Tuesday 16 August 2011

ரக்ஷ்யப் பொதுவுடமையாளர்களின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் என்ற பிரச்சனை குறித்து- ஜே.வி.ஸ்டாலின்


பாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி   மேற்கோள்-  1
ரக்ஷ்யப் பொதுவுடமையாளர்களின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் என்ற பிரச்சனை குறித்து
ஜே.வி.ஸ்டாலின்

பிரஸ்னியா மாவட்டத்திலுள்ள தொழிலாளர் மன்றத்திலும் ஸ்பெர்ட்லோவ் பல்கலைக்கழகத்திலுள்ள பொதுவுடமையாளர் குழுவுக்கும் ”ரக்ஷ்யப் பொதுவுடமையாளர்களின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் ஆகியவை குறித்து” என்ற தலைப்பில் பல்வேறு சமயங்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதே இக்கட்டுரையாகும்.
   பிரஸ்னிய, ஸ்பெர்ட்லோவ் தோழர்களின் விருப்பங்களை நிறைவு செய்வது எனது கடமை என்று நான் நினைப்பதோடு மட்டுமல்லாமல் இளந்தலைமுறையைச் சார்ந்த நமது கட்சி ஊழியர்களுக்கும் இக்கட்டுரை சிறிது பயன்படும் என்று எனக்குத் தோன்றுவதாலுமே நான் வெளியிட முடிவு செய்துள்ளேன். ஆயினும் நமது முன்னணித் தோழர்களால் ரக்ஷ்யக் கட்சி வெளியீடுகளில் பல்வேறு சமயங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளவற்றின் சாரத்தோடு ஒப்பிடும்போது இக்கட்டுரை புதிதாக எதையும் சொல்லவில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியமென்று நான் கருதுகிறேன். தோழர் லெனினின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றிய ஒரு சுருக்கமான, முறைப்படுத்தப்பட்ட விளக்கமே இக்கட்டுரை என்று கருதப்பட வேண்டும்.
                                      1.அடிப்படைக் கருத்தாக்கங்கள்
அ. தொழிலாளி வர்க்க இயக்கத்தின் இரு அம்சங்கள்
         அரசியல் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பற்றியன. ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கமோ தன்னுள் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது: ஒன்று, புறவயமான அம்சம் (Objective aspect); அதாவது தன்னிகழ்வான அம்சம் (Spontaneous aspect) மற்றது, அகவயமான அம்சம் (Subjective aspect); அதாவது உணர்வுபூர்வமான அம்சம் (Conscious aspect). புறவயமானதும் தன்னிகழ்வானதுமான அம்சம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுபூர்வமான நெறிமுறைப்படுத்தும் சித்தத்தைச் சார்ந்திராது சுயேச்சையாக நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளின் தொகுதி ஆகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதலாளியத்தின் வளர்ச்சி, பழைய அரசாட்சி சிதைந்து அழிவது, பாட்டாளிவர்க்கமும் அதைச் சுற்றியுள்ள பிற வர்க்கங்களும் தாமாகக் கிளர்ந்தெழும் இயக்கங்கள், வர்க்கங்களுக்கிடையே நிகழும் மோதல்கள் – இவையாவும் பாட்டாளிவர்க்கத்தின் சித்தத்தைச் சார்ந்திராமல் தாமாக உருவாகி வளரும் நிகழ்வுகள். இது தான் தொழிலாளிவர்க்க இயக்கத்தின் புறவய அம்சம். போர்த்தந்திரத்துக்கு இந்நிகழ்ச்சிப் போக்குகள் பற்றி எவ்விதமான பொறுப்பும் இல்லை. ஏனெனில் அவற்றைப் போர்த்தந்திரத்தால் நிறுத்தவும் முடியாது. மாற்றவும் முடியாது. இந்நிகழ்ச்சிப்போக்குகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதும் அவற்றை ஆதாரமாகக் கொள்வதும்தான் போர்த்தந்திரத்தால் ஆகக்கூடியது. புறவய அம்சம், மார்க்சியத் தத்துவத்தாலும் மார்க்சியச் செயல் திட்டத்தாலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய துறையாகும்.
