Friday 16 October 2015

̒கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்தல் ’


 ̒கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்தல் ’
 அக்டோபர் 4, 1938
--------------------------------                                                       மாசேதுங்

 மையக்குழு உட்கட்சிப் பத்திரிகையொன்றை வெளியிடுவதற்கு நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது. கடைசியில் இப்போது அந்தத் திட்டம் உண்மையாக்கப்பட்டு விட்டது. தேசிய அளவிலானதும் பரந்த மக்கள் இயல்புள்ளதும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக உறுதிப்படுத்தப்பட்டதுமான போல்ஷெவியமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைப்பதற்கு இப்படிப்பட்ட வெளியீடு ஒன்று அவசியம். தற்போதைய நிலைமையில் இந்தத் தேவை மேலும் தெளிவாகத் தெரியக்கூடியதாயுள்ளது. தற்போதைய நிலைமையின் சிறப்புக் கூறுகள் பின்வருமாறு;

ஒருபுறம்,

ஜப்பானிய எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்குள் சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. மறுபுறம் எமது கட்சி தனது குறுகிய எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலான பெரிய கட்சியாகின்றது. சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களை வெற்றி கொள்ளவும் எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சிகளனைத்தையும் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்யவும் பொதுமக்களை அணி திரட்டுவதே கட்சியின் கடமையாகும்.

இதனால், எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சி நிகழ்ந்தாலும் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. இது போன்றதொரு சமயத்தில் ஒரு உட்கட்சிப் பத்திரிகை வெளியிடுவது உண்மையிலேயே மிக அவசியமானது.

இந்த உட்கட்சிப் பத்திரிகை   ̒கம்யூனிஸ்ட்  ’ என்றழைக்கப்படுகின்றது. அதன் கடமை என்ன? அது எதைப்பற்றி எழுதும்அது ஏனைய கட்சி வெளியீடுகளினின்றும் எவ்வகையில் வேறுபட்டதாயிருக்கும்?

 தேசிய அளவிலானதும் மக்கள் திரள் இயல்புள்ளதும், சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக உறுதிப்படுத்தப்பட்டதுமான போல்சிவியமான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்க உதவுவதே அதன் கடமையாகும்.

இப்படிப்பட்ட கட்சி ஒன்றைக் கட்டியமைப்பது சீனப்புரட்சியின் வெற்றிக்கு மிக அவசியம். மொத்தத்தில் அதற்குரிய அகநிலை நிலைமைகளும் புறநிலை நிலைமைகளும் இப்போதுள்ளன. இந்த மகத்தான திட்டம் உண்மையில் இப்பொழுது முன்னேற்றமடைகிறது. சாதாரண கட்சிப் பிரசுரம் ஒன்றின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இந்த மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதில் உதவுவதற்குத் தனிக்கட்சி வெளியீடொன்று அவசியம். ஆகவேதான், இப்போது ‘ கம்யூனிஸ்ட்’ வெளியிடப்படுகின்றது.

 எமது கட்சி ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தேசிய அளவினதாகவும் மக்கள் திரள் இயல்புடையதாகவுமிருக்கின்றது. அதன் தலைமை மையத்தையும் அதன் உறுப்பினரில் ஒரு குறிப்பிட்ட
பகுதியையும் அதன் பொது வழியையும் புரட்சி வேலையையும் பொறுத்தவரை அது ஏற்கெனவே சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட்டதும் போல்ஷெவியமானதுமான
ஒரு கட்சியாக இருக்கின்றது.

 அப்படியானால் இப்போது ஒரு புதுக்கடமையை முன் வைப்பது ஏன்?

 காரணம் என்னவென்றால், எமக்குத் தற்போது பல புதிய கிளைகளுள்ளன;  அவை பெருந்தொகையான புதிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளன;  அவை இன்னும் மக்கள் திரள் இயல்புடையனவாகவோ சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட்டனவாகவோ அன்றி போல்ஷெவியமானவையாகவே கருதப்படக் கூடியனவாயில்லை.

அதே வேளையில், பழைய கட்சி உறுப்பினர்களின் அரசியலறிவின் மட்டத்தை உயர்த்துவது, பழைய கட்சிக் கிளைகளைச் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் மேலும் நிலைப்படுத்துவது, அவற்றை மேலும் போல்சிவிச மயமாக்குவது என்ற பிரச்சனையும் இருக்கிறது. கட்சி எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் கட்சி தோள்கொடுக்கும் பொறுப்புகளும் புரட்சிகர உள்நாட்டு யுத்தக் காலத்திலிருந்தவற்றினின்றும் பெருமளவில் வேறுபட்டனவாயுள்ளன;  தற்போதைய சூழ்நிலைகள் முன்பைவிட மிக்க் கூடிய அளவு குழப்பமுடையனவாயும் பொறுப்புகள் மிகவும் சுமையானவையாயும் உள்ளன.

 இது தேசிய ஐக்கிய முன்னணிக் காலம், நாம் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருக்கின்றோம்;

இது ஜப்பானிய எதிர்ப்புப் போர்க்காலம், எமது கட்சியின் ஆயுதந்தாங்கிய சக்திகள் போர்முனையில் நேசப்படைகளுடன் சேர்ந்து எதிரிகளுடன் ஈவிரக்கமற்ற போரிலீடுபடுகின்றன. எமது கட்சி தேசிய அளவிலானதொரு பெரிய கட்சியாகிய காலம் இதுதான். அப்படியாகியதால்,எமது கட்சி இனிமேலும் முன்பிருந்தது போலிருக்காது.இவ்வம்சங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போமானால், நாமாகவே முன்வைத்த கடமை, அதாவது,
 
  “ தேசிய அளவிலானதும் வெகுசன இயல்புள்ளதும் சிந்தாந்த ரீதியிலும்  அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக நிலைப்படுத்தப்பட்டதுமான போல்ஷெவியமான சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்றினைக் கட்டியமைக்கும் ”  கடமை எவ்வளவு மேன்மையானதும் மதிப்பு வாய்ந்ததும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

 இவ்வகையான கட்சியொன்றை அமைப்பதற்கே இப்பொழுது நாம் விரும்புகின்றோம்.

ஆனால், அதற்கு எப்படி வேலை செய்யத் தொடங்க வேண்டும்?

