. ஆனால் நாம் அதற்கு வழி கொடுக்காமல் பேசாமல் சென்று கொண்டிருக்கிறோம் என்று கொள்வோம். உடனே வாகனத்து டிரைவர் நம்மைப் பார்த்து ஏனய்யா காது கேட்கவில்லையா? என்று திட்டுகிறார். ஏன் ஹாரன் ஒலி நமது செவியை பாதிக்கவில்லையா? பாதித்து, ஆனால் நாம் உணர்வு பூர்வமாக செயல்படவில்லை. எனவே தான் ஹாரன் ஒலி நமக்கு வாகனத்தை உணர்த்தும் அடையாளக் குறியீடாக பயன்படவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. புற உலகத்தை உணர்வதற்கு நாமும் உணர்வுபூர்வமாகச் செயல்பட்டால்தான் புற உலகத்தூண்டுதல்கள் நம் மீது செயல்பட்டு புற உலகத்தைப் உணர்த்தி நம்மைச் செயல்பட வைக்கிறது.

எனவே புற உலகத்தை உணர்த்துவது என்பது இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது. ஒன்று புற உலகத்தின் பல்வேறு அம்சங்களில் இருந்து ஒரு சில அம்சங்களைப் பிரித்துணர்ந்து அவைகளுக்குத் தகுந்த பதில்களை அளிப்பதாகும்.
உதாரணமாக நாம் பல ஒலிகளை கேட்கிறோம். ஒவ்வொரு ஒலியையும் பிற ஒலிக்கு பிரித்துணர்கிறோம். ஹாரன் ஒலியை பிற ஒலியிலிருந்து பிரித்துணரும்போது, அது வாகனத்தை உணர்த்தும் அடையாளக் குறியீடாக பயன்படுகிறது.
இரண்டாவதாக புற உலகின் பல்வேறு அம்சங்களுக்கு பல்வேறு பொருள்களை அர்த்தங்களை நாம் அளிக்கிறோம். அதாவது பல்வேறு அம்சங்களை பல்வேறு புறஉலகப் பொருட்களுடன் நிகழ்வுகளுடன் இணைக்கிறோம். உதாரணமாக ஹாரன் ஒலியை

வாகனத்துடன் இணைக்கிறோம். அதன் மூலம் ஹாரன் ஒலி ஒரு பொருள் உடையதாக நமக்கு ஆகிறது.

இதுவரை நாம் கண்டது என்ன? உயிரினங்கள் இச்சை செயல்கள் மூலமாகத்தான் தங்களது புற உலகை உணர்கின்றன. அதன் மீது செயல்படுகின்றன. இவ்விடத்தில் நாம் தெளிவாக ஒரு அம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். உயிரினங்கள் நேரடியாகப் பெறுவது புற உலகத்தூண்டுதல்களைத்தான். பிறகு அத் தூண்டுதல்களை உயிரினங்கள் அந்த நேரத்தில் தங்களை நேரடியாகப் பாதிக்காத பொருட்களுடன் நிகழ்வுடன் தொடர்பு படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக  முன் கண்ட எடுத்துக்காட்டில் நாம் நேரடியாக பெற்றது ஹாரன் ஒலி. அந்த ஒலியை நாம் பெறுகின்ற அந்த நேரத்தில் நேரடியாக நாம் அதனை ஒலிக்கின்ற வாகனத்தால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. இருப்பினும் நாம் ஹாரன் ஒலியை சம்பந்தப்பட்ட வாகனத்துடன் தொடர்பு படுத்துகிறோம்.

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் பல்வேறு எதிர்பார்ப்புகளை நம்மால் உருவாக்க முடிகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட தூண்டுதலைப் பெற்றவுடனேயே இந்த நிகழ்வு அடுத்து நடக்கும் என்று உணர்கிறோம். எதிர்பார்க்கிறோம் மேலும், இதனால் அனுபவங்களால் கற்றுக்கொள்ளும் சக்தியை அடைகிறோம். அதாவது இன்ன நிகழ்வுகள் நடக்கும் என்ற அனுபவ அறிவை அடைகிறோம்.

இவ்வாறு புற உலகத் தூண்டுதல் தரும் உயிரினங்களின் மத்திய நரம்பு மண்டலத்தின் இயக்கம் புலன் உறுப்புகள் ஆகியவைகளும் உயிரினங்கள்  புற உலகை உணரச் செய்கின்றன.

மனத்தின் தோற்றம் 

மேற்கண்ட நரம்பு மண்டலத்தின் இயக்கத்தின் பயனாய் மனம் தோன்றுகிறது. உயிரினங்கள் தாங்கள் பெறுகின்ற தூண்டுதல்களை புற உலகை உணர்த்தும் அடையாளக் குறியீடுகளாக பயன்படுத்த தொடங்கியவுடன் அந்த அடையாளக் குறியீடுகளுக்குத் தகுந்த வகையில் செயல் படத்தொடங்கியவுடன் உயிரினங்கள் ஒரு புதிய பண்பைப் பெறுகின்றன. அதுதான் மனம்.