     ஆனால் தொழிலாளிவர்க்க இயக்கத்துக்கு அகவயமான உணர்வுபூர்வமான அம்சமும் உண்டு. இயக்கத்தின் அகவய அம்சம் என்பது இயக்கத்தில் தன்னிகழ்வாக நேரும் நிகழ்ச்சிப் போக்குகள், தொழிலாளர்களின் சிந்தனைகளில் தோற்றுவிக்கும் பிரதிபலிப்பாகும். அது ஒரு திட்டவட்டமான குறிக்கோளை நோக்கிப் பாட்டாளிவர்க்கம் உணர்வு பூர்வமாகவும் முறைப்படுத்தப்பட்டதாகவும் செல்லும் இயக்கம். தொழிலாளிவர்க்க இயக்கத்தின் இந்த அம்சத்தில் தான் நமக்கு அக்கறை இருக்கிறது. ஏனெனில் புறவய அம்சம் போலல்லாது, இது முழுக்க முழுக்க போர்த்தந்திரம், செயல்முறைத் தந்திரம் ஆகியவற்றின் நெறிமுறைப்படுத்தும் செல்வாக்குக்கு உட்பட்டது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்குகளின் பாதையை மாற்றக்கூடிய திறன் போர்த்தந்திரத்திற்கு இல்லை. மாறாக, இயக்கத்தின் அகவய, உணர்வுப்பூர்வமான பகுதியில் போர்த்தந்திரத்தைக் கையாள்வதற்கான களங்கள் மிகவும் பரவலானவை; பலதரப்பட்டவை. காரணம் போர்த்தந்திரத்தால், அகவய இயக்கத்தைத் துரிதப்படுத்தவும் முடியும்; தாமதப்படுத்தவும் முடியும். இயக்கத்தை மிகச் சுருக்கமான வழியிலும் நடத்திச் செல்ல முடியும்; மிகக் கடினமான துன்பம் நிறைந்த பாதையிலும் திருப்பி விட முடியும். இவையாவும் போர்த்தந்திரம் குறைபாடற்றதா, குறைபாடுடையதா என்பதைச் சார்ந்து நிகழ்பவை.
     எனவே, இயக்கத்தைத் துரிதப்படுத்துவது அல்லது தாமதப்படுத்துவது; அதற்கு உதவியாக இருப்பது அல்லது தடையாக இருப்பது – இவையே அரசியல் போர்த்தந்திரமும், செயல் தந்திரமும் செயல்படக் கூடிய பரப்பும் எல்லைகளுமாகும்.
. மார்க்சியத் தத்துவமும் செயல்திட்டமும் 
          (Marxist Theory and Programme) 
    போர்த்தந்திரம் தானாக இயக்கத்தின் புறநிலைப் போக்குகளை ஆய்வு செய்வதில்லை. இருப்பினும் அவற்றை அது அறிந்திருக்கவும் அவற்றைச் சரியான முறையில் கருத்தில் கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் இயக்கத் தலைமை தன்னை அழிவுக்குக் கொண்டு செல்லும் படுமோசமான தவறுகளைப் புரிவது தவிர்க்கப்படும்.
     இயக்கத்தின் புறநிலைப்போக்குகள் முதலாவதாக மார்க்சியத் தத்துவத்தாலும், மேலும் மார்க்சியச் செயல்திட்டத்தாலும் (Programme) ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே போர்த்தந்திரம் என்பது மார்க்சியத் தத்துவத்தாலும் செயல் திட்டத்தாலும் வழங்கப்படும் விபரங்களையே முற்றிலுமாகத் தனது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
          முதலாளியத்தின் புறநிலைப்போக்குகளின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஒர் ஆய்விலிருந்து மார்க்சியத் தத்துவம், கீழ்க்காணும் முடிவிற்கு வருகிறது; முதலாளிய வர்க்கத்தின் வீழ்ச்சியும் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தவிர்க்க இயலாதவை; முதலாளியம் தவிர்க்க இயலாதவாறு சோசலிசத்துக்கு வழிவிட்டாக வேண்டும். மார்க்சியத் தத்துவத்தின் இந்த அடிப்படையான முடிவினைப் பாட்டாளிவர்க்கப் போர்த்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அதை உண்மையானதொரு மார்க்சியப் போர்த்தந்திரம் என அழைக்க முடியும்,
     மார்க்சியத் தத்துவத்தால் வழங்கப்படும் விபரங்களை துவக்க முனையாகக் கொண்டு மார்க்சியத் திட்டமானது பாட்டாளிவர்க்க இயக்கத்தின் குறிக்கோள்களைத் தீர்மானிக்கிறது. இக்குறிக்கோள்கள் செயல்திட்டத்தின் அம்சங்களாக அறிவியல் ரீதியில் முறைப்படுத்தப்படுகின்றன. செயல்திட்டமானது முதலாளிய வளர்ச்சிக் காலகட்டம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்படலாம்; அதாவது, முதலாளியத்தைத் தூக்கியெறிவதையும் சோசலிச உற்பத்தியை ஒழுங்கமைப்பதையும் நோக்கமாகக் கொண்டும் இருக்கலாம். அல்லது, முதலாளிய வளர்ச்சியின் ஒரே ஒரு திட்டவட்டமான கட்டத்தை மட்டுமே உள்ளடக்கியதாகவும் இருக்கலாம். உதாரணமாக, நிலப்பிரபுத்துவ – முடியாட்சி அமைப்பின் எச்சங்களைத் தூக்கியெறிவதையும் முதலாளியத்தின் தடையற்ற  வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குவதை மட்டுமே செயல்திட்டம் தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கலாம். இதற்குகந்தவாறு, செயல்திட்டம் இருபகுதிகளாக அமையும்:-(1) அதிகபட்சத் திட்டம் (2) குறைந்தபட்சத்திட்டம். அதிகபட்சத் திட்டத்திறகென உருவாக்கப்பட்ட போர்த்தந்திரம், குறைந்தபட்சத் திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட போர்த்தந்திரத்திலிருந்து வேறுபட்டே தீருமென்பதைச் சொல்லத் தேவையில்லை. இயக்கத்தின் குறிக்கோள்கள் மார்கசியச் செயல்திட்டத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்தந்திரத்தின் செயற்பாடுகள் இக்குறிக்கோள்களை வழிகாட்டிகளாகக் கொண்டு அமைய வேண்டும்.