எமது கட்சியின் வரலாற்றையும், அதன் பதினெட்டாண்டுக் காலப் போராட்ட வரலாற்றையும் ஆராயாது இந்தக் கேள்விக்கு எம்மால் விடை கூற முடியாது.
 1921 இல் நடந்த எமது முதலாவது தேசிய மாநாடு முதல் இன்றுவரை எமது கட்சியின் வரலாற்றுக் காலம் முற்றாகப் பதினெட்டு ஆண்டுகளாகி விட்டது. இந்த பதினெட்டு ஆண்டுகளில் எமது கட்சி பல மகத்தான போராட்டங்களுக் கூடாகச் சென்றிருக்கிறது. கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஊழியர்களும் அமைப்புகளும் இந்த மகத்தான போராட்டங்களில் புடம் போட்டு எடுக்கப்பட்டுள்ளனர், அவர்கள் புரட்சியில் மகத்தான வெற்றிகளையும் துயரார்ந்த தோல்விகளையும் அனுபவித்தனர். இந்தக் கட்சி, பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை நிறுவியது. பின்னர் இந்த தேசிய ஐக்கிய முன்னணி தகர்ந்ததனால் பெரும் பூர்ஷ்வா வர்க்கத்துடனும் அதன் கூட்டாளிகளுடனும் ஒரு கசப்பான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.

கடந்த மூன்றாண்டுக் காலத்தில், அது பூர்ஷ்வா வர்க்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணிக் காலத்திற்குள் திரும்பவும் நுழைந்திருக்கின்றது.

சீனப் பூர்ஷ்வா வர்க்கத்துடனுள்ள இவ்வகையான சிக்கலான தொடர்பு மூலந்தான் சீனப் புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும் தம் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்திருக்கின்றன. இது ஒரு சிறப்பான வரலாற்று அம்சம். காலனிய அரைக்காலனிய நாடுகளிலுள்ள புரட்சிக்குச் சிறப்பான, எந்த முதலாளித்துவ நாட்டுப் புரட்சி வரலாற்றிலும் காணமுடியாத்தோர் தனி வரலாற்று அம்சம்.

மேலும் சீனா ஓர் அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனாலும் அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகள் சமச்சீராக இல்லாததனாலும் அதன் பொருளாதாரம் பிரதானமாக அரைநிலப்பிரபுத்துவமாகவும் அதன் பரப்பு பரந்த அளவிலும் இருப்பதனாலும் இந்தக் கட்டத்தில் சீனப் புரட்சி, இயல்பில் பூர்ஷ்வா வர்க்க ஜனநாயகப் புரட்சியாக உள்ளது,

அதன் முதன்மை இலக்குகள் ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமாகவும் அதன் அடிப்படை உந்து சக்திகள் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் நகரக் குட்டி முதலாளிய வர்க்கமுமாகவும் உள்ளன. இதில் தேசிய பூர்ஷ்வா வர்க்கமும் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு பங்கெடுக்கும்.

 அத்துடன் சீனப்புரட்சியின் முதன்மையான போராட்ட வடிவம் ஆயுதப்போராட்டமாகவும் இருக்கிறது. உண்மையில், எமது கட்சி வரலாறு ஆயுத போராட்ட வரலாறு என்று கூறப்படலாம்.

 “ சீனாவில் ஆயுதந்தாங்கிய புரட்சி ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிடுகின்றது. அது சீனப்புரட்சியின் தனிச்சிறப்புக் கூறுகளிலொன்றாகவும் அதன் மேம்பாடுகளிலொன்றாகவும் இருக்கின்றது.”
 எனத் தோழர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது முற்றிலும் உண்மையானது.

அரைக்காலனிய சீனாவிற்கே சிறப்பாக உரிய இந்த அம்சம் முதலாளிய நாடுகளில் பொதுவுடைமைக் கட்சிகளால் தலைமை தாங்கப்பட்ட புரட்சிகளின் வரலாற்றில் காணப்படவேயில்லை, அல்லது அது அந்த நாடுகளில் இருப்பவற்றிலிருந்து வேறுபட்டதாயுள்ளது. ஆகவே, சீனப் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியில் இரண்டு தனி அடிப்படைக் கூறுகள்:-

பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஒன்றிப் புரட்சிகரத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றை நிறுவுகின்றது, அல்லது அதைத் தகர்க்க நிர்பந்திக்கப்படுகின்றத பூர்ஷ்வா வர்க்கத்துடனும் உள்ள உறவுகளை அடிப்படையான தனிச் சிறப்புக் கூறாக நாம் குறிப்பிடவில்லை. ஏனென்றால்

முதலாவதாக, இந்த உறவுகள் கோட்பாட்டு ரீதியில் உலகெங்குமுள்ள பொதுவுடைமைக் கட்சிகளை எதிர் நோக்கியவை போன்றவை.

இரண்டாவதாக, சீனாவிலுள்ள ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லப் போனால் அது சாராம்சத்தில் விவசாயி யுத்தமாக இருக்கிறது;

கட்சிக்கும் விவசாயிகளுக்குமிடையிலுள்ள உறவுகளைப் பற்றிக் கூறின் அவை கட்சிக்கும் விவசாயி யுத்தத்திற்குமிடையிலுள்ள நெருங்கிய உறவுகளாக இருக்கின்றன.இந்த இரண்டு அடிப்படைத் தனிச்சிறப்புக் கூறுகளின் காரணமாகவே, உண்மையில் அவற்றின் காரணமாகவே தான் எமது கட்சியின் அமைப்பும் போல்ஷெவியமயமாக்கமும் தனிச் சூழ்நிலைகளில் முன்னேறுகின்றன. கட்சியின் தோல்விகள் அல்லது வெற்றிகள், அதன் பின்னடைவுகள் அல்லது முன்னேற்றங்கள், அதன் சுருக்கங்கள் அல்லது விரிவுகள், அதன் வளர்ச்சி, உறுதிப்பாடு ஆகியன பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் கட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் இடையிலுள்ள உறவுகளுடன் தவிர்க்கப்பட முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன. பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பது அல்லது அதைத் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றபோது அதைத் தகர்ப்பது என்ற பிரச்சனையில் சரியான அரசியல் வழி ஒன்றைக் கைக்கொள்ளும் போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவியமயமாக்கத்திலும் ஒருபடி முன்னேறுகின்றது;  ஆனால், பூர்ஷ்வா வர்க்கத்துடனுள்ள உறவுகளில் தவறான வழி ஒன்றைக் கைக்கொள்ளும் போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவியமயமாக்கத்திலும் ஒருபடி பின்னேறுகின்றது.