இதிலிருந்து நாம் அறிவது என்ன? மனம் என்பது பருப்பொருளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தோன்றுகிறது. அதாவது மூளையின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றுகிறது. மனம் என்பது ஏதோ வெளியுலகத்தில் இருந்து யாரோ புகுத்தியது அல்ல. அது பருப் பொருள் வளர்ச்சியின் ஒரு விளைவே.

உணர்வு (Sensatiion)

நாம் சில சமயங்களில் அறிவுரைகளைக் குழந்தைகளுக்கு சொல்கிறோம். இதை இப்படிச் செய்ய வேண்டும். அதை அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். சில சமயம் குழந்தைகள் நாம் கூறியபடி சரியாகச் செய்யவில்லை என்றால் எத்தனை தடவை சொல்கிறேன் உணர்வு இருக்கிறதா உனக்கு? என்று திட்டுகிறோம்.

செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி நான் சொல்லியது ஆகிவிட்டதே என்றும் கூறுகிறோம். இவ்வாறு கூறுவதற்கெல்லாம் என்ன அடிப்படை நாம் கூறுகின்ற சொற்கள் குழந்தையின் செவியில் விழுகின்றன. அதாவது செவித்தூண்டுதலைப் பெறுகின்றன. ஆனால் அத்தூண்டுதலுக்கு தகுந்த பதிலை அக்குழந்தை தரவில்லை அவ்வாறு பதில் தராததால் உணர்வில்லையா என்று கேட்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? புலன்களை பாதித்த தூண்டுதல்கள் மூளையால் பெறப்பட்டு தகுந்த பதிலைத் தந்தால் உணர்வுள்ளதாக கருதுகிறோம். எனவே உணர்வு என்பது மூளையின் செயலால் உயிரினங்கள் அடைகின்ற ஒரு புதிய பண்பாகும்.

இந்த உணர்வுகள் தான் நமக்கும் புற உலகத்திற்கும் தகுந்த உறவுகளை உருவாக்குகின்றன. அதாவது அவைதான் அந்த உறவுகளைப் பாதிக்கின்ற அடையாளக் குறியீடுகளாகும்.

உணர்வு என்ற இந்த அடையாளக் குறியீட்டு அமைப்புதான் நமக்கும் புற உலகிற்கும் உள்ள புறவய உறவுகளைப் பிரதிபலிக்கும் அகவய அடையாள குறியீடுகளாகும்.

இந்த அடையாளக் குறியீட்டு அமைப்பை உயிரினங்கள் பெறுவதன் மூலமாகத்தான் புற உலகின் மீது செயல்படவும் அனுபவங்களைப் பெறவும் முடிகிறது.

இந்த அடையாளக் குறியீட்டு அமைப்பை விஞ்ஞானி பாவ்லோ முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பு (First Signal System) என்பார்.

புலன் அறிவு (Perception)

உயிரினங்களின் வளர்ச்சியிலே ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மேற்கண்ட உணர்வுகள் புலன் அறிவாக வளர்ச்சி அடைகின்றன.

உயிரினங்கள் உணர்வுகள் உதவிகொண்டு புற உலகில் உள்ள உறவை அறிகின்றன என்று கண்டோம். ஒரு கட்டத்தில் உயிரினங்கள் புற உலகத்தின் பொருள்களை, நிகழ்வுகளை தனித்தனியே அறிந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல் அவைகளை ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி அறியத் தொடங்குகின்றன. இது எவ்வாறு இயல்கிறது. தொடர்ந்து புற உலகில் தூண்டுதல்களால் செயல்பட்ட உயிரினம் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் இந்த சக்தியைப் பெறுகின்றன.

உணர்வுகளோ பார்வை அறிவாக வளர்கின்றன. இது வளர்ச்சியடைந்த உயிரினங்கள் பெறுகின்ற ஒரு புதிய பண்பாகும். இப்பண்பை உயிரினங்கள் உணர்வு என்ற முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பின் உதவியால் பெறுகின்றன.

பேச்சும் சிந்தனையும்

உணர்வு என்பது மனிதன் பிற உயிரினங்கள் இரண்டுக்கும் பொதுவான ஒன்று ஆனால் மனிதன் மேலும் ஒரு பண்பை பெற்றிருக்கிறான். அதுதான் பேச்சு.