அப்பொழுதுதான், போர்த்தந்திரம் உண்மையிலேயே மார்க்சியப் போர்த்தந்திரம் என்ற தகுதியைப் பெறும்.

இ. போர்த்தந்திரம்
(Strategy)
     தொழிலாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ளவேண்டிய முதன்மையான திசை எது என்று தீர்மானிப்பது, செயல்திட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட குறிக்கோள்களைச் சாதிக்கும் பொருட்டு தனக்கு மிகவும் சாதகமான முறையில் எதிரியின் மீது முதன்மையான தாக்குதலைத் தொடுக்க எத் திசையில் பாட்டாளிவர்க்கத்திற்கு இயலுமோ அத் திசையைத் தீர்மானிப்பது, போர்த்தந்திரத்தின் மிக முக்கிய பணியாகும். ஒரு போர்த்தந்திரத் திட்டமென்பது இறுதித் தாக்குதலை எத் திசையில் செலுத்தினால் மிக அதிகபட்ச விளைவுகளைச் சாதிக்க முடியுமோ அத்திசையை நோக்கி இறுதித் தாக்குதலை நடத்த திட்டமிடுதலாகும்.
     அரசியல் போர்த்தந்திரத்தின் முதன்மை அம்சங்களை எளிதாக விளக்க இராணுவப் போர்த்தந்திரத்திலிருந்து ஒரு உவமை காட்டுவோம், உள்நாட்டுப் போரின் போது டெனிக்கனுக்கு எதிராக நடந்த போரை எடுத்துக் கொள்வோம்.1919 ஆம் ஆண்டின் இறுதியில் டூலோ என்னுமிடத்தில் டெனிக்கினின் படைகள் நின்றுகொண்டிருந்தன என்பது அனைவருக்கும் தெரியும்.எந்த முனையிலிருந்து டெனிக்கினின் படைகள் மீது தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து நமது இராணுவத்தினரிடையே ஆர்வமிக்க சர்ச்சை ஒன்று அச்சமயத்தில் எழுந்தது.
     ஜாரிட்சின் – நோவோராஸையிஸ்க் பாதைதான் தாக்குதலுக்கான திசையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று இராணுவத்தினர் சிலர் ஆலோசனை வழங்கினர். இதற்கு மாறாக வேறு சிலர் வோரோனெஸ் – ரோக்ஷ்டோவ் பாதை வழியாக தீர்மானகரமாக தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும்; இந்தப் பாதை வழியாக முன்னேறி டெனிக்கினின் சேனைகளை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக நசுக்கிவிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். முதல் திட்டத்தில் பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை. காரணம் நோவோரோ ஸையிஸ்க் நகரத்தைக் கைப்பற்றுவதற்கு அது வழிகோலியது. அந்த நகரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் டெனிக்கினின் சேனைகள் பின்வாங்குவதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அத்திட்டத்தில் குறைபாடும் இருந்தது. காரணம் அத்திட்டத்தின்படி நாம் டான் பிரதேசத்து மாவட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும். இம்மாவட்டங் களோ சோவியத் அதிகாரத்திற்குப் பகையானவை. எனவே, ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருந்திருக்கும். மேலும், இத்திட்டம் அபாயகரமானது மாகும். ஏனெனில், அத்திட்டமானது டூலா, செர்புகோவ் ஆகிய நகரங்களின் வழியாக மாஸ்கோவுக்கான பாதையை டெனிக்கினது படைகளுக்கு திறந்து விடக் கூடியதாகும். முதன்மையான தாக்குதலுக்கான சரியான திட்டம், இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அத்திட்டமானது நமது முக்கிய படைக்குழு* சோவியத் அதிகாரத்துடன் நட்புப் பாராட்டிய மாவட்டங்கள் (ஒரோணிஸ், குபர்ணியா, டோனஸ்டஸ் பேசின்) வழியாக முன்னேறிச் செல்லுமாறு யோசனை கூறியது. எனவே கணிசமான அளவு உயிர்ச் சேதங்கள் இதனால் ஏற்படாது: மேலும் மாஸ்கோவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த டெனிக்கனின் முதன்மையான படைக்குழுவின் நடவடிக்கைகளை அத்திட்டம் சீர்குலைக்கும். பெரும்பான்மையான இராணுவத்தினர் இந்த இரண்டாவது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இது, போரில் டெனிக்கினின் தோல்வியைத் தீர்மானித்தது.