 அதுபோலவே, எமது கட்சி புரட்சிகர ஆயுதப் போராட்டப் பிரச்சனையைச் சரியான முறையில் கையாளும்போது தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவிய மயமாக்கத்திலும் ஒருபடி முன்னேறுகிறது;  ஆனால், அந்தப் பிரச்சனையைத் தவறாக கையாளும்போது அது ஒருபடி பின்னேறுகிறது. இவ்வாறு பதினெட்டு ஆண்டுகளாக, கட்சியின் அமைப்பும் போல்ஷெவியமயமாக்கமும் அதன் அரசியல் வழியுடன் ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளைச் சரியாக அல்லது தவறாகக் கையாள்வதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு எமது கட்சியின் பதினெட்டாண்டுக் கால வரலாற்றில் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. வேறு விதமாகக் கூறின் கட்சி எவ்வளவிற்குப் போல்ஷெவியமயமாகின்றதோ, அவ்வளவிற்குத் தனது அரசியல் வழியைச் சரியாகத் தீர்மானிக்கவும் ஐக்கிய முன்னணி-ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளைச் சரியாகக் கையாளவும் முடியும். இந்த முடிவும் எமது கட்சியின் பதினெட்டாண்டுக் கால வரலாற்றாலேயே தெளிவாக
நிரூபிக்கப்படுகின்றது.

 ஆகவே, ஐக்கிய முன்னணியும் ஆயுதப்  போராட்டமும் கட்சி அமைப்புமே சீனப்புரட்சியில் எமது கட்சியின் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாக இருக்கின்றன. இந்த மூன்று பிரச்சனைகளையும் அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளையும் சரியாக உள்வாங்கிக் கொள்வது சீனப்புரட்சி முழுவதற்கும் தகுந்த தலைமை அளிப்பதற்குச் சமமாகும். எமது கட்சியின் பதினெட்டாண்டுக் கால வரலாற்றில் பெற்ற எமது செழிப்பான அனுபவத்தினால், தோல்வி வெற்றிகளினதும் பின்னேற்ற முன்னேற்றங்களினதும் சுருக்க விரிவுகளினதும் ஆழமான செழுமைமிக்க எமது அனுபவத்தினால் நாம் இந்த மூன்று பிரச்சினைகளையும் பொறுத்தவரை இப்பொழுது சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாயிருக்கிறோம். அதாவது, நாம் இப்பொழுது ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு ஆகிய பிரச்சனைகளைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களாயிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறின், கட்சியின் மூன்று 'மந்திர ஆயுதங்கள்'. சீனப்புரட்சியில் எதிரியைத் தோற்கடிப்பதற்கான அதன் மூன்று முக்கிய மந்திர ஆயுதங்கள் என எமது பதினெட்டாண்டுக் கால அனுபவம் எமக்குக் கற்பித்திருக்கின்றது.

 இது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மகத்தான சாதனை; இது சீனப் புரட்சியின் மகத்தான சாதனையுமாகும். மூன்று மந்திர ஆயுதங்களில் ஒவ்வொன்றையும், மூன்று பிரச்சனைகளில் ஒவ்வொன்றையும் இங்கே சுருக்கமாக ஆராய்வோம். பூர்ஷ்வா வர்க்கத்துடனும் பிறவர்க்கத்துடனும் சீனப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ள ஐக்கிய முன்னணி கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில் மூன்று வேறுபட்ட காலகட்டங்களுக்கூடாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதாவது, 1924 ஆம் ஆண்டுக்கும் 1927 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட முதலாவது மாபெரும் புரட்சி 1927 ஆம் ஆண்டுக்கும் 1937 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட நிலப்புரட்சிப்போர் தற்போதைய ஜப்பானிய எதிர்ப்பு போர். இந்த மூன்று கட்டங்களினதும் வரலாறு பின்வரும் நியதிகளை நிரூபித்திருக்கின்றது:

சீனா உட்படுத்தப்பட்டுள்ளதான அந்நிய அடக்குமுறை அடக்குமுறைகளிலெல்லாம் மிகப் பெரியதாய் இருப்பதன் காரணமாக, சீனத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவ யுத்தப்
பிரபுகளுக்குமெதிரான போராட்த்தில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவிற்குப் பங்குபெறும். ஆகவே, அப்படிப்பட்ட சமயங்களில் பாட்டாளிவர்க்கம் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய
முன்னணியொன்றை அமைத்து அதை இயலுமானவரை நிலைநிறுத்த வேண்டும்.

சீனத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் தன் பொருளாதார அரசியல் உறுதிப்பாடின்மை காரணமாக, பிற சரித்திர சூழ்நிலைகளில் ஊசலாட்டமும் மாறும் இயல்பும் உள்ளதாகும். ஆகவே சீனாவின் புரட்சிகர ஐக்கிய
முன்னணியின் அமைப்பு தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இராததோடு மாறக் கூடியதாயுமிருக்கின்றது. தேசிய பூர்ஷ்வா வர்க்கம் ஒரு காலத்தில் அதில் பங்கு ஏற்கலாம். இன்னொரு காலத்தில் பங்கு ஏற்காமலிருக்கலாம்.