பேச்சு என்பது உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சாதனமாகும். நாம் முன் கண்டபடி உணர்வு என்பது உயிரினங்கள் பெற்றுள்ள முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பு . பேச்சு என்பதோ மனிதன் மட்டும் பெற்றுள்ள மற்றொரு இரண்டாவது  அடையாளக் குறியீட்டு அமைப்பு .அதாவது முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பை வெளிப்படுத்துகின்ற இரண்டாவது அடையாளக் குறியீட்டு அமைப்பாகும்.

பேச்சு என்ற சாதனத்தை மனிதன் பெற்றுள்ள காரணத்தால் அவனால் உலகத்தின் பொதுவான பண்புகளை பிரித்தறிய முடிகிறது. புற உலகப் பொருள்கள் நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள பொதுவான உறவுகளைக் காண முடிகிறது. நேரடியாக ஒரு பொருளாக கண்முன் இல்லாமல் இருக்கும்போதே அதைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இதன் விளைவால் மனிதனின் மனம் மேலும் வளர்ச்சி அடைகிறது.

இவ்வாறு மனிதன் இரண்டு அடையாளக் குறியீட்டு அமைப்பை பெற்றிருப்பதால் அவனுடைய மன வளர்ச்சி உயர் நிலையை அடைந்திருக்கிறது.

பேச்சு என்ற சாதனத்தை மனிதன் தனது சமுதாய உற்பத்தி நடவடிக்கையின் போதுதான் பெற்றான் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

இதுவரை நாம் கண்டது என்ன?

1) மனம் என்பதின் தோற்றம் உயிரினங்களின் மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஒட்டி தோன்றியதே.

2) மூளையே மனம் என்பதன் தோற்றத்திற்கு அடிப்படையான உறுப்பாகும்.

3) நரம்பு மண்டலத்தின் உதவியால் தான் உயிரினங்களின் புற  உலகுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட முடிகிறது.

4) அனிச்சை செயல். இச்சைச் செயல் என்ற இரண்டின் மூலம் புற உலகுடன் உயிரினங்கள் செயல்பட்டு  உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறது

5) இச்சைச் செயல்களே உயிரினங்களின் சிந்தனை வாழ்க்கைக்கு அடிப்படை

6) உயிரினங்களின் புலன் உறுப்புகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்ற புற உலகத் தூண்டுதல்கள் மூளையின் நடவடிக்கையால் உணர்வுகளாக மாறுகின்றன. இந்த உணர்வுகள் உயிரினங்கள் புற உலகத்துடன் கொண்டுள்ள உறவுகளை பிரதிபலிக்கும் முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பாகும்.

7) மனிதன் முதல் குறியீட்டு அமைப்போடு பேச்சு என்ற இரண்டாவது அடையாளக் குறியீட்டு அமைப்பையும் தனது சமுதாய உற்பத்தியின் போது பெற்றுள்ளான். இதன் பயனாக அவனால் உயர்ந்த நிலை சிந்தனைகளை கருத்துகளை உருவாக்க முடிகிறது.

8) மொத்தத்தில் மனம் என்பது பருப்பொருள் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உயிரினங்களின் தோற்றத்தை ஒட்டி தோன்றியது. அது மேலும் உயிரினங்களின் மேற்கொண்டு வளர்ச்சியை ஒட்டி வளர்கிறது. மனிதனின் தோற்றத்தை ஒட்டி அது உயர் நிலையை அடைகிறது.

மேற்கண்ட ஆய்விலிருந்து தெளிவாக நாம் ஒரு முடிவிற்கு வரமுடியும். மனம் என்பது ஏதோ வெளி உலகத்திலிருந்து மனிதன் மீது திணிக்கப்பட்டதல்ல. அது பருப்பொருளின் வளர்ச்சியை ஒட்டி பருப்பொருளின் உயர் வடிவமான மூளையின் வளர்ச்சியை ஒட்டி தோன்றுகிற ஒன்றேயாகும். அதாவது பருப்பொருளின் விலைப் பொருளேயாகும்.

எனவே பருப்பொருளின் தோற்றத்திற்கு முன் மனம் என்ற ஒன்று இருந்திருக்கவே முடியாது. மேலும் மனம் என்பதை பருப்பொருளிலிருந்து தனியே பிரிக்கவும் முடியாது. அதாவது பருப்பொருளின்றி மனம் இல்லை.

எனவே பருப்பொருள் மனம் இரண்டுக்கும் இடையில் உள்ள உறவு பற்றி பொருள் முதல்வாதம் கூறுகின்ற தத்துவமே சரியானதாகும். விஞ்ஞான பூர்வமானதும் ஆகும். கருத்து முதல்வாதத்தின் தத்துவம் தவறானது விஞ்ஞானப் பூர்வமற்றது ஆகும்.
==============================

குறிப்பு: சமரன் அச்சுப்பதிப்பில் தொடர் வெளியீடாக வந்த மார்க்சிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதித் தொகுப்பு. நன்றி: சமரன்/கழகம்