     வேறுவிதமாக கூறுவதானால், முதன்மையான தாக்குதல் திசையைத் தீர்மானிப்பது என்பது, போர்க்காலக் கட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் தன்மையை முன்கூட்டியே தீர்மானிப்பதாகும். இதுதான் போர்த்தந்திரத்தின் பணியாகும்.
     அரசியல் போர்த்தந்திரத்திற்கும் இது பொருந்தும். பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முதன்மையான திசை எது என்ற பிரச்சனை மீது ரக்ஷ்யப் பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் தலைவர்களுக்கிடையே, முதல் தீவிரமான கருத்து மோதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரக்ஷ்ய – ஜப்பானி யப் போரின் போது ஏற்பட்டது. அச்சமயத்தில், நமது கட்சியின் ஒரு பிரிவு (மென்க்ஷெவிக்குகள்) கீழ்காணும் கருத்தைக் கொண்டிருந்தது என்பது நமக்குத் தெரியும். பாட்டாளிவர்க்கத்திற்கும் மிதவாத முதலாளிவர்க்கத்திற்கும் இடையே உள்ள ஒரு கூட்டணி என்ற மார்க்கத்தின் வழியாகவே ஜாரிசத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முதன்மையான திசை அமைய வேண்டும். இத்திட்டத்தில், முக்கியமான புரட்சிகர காரணியான விவசாயிவர்க்கம் விலக்கப்பட்டிருந்தது; அல்லது கிட்டத்தட்ட முழுமையாக விலக்கப்பட்டிருந்தது. அதேசமயத்தில் பொதுவான புரட்சிகர இயக்கத்தின் தலைமைப்பாத்திரம் மிதவாத முதலாளிவர்க்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்குமாறாக, கட்சியின் மற்றொரு பிரிவு (போல்க்ஷெவிக்) கீழ்காணும் கருத்தை முன்வைத்தது. பாட்டாளிவர்க்கத்திற்கும் விவசாயி வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி என்ற பாதையின் வழியாகவே முதன்மையான தாக்குதல் செலுத்தப்பட வேண்டும்; பொதுவான புரட்சிகர இயக்கத்தில், தலைமைப் பாத்திரம் பாட்டாளிவர்க்கத்திற்கு வழங்கப்படவேண்டும்; மிதவாத முதலாளிவர்க்கம் செயலிழக்கும்படி செய்ய வேண்டும்.
     டெனிக்கனுக்கு எதிரான போர் என்ற உவமையினைக் கொண்டு இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 1917 பெப்ரவரி புரட்சி வரையிலான நமது புரட்சி இயக்கம் முழுவதையும் விளக்குவோம். இக்காலகட்டத்திய புரட்சி இயக்கம் ஜாரிசத்துக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகத் தொழிலாளிகளும் விவசாயிகளும் நடத்திய ஒரு போர் என்று நாம் சித்தரிப்போம், ஜாரிசத்தினதும் நிலப்பிரபுக்களினதும் தலைவிதி இந்த இரண்டு யுத்ததந்திர திட்டங்களில் (மென்க்ஷெவிக் திட்டம், போல்க்ஷெவிக் திட்டம்) எது மேற்கொள்ளப்படும் என்பதையும், புரட்சிகர இயக்கத்தின் முதன்மையான திசையென எத்திசை நிர்ணயிக்கப்படும் என்பதையுமே பெரிதும் சார்ந்திருந்தது என்பது தெளிவாகும்.