தரகு முதலாளியத் தன்மையுடைய சீனப் பெரும் பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாகச் சேவை செய்து, அதனால் ஊட்டி வளர்க்கப்படும் வர்க்கம். இதனால் தரகு முதலாளியத் தன்மையுடைய சீனப்
பெரும் பூர்ஷ்வா எப்பொழுதும் புரட்சியின் இலக்காக இருந்து வருகின்றது. இருப்பினும், இந்தப் பெரும் பூர்ஷ்வா வர்க்கத்திற்குளுள்ள வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகவே, இந்த ஏகாதிபத்தியங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையும் போதும் புரட்சியின் முனை குறிப்பிட்ட ஏகாதிபத்தியமொன்றிற்கெதிராகப் பிரதானமாக நீட்டப்படும் பொழுதும் பிற ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருக்கும் இப்பெரும் பூர்ஷ்வா வர்க்க் கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற் கெதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்குச் சேரலாம். அப்படிப்பட்ட சமயங்களில் எதிரியைப் பலவீனப்படுத்தவும் தனது சொந்தச் சேமிப்புச் சக்தியைப் பலப்படுத்தவும் சீனப் பாட்டாளி வர்க்கம் இந்தப் பெரும் பூர்ஷ்வா வர்க்கக் கும்பல்களுடன்
சாத்தியமான ஐக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்தலாம். அத்துடன் அது புரட்சிக்குச் சாதகமாயிருக்கும்வரை அதை இயலுமான அளவு நிலைநிறுத்தவும் வேண்டும்.

தரகு முதலாளித்துவத் தன்மையுடைய பெரும் பூர்ஷ்வா வர்க்கம் ஐக்கிய முன்னணியில் சேர்ந்து பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடும்போதும் அது தொடர்ந்து மிகவும்
பிற்போக்கானதாகவேயிருக்கிறது. அது பாட்டாளி வர்க்கத்தினதும் பாட்டாளி வர்க்கக் கட்சியினதும் சிந்தாந்த, அரசியல், அமைப்பு ரீதிகளிலான எந்த வளர்ச்சியையும் பிடிவாதமாக எதிர்க்கிறது. அவற்றிற்குக்
கட்டுபாடுகள் விதிக்க முயல்கிறது. வஞ்சகம், முகஸ்துதி, “ அரித்தல்”, தாக்குதல்கள் போன்ற சீர்குலைக்கக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றது. மேலும், எதிரிகளிடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைப் பிளவுபடுத்துவதற்கும் தயார் செய்வதற்காகவே இவற்றையெல்லாம் செய்கிறது.

விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான நேச அணியாவர்.

நகரக் குட்டி பூர்ஷ்வா வர்க்கமும் ஒரு நம்பகமான நேச அணியாகும்.

 இந்த நியதிகள் சரியானவை என்பது முதலாம் மாபெரும் புரட்சியின் போதும் நிலப்புரட்சியின் போதும் நிரூபிக்கப்பட்டது மாத்திரமல்ல அது தற்போதைய ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போதும் திரும்பவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே பூர்ஷ்வா வர்க்கத்துடன் (சிறப்பாக பெரும் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ) ஐக்கிய முன்னணியை அமைப்பதில் பாட்டாளிவர்க்க அரசியல் கட்சி இரண்டு முன்னணிகளில் திடமான கடுமையான போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். ஒருபுறம் பூர்ஷ்வா வர்க்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலும் புரட்சிகரப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்ற
சாத்தியப்பாட்டை அலட்சியம் செய்யும் தவற்றை எதிர்த்துப் போரிடுவது அவசியம்.

 இந்தத் தவறு சீனாவிலுள்ள பூர்ஷ்வா வர்க்கத்தை முதலாளிய நாடுகளிலுள்ளவற்றைப் போல் கருதி பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றினை உருவாக்கி அதை இயலுமான அளவிற்கு
நிலைநிறுத்தும் கொள்கையை அலட்சியம் செய்வதில் அமைந்துள்ளது. இது “ இடதுசாரிக் கதவடைப்புவாதமாகும்”.  மறுபுறம் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம், கொள்கை, சிந்தாந்தம், நடைமுறை இன்னோரன்ன பிறவற்றை பூர்ஷ்வா வர்க்கத்தினுடையனவற்றைப் போல் கருதி, இவற்றிற்கிடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளை அலட்சியம் செய்வது என்ற தவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியம். இந்தத் தவறு பூர்ஷ்வா வர்க்கம் (சிறப்பாக பெரும் பூர்ஷ்வா வர்க்கம் ) குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் மீதும் விவசாயிகள் மீதும் தன் செல்வாக்கைத் தீவிரமாகச் செலுத்துவது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்கத்தின் மீதும் பொதுவுடைமைக் கட்சியின் மீதும் தன் செல்வாக்கைச் செலுத்தி பாட்டாளி வர்க்கத்தினதும் பொதுவுடைமைக் கட்சியினதும் சிந்தாந்த, அரசியல், அமைப்பு சுதந்திரத்தை அழிப்பதற்கும் அவற்றை பூர்ஷ்வா வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் தொங்குதசையாக மாற்றுவதற்கும் தானோ, தன் அரசியல் கட்சியோ தனியாகப் புரட்சியின் கனிகளை அறுவடை செய்வதற்கும் தன்னாலியன்ற மட்டும் முயலும் என்ற உண்மையை அலட்சியம் செய்வதில் அமைந்திருக்கிறது. அத்துடன் பூர்ஷ்வா வர்க்கம் ( சிறப்பாகப் பெரும் பூர்ஷ்வா வர்க்கம் ) தன் சொந்தச் சுயநலன்களுடனோ, தன்
சொந்த அரசியல் கட்சியின் சுயநலன்களுடனோ புரட்சி மோதும்போது புரட்சிக்குத் துரோகம் செய்யும் என்பதை அலட்சியம் செய்வதிலும் இந்தத்தவறு அமைந்திருக்கின்றது.

 இவற்றையெல்லாம் அலட்சியம் செய்வது “ வலதுசாரிச் சந்தர்ப்பவாதமாகும்”.  முன்பு சென்து-சியு-வின் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தின் தனி அம்சம் என்னவென்றால், பூர்ஷ்வா வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் சுயநலன்களுக்கு இசைவாகப் பாட்டாளி வர்க்கத்தை வழிநடத்திச் சென்றதேயாகும். இது முதலாவது மாபெரும் புரட்சியின் தோல்வியின் அகநிலைக் காரணமாகவும் இருந்தது. பூர்ஷ்வா
வர்க்க ஜனநாயகப் புரட்சியில் சீனப்பூர்ஷ்வா வர்க்கத்தின் இந்த இரட்டைத் தன்மை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் வழிக்கும் கட்சி அமைப்பிற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.

 இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் வழியையும் கட்சி அமைப்பையும் புரிந்து கொள்ள முடியாது. பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதோடு அதற்கெதிராகப் போராடுவது என்ற கொள்கை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் வழியின் ஒரு முக்கிய பகுதியாகும். உண்மையில், பூர்ஷ்வா வர்க்கத்துடனுள்ள ஐக்கியத்திற்கும் போராட்டத்திற்கும் ஊடாக ஏற்படும் கட்சியின் வளர்ச்சியும் புடமிடப்படுதலும் கட்சி அமைப்பின் முக்கிய பகுதியாகும். ஐக்கியமென்பது இங்கு பூர்ஷ்வா வர்க்கத்துடனான ஐக்கிய முன்னணியைக் குறிக்கிறது,

போராட்டம் என்பது இங்கு நாம் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கியமுடையவராயிருக்கையில் இருக்கும் “ சமாதான ” மான , “ ரத்தம் சிந்தாத ” சிந்தாந்த, அரசியல், அமைப்பு ரீதிகளிலான போராட்டத்தைக்
குறிக்கிறது. நாம் அதனுடன் பிளவுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்பொழுது அது ஆயுதப் போராட்டமாக மாறும்.

 குறிப்பிட்ட சமயத்தில் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டுமென்பதை எமது கட்சி உணர்ந்து கொள்ளாவிட்டால் அதனால் முன்னேற முடியாது. புரட்சியும் வளர்ச்சியடைய முடியாது. பூர்ஷ்வா
வர்க்கத்துடன் ஐக்கியமுடையதாயிருக்கும் போது அதனுடன் திடமான, கடுமையான, “ சமாதான ” மான போராட்டம் நடத்த வேண்டுமென்பதை எமது கட்சி உணராவிட்டால் எமது கட்சி சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் சிதைவுறும்;  புரட்சியும் தோல்வியடையும். பூர்ஷ்வா வர்க்கத்துடன் பிளவுபட நிர்பந்திக்கப்படும் போது எமது கட்சி திடமான, கடுமையான ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தாவிட்டாலும் அது சிதைவுறும்;  புரட்சியும் தோல்வியடையும். இந்த உண்மைகளெல்லாம் கடந்த பதினெட்டாண்டுக் கால வரலாற்றால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஆயுதப் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயப் போர் ஆகும். இந்த ஆயுதப் போராட்டத்தின் வரலாறும் மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதலாவது காலகட்டத்தில் நாம் வடபடையெடுப்பில் ஈடுபட்டோம்;  அக்காலத்தில் எமது கட்சி ஏற்கெனவே ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருந்தது. ஆனால், அதை அப்போது முற்றாகப் புரிந்து கொள்ளவில்லை;  ஆயுதப் போராட்டம் சீனப்புரட்சியின் முதன்மையான போராட்டவடிவம் என்பதை அது அப்போது புரிந்துக் கொள்ளவில்லை.

இரண்டாவது காலகட்டம்

நிலப்புரட்சி போர், அந்தக் காலத்தில் எமது கட்சி தன் சொந்த ஆயுதப் படையை ஏற்கெனவே கட்டியமைத்திருந்தது, தனக்கேயுரிய போர்க்கலையைக் கற்றுக் கொண்டது. அத்துடன் மக்கள் அரசியல் அதிகாரத்தையும் தளப் பிரதேசங்களையும் நிறுவியது. எமது கட்சி பிரதான போராட்ட வடிவமாகிய ஆயுதப் போராட்டத்தை இதர பல அவசிமுமான போராட்ட வடிவங்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக இணைக்க இயலுமானதாயிருந்தது. அதாவது அதனைத் தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் ( இதுதான் தலையாயது ) இளைஞர், பெண்கள், மக்களின் ஏனைய பிரிவுகள் அனைத்தினதும் போராட்டங்கள், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம், பொருளாதார, தேசத்துரோகி எதிர்ப்பு, சிந்தாந்தத் துறைகளிலுள்ள போராட்டங்கள் இதர போராட்ட வடிவங்கள் ஆகியவற்றுடன் தேசிய ரீதியில்
நேரடியாக அல்லது மறைமுகமாக இணைப்பதற்கு இயலுமானதாயிருந்தது. அத்துடன் இந்த ஆயுதப் போராட்டம் உண்மையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாய நிலப்புரட்சி போராட்டமாகவும் இருந்தது.

மூன்றாவது காலகட்டம்

தற்போதைய ஜப்பானிய-எதிர்ப்புப் போர்க் காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் முதலாவது காலகட்டத்தினது எமது ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் ஆயுதப் போராட்டத்தைத் தேவையான இதர போராட்ட வடிவங்களனைத்துடனும் இணைப்பதில் பெற்ற அனுபவத்தையும் பயனுடையதாக்கக் கூடியவர்களாயிருக்கிறோம்.

பொதுவாகக் கூறின், ஆயுதப்  போராட்டம் என்பது இப்போது கொரில்லாப் போரையே குறிக்கிறது.கொரில்லாப் போரென்றால் என்ன? அது பின்தங்கிய நாடொன்றில், பெரிய அரைக்குடியேற்ற நாடொன்றில் மக்களின் ஆயுதப்படைகள் ஆயுதபாணியாக்கப்பட்ட எதிரியை முறியடித்துத் தம் சொந்தத் தளப்பிரதேசங்களை அமைப்பதற்குத் தவிர்க்க இயலாது சார்ந்திருக்க வேண்டிய ஒன்றாகவும் அதன்காரணமாக மிகச் சிறந்த போராட்ட வடிவமாகவும் விளங்குகிறது. இதுகாலவரை, எமது கட்சியின் அரசியல்வழி, கட்சி கட்டுதல் ஆகிய இரண்டும் இந்த போராட்ட வடிவத்துடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன. ஆயுதப் போராட்டத்தையும்;  கொரில்லாப்போரையும் கைவிட்டால் எமது அரசியல் வழியைப் புரிந்து கொள்ள முடியாததோடு எமது கட்சிக் கட்டுதலையும் புரிந்து கொள்ள முடியாது.

ஆயுதப் போராட்டம் எமது அரசியல் வழியின் ஒரு முக்கிய பகுதியாகும். பதினெட்டு ஆண்டுகளாக, எமது கட்சி ஆயுதப் போராட்டம் நிகழ்த்தப் படிப்படியாகக் கற்று அதில் ஊன்றி நின்றுள்ளது. சீனாவில் ஆயுதப்போராட்டம் இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது;  மக்களுக்கு எதுவித அந்தஸ்தும் கிடையாது;  பொதுவுடைமைக் கட்சிக்கு எதுவித அந்தஸ்தும் கிடையாது.