     டெனிக்கினுக்கு எதிரான போரில் இராணுவ போர்த்தந்திரம் தாக்குதலின் முதன்மைத் திசையைச் சரியாகத் தீர்மானித்ததன் மூலம், டெனிக்கினின் படைகள் அழிக்கப்பட்டது உட்பட பின்னர் நிகழ்ந்த போர் நடவடிக்கைகளின் தன்மையை முன்கூட்டியே பத்தில் ஒன்பது பங்கு அளவிற்கு நிர்ணயித்தது. அதே போல, ஜாரிசத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டக்களத்திலும் புரட்சி இயக்கத்தின் முதன்மையான திசையானது போல்க்ஷெவிக் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானித்ததின் மூலம், நமது அரசியல் போர்த்தந்திரமானது, ரக்ஷ்ய – ஜப்பானியப் போர்க்காலத்திலிருந்து 1917 பிப்ரவரி புரட்சிவரை நடந்த ஜாரிசத்திற்கு எதிரான பகிரங்கப் போராட்டக் காலகட்டம் முழுவதிலும் நமது கட்சிப்பணியின் தன்மையைத் தீர்மானித்தது. மார்க்சியத் தத்துவம் செயல்திட்டம் ஆகியவற்றால் வழங்கப்படும் விபரங்களின் அடிப்படையிலும் எல்லாநாடுகளிலுமுள்ள தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முதன்மைத் திசையைச் சரியாகத் தீர்மானிப்பதுதான் அரசியல் போர்த்தந்திரத்தின் முதன்மையான செயற்பாடாகும்.
                                                         ஈ. செயல்தந்திரம்
(Tactics)
     செயல்தந்திரங்கள் போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாகும். அவை போர்த் தந்திரத்துக்கு உட்பட்டவை: அதற்குத் துணை புரிபவை. செயல்தந்திரங்கள் போர்முழுவதுக்குமாகக் கணிக்கப்படுவன அல்ல. மாறாக, போரின் தனித்தனி நிகழ்ச்சிகளோடு, தனித்தனிச் சண்டைகளோடு, தனித்தனி மோதல்களோடு சம்பந்தப்பட்டவை. போர்த்தந்திரம் என்பது போரில் வெற்றியடைய முயற்சி செய்கிறது.; அல்லது  போராட்டத்தை, உதாரணமாகச் சொல்லப் போனால் ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தை, இறுதிவரை நடத்த முயற்சி செய்கிறது. அதற்கு மாறாக, செயல்தந்திரங்களோ குறிப்பிட்ட மோதல்களிலும், குறிப்பிட்ட சண்டைகளிலும் வெற்றி பெறவும் குறிப்பிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திச் செல்லவும் அல்லது ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் போராட்டத்தின் திட்டவட்டமான நிலைகளுக்கு ஏறத்தாழ பொருத்தமான குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயல்கின்றன.
     குறிப்பிட்ட தருணத்தில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாகவும் போர்த்தந்திர வெற்றிக்கான பாதையை மிகவும் நிச்சயமாக வகுக்க வல்லனவாகவும் உள்ள, போராட்ட வழிமுறைகளையும், போராட்ட வடிவங்களையும் தீர்மானிப்பதுதான் செயல் தந்திரங்களுக்குள்ள மிக முக்கியமான பணியாகும். இதன் காரணமாக செயல் தந்திரங்களின் செயல்பாட்டையும் விளைவுகளையும் அவற்றை மட்டும் தன்னந்தனியாகவோ அவற்றின் உடனடியான பாதிப்புக்களை மட்டும் கருத்திற்கொண்டோ பார்க்கக் கூடாது. மாறாகப் போர்த்தந்திரத்தின் குறிக்கோள்களையும் சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டே பார்க்க வேண்டும்.
     சிலசமயம் செயல் தந்திர வெற்றிகள் போர்த்தந்திரக் குறிக்கோள்களை அடைய உதவும். உதாரணமாக 1919 ஆம் ஆண்டின் இறுதியில் டெனிக்கினுக்கு எதிரான போரில் நமது துருப்புக்கள் ஓரல், வோரோனெழ் ஆகியவற்றை விடுதலை செய்த போது வோரோனெழில் நமது குதிரைப் படைகளும், ஓரோழில் நமது தரைப்படைகளும் பெற்ற வெற்றிகள் ரோஸ்டோவில் தாக்குதலை நடத்துவதற்கான சாதகமான ஒரு சூழலை உருவாக்கின. 1917 இல் ரக்ஷ்யாவில் நடந்ததும் இத்தகையதுதான். அப்போது  பெட்ரோகிராட் சோவியத்தும் மாஸ்கோ சோவியத்தும் போல்க்ஷ்விக்குகளின் தரப்பிற்கு வந்து அதன் காரணமாக ஒரு புதிய அரசியல் சூழ்நிலைமை உருவாயிற்று. பின்னர் அக்டோபரில் நமது கட்சி தாக்குதல் தொடுப்பதற்கு இது உதவிற்று. செயல் தந்திர வெற்றிகள் சிலசமயங்களில் அவற்றின் உடனடியான விளைவின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது  வியக்கத்தக்கனவாக இருக்கும்; ஆனால் போர்த்தந்திரச் சாத்தியபாடுகளுடன் பொருத்தமற்றனவாக அமைந்து ஒரு “எதிர் பாராத” சூழ்நிலைமையைத் தோற்றுவிக்கும். இதனால் போர்முனை ஏற்பாடுகள் நாசமடையும்படி நேரலாம். 1919 இறுதியில் டெனிக்கினுக்கு நடந்தது இதுதான். மாஸ்கோவை நோக்கிய விரைவான,மின்னல் போன்றதொரு முன்னேற்றத்தின் எளிதான வெற்றியால் அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவன் தனது போர்முனையை வோல்காவிலிருந்து நீப்பருக்கு விரிவுபடுத்தினான். 1920 இல் போயந்துகாரர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்ததும் இத்தகையது தான். அப்போது நாம் போலந்திலிருந்த தேசிய உணர்வுக்குள்ள வலிமையைக் குறைத்து மதிப்பிட்டு மின்னல் போன்ற முன்னேற்றத்தின் எளிதான வெற்றியால் கர்வமேறி நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பணியை – வார்ஸா வழியாக ஐரோப்பாவிற்குள் நுழையும் பணியை – நாம் மேற்கொண்டோம். இது போலிக்ஷ் மக்கள் தொகையில் மிகப் பெரும் பகுதியைச் சோவியத் படைகளுக்கு எதிராகத் திரட்டியது. மின்ஸ்க், ஸிடோமிர் ஆகிய இடங்களில் சோவியத் படைகள் கண்ட வெற்றிகளைப் பயனற்றவைகளாக்கிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. சோவியத் அரசின் கௌரவத்துக்கு மேற்கு நாடுகளில் ஊறு விளைவித்தது.
     கடைசியாக ஒன்று; சில சமயங்களில் எதிர்காலப் போர்த்தந்திர ஆதாயங்களை உறுதி செய்து கொள்வதற்காக ஒரு செயல் தந்திர வெற்றியைப் புறக்கணிக்க வேண்டியும் மற்றும் செயல்தந்திர வகையில் இழப்புகளையும் பின்னடைவுகளையும் வேண்டுமென்றே உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இது போர்க்காலத்தில் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்றாகும். ஒரு தரப்பினர் தமது இராணுவப் படையினரை அழிவினின்று காப்பாற்றவும் தன்னை விட வலு மிகுந்த எதிர்ப்படையின் தாக்குதலிலிருந்து அவர்களை ஒதுங்கச் செய்யவும் திட்டமிடப்பட்ட முறையில் பின்வாங்கி, எதிர்காலத்தில் புதிய தீர்மானகரமான சண்டைகளைப் புரிவதற்காக அவகாசம் திரட்டவும், தனது சக்தியையும் படைகளையும் திரட்டவும், சண்டை போடாமல் நகரங்களையும் பிரதேசங்களையும் கைவிட்டு விடுவதுண்டு. 1918 இல் ஜெர்மன் தாக்குதலின் போது ரக்ஷ்யாவில் நிகழ்ந்தது இத்தகையது தான். அப்போது நமது கட்சி பிரஸ்ட் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஏற்பட்ட உடனடியான அரசியல் விளைவு என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் அது மிகப் பெரும் பின்னடைவு. சமாதானத்திற்காக ஏங்கிய விவசாயிகளுடன் நேச அணியைப் பாதுகாத்துக் கொள்ளவும், அவகாசம் பெறவும், ஒரு புதிய படையை உருவாக்கவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் போர்த்தந்திர ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவும், இந்தச் சமாதானத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு இருந்தது.
     வேறு விதத்தில் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் தற்காலிக நலன்களுக்குக் கீழ்ப்படிந்ததாக செயல்தந்திரங்களைச் செய்யக் (வகுக்கக்*)கூடாது. உடனடியான அரசியல் விளைவு என்ற எண்ணங்களால் அவை வழிகாட்டப்படக்கூடாது. மேலும், உறுதியான நிலத்தில் ஊன்றி நிற்பதை விட்டு ஆகாயத்தில் கோட்டை கட்டுவது இன்னும் கூடாது. போர்த் தந்திரத்தின் நோக்கங்கள், சாத்தியப்பாடுகள் ஆகியவற்றிக்கு உகந்தவாறுதான் செயல் தந்திரங்கள் உருவாக்கப்படவேண்டும்.