புரட்சியும் வாகை சூடாதென்று புரிந்து கொண்டோம். பதினெட்டு ஆண்டுகளில் நமது கட்சியின் வளர்ச்சியும் உறுதிப்பாடும் போல்ஷெவிமயமாக்கமும் புரட்சிப் போர்களின் நடுவில்தான் நடைபெற்றன.

 ஆயுதப்போராட்டம் இல்லாவிட்டால், பொதுவுடைமைக் கட்சி இன்றுள்ள நிலையில் இருக்கமுடியாது. இரத்தம் சிந்திப்பெற்ற இந்த அனுபவத்தைக் கட்சித் தோழர்கள் ஒருவரும் மறந்துவிடக் கூடாது.

 முன்னையவை போலவே, கட்சியைக் கட்டுவதிலும் அதாவது அதன் வளர்ச்சி,  உறுதிப்பாடு, போல்ஷெவிமயமாக்கம் ஆகியவற்றிலும் மூன்று தெளிவான கட்டங்களிருந்திருக்கின்றன.

முதலாவது கட்டம் கட்சியின் குழந்தைப்பருவம்,

இந்தக் கட்டத்தின் தொடக்கக் காலத்திலும் நடுக்காலத்திலும் கட்சியின் வழி சரியாகவும் கட்சி உறுப்பினர்களினதும் ஊழியர்களினதும் புரட்சிகர உற்சாகம் மிக உயர்ந்ததாகவும் இருந்தன. இதன் விளைவானதே முதலாம் மாபெரும் புரட்சியின் வெற்றிகள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக எமது கட்சி அப்பொழுது குழந்தைப் பருவத்தில் உள்ள ஒரு கட்சியாக இருந்தது.

ஐக்கிய முன்னணி, ஆயுதப்போராட்டம், கட்சி கட்டுதல் ஆகிய மூன்று அடிப்படைப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை அனுபவமற்றதாயிருந்தது. அது சீன வரலாற்று நிலைமையைப் பற்றியோ, சீனச் சமுதாய
நிலைமையைப்  பற்றியோ, அன்றிச் சீனப்புரட்சியின் தனிச்சிறப்புக் கூறுகள், சீனப்புரட்சியின் நியதிகள் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை.
 மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தை விபரமாகப் புரிந்து கொள்வதில் குறைபாடுடையதாயிருந்தது. இதனால் இந்தக் கட்டத்தின் கடைசிக் காலத்தில், அதாவது இந்தக் கட்டத்தின் நெருக்கடியான தருணத்தில், கட்சியின் தலைமைப் பகுதியில் அதிகாரம் செலுத்துபவராயிருந்தோர் புரட்சியின் வெற்றிகளை உறுதிப்படுத்துவதில் முழுக்கட்சியையும் வழிநடத்தத் தவறி, பூர்ஷ்வா வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டுப் புரட்சிக்குத் தோல்வியைக் கொண்டு வந்தனர். இந்தக் கட்டத்தில் கட்சி அமைப்புகள் விரிவடைந்தன;  ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் திடமானவராக ஆவதற்கு உதவவும் அவை தவறிவிட்டன, பல புதிய கட்சி
உறுப்பினர்களிருந்தனர்;  ஆனால் அவர்களுக்குத் தேவையான மார்க்சிய லெனினியக் கல்வி அளிக்கப்படவில்லை. வேலையில் மிகுந்த அனுபவம் இருந்தபோதிலும் அது தகுந்த முறையில் தொகுக்கப்படவில்லை.

பதவி வேட்டையாளர் பலர் கட்சிக்குள் நுழைந்தனர். ஆனால் அவர்கள் வெளியே இழுத்தெறியப்படவில்லை, கட்சி எதிரிகளினதும் நேச அணிகளினதும் சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போதிலும் அது போதிய விழிப்புணர்வுடையதாயிருக்கவில்லை. கட்சிக்குள் உற்சாகிகள் பெருந்தொகையாக முன்வந்தனர்;  ஆனால் அவர்கள் தகுந்த சமயத்தில் கட்சியின் முதுகெலும்பாகப் பயிற்றப்படவில்லை. கட்சி ஆயுதந்தாங்கிய புரட்சிகரப் பிரிவுகள் சிலவற்றைத் தன் ஆணைக்கீழ் கொண்டிருந்தது;  ஆனால் அதனால் அவற்றை இறுகப் பற்ற முடியவில்லை. அனுபவமின்மையும் புரட்சிகர அறிவாற்றலில் போதிய ஆழமின்மையும் மார்க்சிய லெனினியத் தத்துவத்தைச் சீனப்புரட்சியின் நடைமுறையுடன் சரியாக இணைப்பதில் தேர்ச்சி பெறாமையுமே இவையனைத்துக்குமான காரணங்கள்;

இப்படியானதுதான் கட்சி கட்டுதலின் முதலாவது கட்டம்.

 இரண்டாவது கட்டம் நிலப்புரட்சி யுத்தக்காலம். முதலாவது கட்டத்தில் பெற்ற அனுபவத்தாலும் சீன வரலாற்று நிலைமை, சீன சமுதாய நிலைமை, சீனப் புரட்சியின் நியதிகள் ஆகியவை பற்றி முன்பைவிட நன்கு புரிந்து கொண்டதாலும் அதன் ஊழியர்கள் மார்க்சிய லெனினியத் தத்துவத்தை முன்பைவிட நன்கு கிரகித்து அதனைச் சீனப்புரட்சியின் நடைமுறையுடன் மேலும் இணைகக் கூடியவர்களாயிருந்ததாலும் எமது கட்சி நிலப்புரட்சிப் போராட்ட மொன்றினைப் பத்து வருடங்களுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தக் கூடியதாயிருந்தது. பூர்ஷ்வா வர்க்கம் துரோகம் செய்த போதிலும் எமது கட்சி
விவசாயிகளில் திடமாகத் தங்கியிருக்கக் கூடியதாயிற்று;  கட்சி ஸ்தாபனம் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்ல அது உறுதிப்பாடுடையதாகவும் மாறிற்று. நாளிலும் பொழுதிலும் எதிரி நமது கட்சியைக் கவிழ்க்க முயன்றபோதிலும்  கட்சி சதிகாரர்களை வெளியே துரத்தியது. இன்னொரு முறை பெருந்தொகையான ஊழியர்கள் கட்சியில் முன்னுக்கு வந்ததோடு கட்சியின் முதுகெலும்பாயினர். கட்சி மக்கள் அரசியல் அதிகாரப் பாதையைத் திறந்து வைத்ததன் பயனாக ஆட்சிக் கலையைக் கற்றுக் கொண்டது. எமது கட்சி பலம் வாய்ந்த ஆயுதப்படைகளை உருவாக்கியதன் பயனாகப் போர்க்கலையைக் கற்றுக் கொண்டது.