செயல் தந்திரங்களுடைய செயல்பாடு முதன்மையாக இதுதான்.
போர்த்தந்திரத்தின் தேவைகளுக்கு உகந்த வகையிலும் எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டும் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் போராட்டத்தின் திட்டவட்டமான சூழ்நிலைக்கு உகந்தவாறு போராட்டங்களின் வடிவங்களையும் முறைகளையும் தீர்மானிப்பதாகும்.
உ) போராட்ட வடிவங்கள்
     போர்முறைகள், போர்வடிவங்கள் எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. வளர்ச்சி நிலைமைகளுக்கு ஏற்ப – முதன்மையாக உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப அவை மாறுகின்றன.செங்கிஸ்கான் காலத்தில் இருந்த போர்முறைகள், மூன்றாம் நெப்போலியன் காலத்திய போர்முறைகளிலிருந்து மிகவும் மாறுபட்டவையாகும்; இருபதாம் நூற்றாண்டில் உள்ள போர்முறைகள் 19 ஆம் நூற்றாண்டில் உள்ள போர் முறைகளிலிருந்து மாறுபட்டவையாகும்.
     நவீன நிலைமைகளில் போர்க்கலை என்பது எல்லாப் போர் வடிவங்களையும், இத்துறையில் அறிவியல் ஈட்டிய அனைத்து சாதனைகளையும் கற்றுத் தேர்வதையும் அவற்றை அறிவுக் கூர்மையோடு பயன்படுத்துவதிலும் அவற்றை திறமையாக ஒன்றிணைப்பதிலும் அல்லது சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வடிவங்களில் பொருத்தமான ஒன்றைச் சரியான சமயத்தில் பயன்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
     அரசியல் மட்டத்திலுள்ள போராட்ட வடிவங்களுக்கும் இதுவே பொருந்தும். இராணுவப் போராட்ட வடிவங்களைக் காட்டிலும் அரசியல் துறைகளிலுள்ள போராட்ட வடிவங்களின் வகைகள் அதிகமானவை. பொருளாதார வாழ்வு, சமூக வாழ்வு, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக் கேற்ப, முட்டி மோதுகின்ற சக்திகளின் உறவுக்கேற்ப எத்தைகைய அரசாங்கம் உள்ளதோ அதற்கேற்ப, இறுதியாக, சர்வதேச உறவுக்கேற்ப இன்னும் பல காரணிகளுக்கேற்ப, அரசியல் போராட்ட வடிவங்கள் மாறுகின்றன. முடியாட்சி நிலவும் காலகட்டத்தில், பகுதி-வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்த சட்டவிரோதப் போராட்ட வடிவங்கள்; ‘சட்டரீதியாக இயங்கும் சாத்தியக் கூறுகள்’ நிலவும் காலகட்டத்தில் வெளிப்படையான போராட்ட வடிவமும் பரந்துபட்ட தொழிலாளர்களின் அரசியல் வேலைநிறுத்தங்களும்; ‘டூமா’ இயங்கிய காலம் போன்ற கட்டங்களில் நாடாளுமன்ற போராட்ட வடிவமும் சில சமயங்களில் ஆயுதமேந்திய எழுச்சிகளாக வளர்ச்சியடைகிற நாடாளுமன்றத்துக்கு புறம்பான மக்கள் திரள் நடவடிக்கையும்; கடைசியாக, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி இராணுவம் உள்ளிட்ட அரச சக்திகள், வசதிகள் அனைத்தையும் பயன்படுத்துகிற வாய்ப்பைப் பெறுகையில், அரசு மட்டப் போராட்ட,வடிவங்கள்- என இத்தகைய போராட்ட வடிவங்களே பொதுவாக, பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் நடைமுறை அனுபவத்தில் முன்னிடம் பெறுகின்றன.
     எல்லாப் போராட்ட வடிவங்களையும் கசடறக் கற்றுத் தேர்ச்சி பெறுவது; போராட்டக் களத்தில் அவற்றை அறிவுக் கூர்மையுடன் ஒருங்கிணைப்பது; குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த வடிவங்கள் மிகச் சிறப்பாகப் பொருத்தமுடையனவாக உள்ளனவோ அவ்வடிவங்களில் போராட்டத்தை திறம்பட தீவிரப்படுத்துவது ஆகியவையே கட்சியின் கடமையாகும்.