இவை எல்லாம் எமது கட்சியின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் சாதனைகளுமாகும்.

 இருந்த போதிலும், இந்த மகத்தான போராட்டங்களின் போக்கில் எமது தோழர்களில் சிலர் சந்தர்ப்பவாதச் சேற்றில் மூழ்கினர் அல்லது குறைந்தது சிறிய காலத்திற்காவது அவ்வாறாயினர். திரும்பவும்
அவர்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து அடக்கமாகக் கற்றுக் கொள்ளாமையும் சீன வரலாற்று நிலைமை, சீனச் சமுதாய நிலைமை, சீனப்புரட்சியின் தனிச்சிறப்பியல்புகள், புரட்சியின் நியதிகள்
ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமையும் அவர்களுடைய மார்க்சிய லெனினியத் த்த்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அறிவாற்றலின்மையுமே காரணங்கள் ஆகும்.

ஆகவே இந்தக் கட்டம் பூராவும் கட்சியின் தலைமைப் பதவிகளில் இருந்த சிலர் அரசியல் மற்றும் அமைப்பின் சரியான வழிகளில் ஊன்றி நிற்கத் தவறினர். கட்சியும் புரட்சியும் ஒரு சமயம் தோழர் லி லி –கன்னின்
“ இடது ” சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன. இன்னொரு சமயம் புரட்சிகரப்போரிலும் வெண்பிரதேச வேலைகளிலுமிருந்த “ இடதுசாரி ” சந்தர்ப்பவதத்தால் பாதிக்கப்பட்டன. சுன்யிக் கூட்டத்தின் ( 1935 ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் குவெய்சௌ மாகாணத்திலுள்ள சுன்யியில் நடந்த மையக்குழுவின் அரசியல் செயலகக் கூட்டம் ) பின்னர் கட்சி போல்ஷெவிய மயமாக்கப்பாதையை முற்றாக மேற்கொண்டதோடு,

அதைத் தொடர்ந்து சாங்கோதௌவின் வலதுசாரிச் சந்தர்ப்பவாத்த்தை வெற்றி கொள்வதற்கும் ஜப்பானிய எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றினை நிறுவுவதற்குமான அடித்தளத்தையும் இட்டது.

இதுதான் கட்சி வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்.

 மூன்றாவது கட்டம் ஜப்பானிய எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்காலம், இந்தக் கட்டத்தில் மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இம்மூன்றாண்டுப் போராட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முன்னைய இரண்டு புரட்சிகரக் காலகட்டங்களினதும் அனுபவத்தினாலும் தனது அமைப்புப் பலம், ஆயுதச்சக்திகளினது பலம் ஆகியவற்றினாலும் நாடு பூராவுமுள்ள மக்களிடையே தனக்குள்ள உயர்ந்த அரசியல் செல்வாக்காலும் மார்க்சிய லெனினியத் த்த்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்கும் இடையேயுள்ள ஐக்கியத்தில் தனக்குள்ள மேலும் ஆழமான அறிவாற்றலாலும் எமது கட்சி ஜப்பானிய எதிர்ப்புத்தேசிய ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருப்பது மட்டுமின்றி, மாபெரும் ஜப்பானிய- எதிர்ப்புப் போரையும் நடத்துகின்றது. அமைப்பு ரீதியில், அது தன் குறுகிய எல்லையைக் கடந்து, தேசிய அளவிலானஒரு பெரிய கட்சி -யாகியிருக்கிறது. கட்சியின் ஆயுதசக்திகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கெதிரான போராட்டத்தில் திரும்பவும் வளர்வதோடு மேலும் வலிமையுடையதாகவும் ஆகின்றன.

 நாடு பூராவுமுள்ள மக்களிடையேயும் கட்சியின் செல்வாக்கு இன்னும் பரந்ததாகின்றது. இவையெல்லாம் மகத்தான சாதனைகள். இருப்பினும், எமது கட்சியின் புதிய உறுப்பினர் பலருக்கு இன்னும் கல்வியளிக்கப்படவில்லை. புதிய அமைப்புகள் பல இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கட்சியின் புதிய உறுப்பினருக்கும் பழைய உறுப்பினருக்கும் இடையிலும் புதிய அமைப்புகளுக்கும் பழைய அமைப்புகளுக்குமிடையிலும் பெரிய வேறுபாடு இன்னும் நிலவுகின்றது. கட்சியின் புதிய உறுப்பினர் பலரும் ஊழியர் பலரும் இன்னும் போதியளவு புரட்சிகர அனுபவம் பெறவில்லை. அவர்கள் சீனாவின் வரலாற்று நிலைமை, சமுதாய நிலைமை ஆகியவை பற்றியும், சீனப்புரட்சியின் தனிச் சிறப்பியல்புகள் நியதிகள் ஆகியன பற்றியும் எதுவும் அறியாதவர்களாயிருக்கிறார்கள் அல்லது இன்னும் சிறிதளவே
அறிந்திருக்கின்றனர். மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் அவர்களின் ஆற்றல் விரிவானதாயுள்ளது என்று கூறுவதற்கே இடமில்லை.

 கட்சி அமைப்புகளின் விரிவாக்கத்தின்போது, மையக்குழு “ கட்சியைத் துணிச்சலாக வளருங்கள்;  ஆனால் தீயவர்கள் ஒருவரையும் கட்சிக்குள் அனுமதிக்காதீர்கள் ” என்ற முழக்கத்தை வலியுறுத்தி முன்வைத்த போதிலும் உண்மையில் கணிசமான அளவு பதவி வேட்டையாளரும் எதிரிச் சதிகாரரும் கட்சிக்குள் நுழைவதில் வெற்றிக் கண்டனர். ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள்நிலைநிறுத்தப்பட்ட போதிலும், பூர்ஷ்வா வர்க்கம் குறிப்பாக, பெரும் பூர்ஷ்வா வர்க்கம் எமது கட்சியை அழிப்பதற்கு இடைவிடாது முயல்கிறது. பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதி வாதிகளினதும் பிடிவாதவாதிகளினதும் தலைமையிலான கடுமையான மோதல்கள் நம்மீது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன;  பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்புக் கூச்சலுக்கு ஒழிவில்லை. இவையெல்லாம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைத் தகர்ப்பதற்கும் சீனாவைப் பின் நோக்கி இழுத்துச் செல்வதற்கும் தயார் செய்வதற்காகப் பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதிவாதிகளாலும் பிடிவாதவாதிகளாலும் பயன் படுத்தப்படுகின்றன.

 பெரும் பூர்ஷ்வா வர்க்கம் சிந்தாந்த ரீதியிலே பொதுவுடைமையை     “ அரிக்க ” முயல்கிறது. அதே வேளையில் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பொதுவுடைமைக் கட்சிக்கும் எல்லைப் பிரதேசத்திற்கும் கட்சியின் ஆயுத சக்திகளுக்கும் முடிவு கட்ட முயல்கின்றது. இச்சூழ்நிலைகளில், ஐயமின்றி, எமது கடமை, சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய பேரிடர்களைச் சமாளிப்பதும் தேசிய ஐக்கியமுன்னணியையும் கோமிண்டாங் பொதுவுடைமைக் கட்சிக் கூட்டுறவையும் இயன்ற அளவு நிலைநிறுத்துவதும் தொடர்ந்து ஜப்பானிய எதிர்ப்பிற்காகவும் ஐக்கியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வேலைசெய்வதுமாகும். அதே வேளையில், எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சிகளைச் சமாளிப்பதற்குத் தயார் செய்ய வேண்டும். இதனால் அந்நிகழ்ச்சிகள் நிகழும் சமயத்தில் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. ஆகவே, நாம் எமது கட்சி அமைப்பையும் அதன் ஆயுதச் சக்திகளையும் உறுதிப்படுத்தி, சரணடைவிற்கும், பிளவிற்கும் பின்னடைவிற்கும் எதிரான திடமான போராட்டத்திற்காக நாடு பூராவுமுள்ள மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவது கட்சி முழுவதினதும் முயற்சிகளிலும் கட்சி உறுப்பினர்களனைவரதும் ஊழியர்கள் அனைவரதும், எல்லா மட்டங்களிலும் இடங்களிலுமுள்ள அமைப்புகளைத்தினதும் தளராத, உறுதியான போராட்டத்திலும் தங்கியுள்ளது. பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட சீனப்பொதுவுடைமைக் கட்சி தன் அனுபவமிக்கப் பழைய உறுப்பினரதும் ஊழியரதும் சுறுசுறுப்பும் இளமையுமுடைய புதிய உறுப்பினரதும் ஊழியரதும் கூட்டு முயற்சிகளினாலும், புடமிடப்பட்டு, போல்ஷெவியமாக்கப்பட்ட மையக்குழுவினதும் அதன் உள்ளூர்
அமைப்புகளினதும் கூட்டுமுயற்சிகளினாலும் அதன் வலிமை மிக்க ஆயுத சக்திகளினதும் முற்போக்கான பொதுமக்களினதும் கூட்டு முயற்சிகளினாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற இயலும் என
நம்புகிறோம்.

 இவையெல்லாம் எமது கட்சியின் பதினெட்டாண்டுக் கால வரலாற்றின் பிரதான அனுபவங்களும் அதன் பிரதானப் பிரச்சினைகளுமாகும்.

 ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமுந்தான் எதிரியைத் தோற்கடிப்பதற்கான இரண்டு அடிப்படை ஆயுதங்களென எமது பதினெட்டாண்டுக் கால அனுபவங்கள் காட்டுகின்றன. ஐக்கிய முன்னணி
ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்துவதற்கான ஐக்கிய முன்னணியாகும். கட்சி அமைப்புத்தான் எதிரியின் நிலைகளைத் தகர்ப்பதற்கு இவ்விரு ஆயுதங்களையும் அதாவது ஐக்கிய முன்னணியையும் ஆயுதப்
போராட்டத்தையும் கையாளும வீரமிக்கப் போர்வீரன். இவ்வாறுதான் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாயுள்ளன.

 நாம் இன்று எமது கட்சியை எப்படிக் கட்டியமைக்க வேண்டும்?        “ தேசிய அளவிலானதும் மக்கள் திரள் இயல்புள்ளதும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக உறுதிப்படுத்தப்பட்டதுமான போல்ஷெவிமயமான சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்றினை ” எம்மாலெப்படிக் கட்டியமைக்க முடியும்? கட்சியின் வரலாற்றை ஆராய்வது மூலமும், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும், கட்சி கட்டுதல் தொடர்பாக, பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கியமாவது அதற்கெதிராகப் போராடுவது என்ற பிரச்சினையுடனும் எட்டாவது வழி இராணுவமும்புதிய நான்காவது சேனையும் ஜப்பானுக்கெதிரான கொரில்லா யுத்தத்தில் ஊன்றி நிற்பது, ஜப்பானிய- எதிர்ப்புத் தளப்பிரதேசங்களை நிறுவுவது ஆகிய பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாகவும்உள்ளவற்றை ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியும்.

 எமது கட்சி எஃகைப் போன்று திடமானதாக அமையவும் எமது கட்சியின் கடந்தகால வரலாற்றிலுள்ள தவறுகள் திரும்பவும் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில் எமது பதினெட்டு ஆண்டுக்கால அனுபவத்தையும் எமது தற்போதைய புதிய அனுபவத்தையும தொகுத்து, அதனைக் கட்சி முழுவதும் பரப்ப வேண்டும். இதுதான் எமது கடமை. ̒
=================
நன்றி: அச்சுப்பதிவு தோழர் மதி