ஊ)  அமைப்பு வடிவங்கள்    
     இராணுவங்களின் அமைப்பு வடிவங்களும் படைகளின் வெவ்வேறு துறைகளும், போர்முறைகள், போர்வடிவங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. போர்முறைகளும், போர்வடிவங்களும் மாறும்போது இராணுவங்களின் அமைப்பு வடிவங்களும் பயன்படுத்தப்படுகிற படைவகைகளும் மாறுபடுகின்றன. படைகளைத் திட்டமிட்ட முறையில் இயக்கி நிகழ்த்தும் போரில் (War of Manoeuvre), ஒன்று குவிக்கப்பட்ட குதிரைப்படையாலேயே பிரச்சனையானது பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, ஓரிடத்தில் நிலை நின்று நடத்தும் போரில் (War of position) குதிரைப்படையானது பங்கேதும் வகிப்பதில்லை அல்லது கீழான பங்கே வகிக்கிறது. இங்கு கனரக பீரங்கி, போர் விமானங்கள், வாயு, டாங்கிகள் ஆகியவையே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.
     படைகளின் எல்லாத் துறைகளும் கைவசம் இருப்பதை உறுதி செய்வதும்; அவற்றைக் குறைபாடுகளற்றவையாய் ஆக்குவதும், அவற்றின் செயற்பாடுகளை அல்லது நடவடிக்கைகளை ஒன்றிணைப்பதும் போர்க் கலையின் பணியாகும்.
     அரசியல்துறையில் உள்ள அமைப்பு வடிவங்களுக்கும் இது பொருந்தும். இங்கு இராணுவத்துறையில் இருப்பது போலவே அமைப்பு வடிவங்கள் போராட்ட வடிவங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. எதேச்சதிகாரக் காலகட்டத்தில் புரட்சியையே தம் முழு நேர ஊழியமாகக் கொண்டவர்களின் இரகசிய அமைப்புக்கள்; டூமா காலகட்டத்தில் கல்வி அமைப்புக்கள், தொழிற்சங்கம், கூட்டுறவு அமைப்புக்கள், நாடாளுமன்ற அமைப்புக்கள், (டூமா குழு) முதலியவை; மக்கள் திரள் நடவடிக்கை மற்றும் எழுச்சிக் காலகட்டத்தில் தொழிற்சாலை மற்றும் பட்டறைக் குழுக்கள், உழவர் குழுக்கள், வேலைநிறுத்தக் குழுக்கள், தொழிலாளர்- போர்வீரர் பிரதிநிதிகளின் குழுக்கள், புரட்சிகர இராணுவக் குழுக்கள் இந்த அமைப்பு வடிவங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி; இறுதியாக, தொழிலாளிவர்க்கத்தின் கரத்தில் அதிகாரம் குவிந்திருக்கும் காலகட்டத்தில் பாட்டாளிவர்க்கத்தின் அரசமைப்பு வடிவம் – இவையே பொதுவாகச் சொல்லப்போனால் முதலாளிவர்க்கத்துக்கு, எதிரான தனது போராட்டத்தில் பாட்டாளிவர்க்கம் சில குறிப்பிட்ட நிலைமைகளில் சார்ந்திருக்கக் கூடிய மற்றும் சார்ந்திருக்க வேண்டிய அமைப்பு வடிவங்களாகும்.
எ)  முழக்கம் – ஆணை
(The Slogan: The Directive)
     போரின் குறிக்கோள்களை அல்லது தனிப்பட்ட மோதல்களின் குறிக்கோள்களை வெளியீடு செய்கிற வகையில் திறமையாக வகுக்கப்பட்டவையும் துருப்புக்களிடையே சனரஞ்சகமாக இருக்கக் கூடியவையுமான முடிவுகள் சிலசமயங்களில் போர்முனையில் ராணுவத்தை ஊக்குவிக்கக் கூடிய, அதன் மன உறுதியைப் பேணிப் பாதுகாக்கின்ற சாதனம் என்ற வகையில் தீர்மானகரமான முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு போரின் போக்கு முழுவதற்கும் முதல்தர கனரகபீரங்கிகள் அல்லது முதல்தர விரைவுடாங்கிகள் எவ்வளவு முக்கியமானவையோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, பொருத்தமான ஆணைகள், முழக்கங்கள் துருப்புகளுக்கு விடுக்கப்படும் அறைகூவல்கள் ஆகியவையாகும்.
     அரசியல்துறையில் பல்வேறுவகைப்பட்ட கோரிக்கைகளையும் தேவைகளையுமுடைய பல லட்சக்கணக்கான மக்களைக் கையாள வேண்டியிருக்கும் பொழுது முழக்கங்கள் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு தலைமைக்குழு- உதாரணமாகப் பாட்டாளிவர்க்கத்தின் தலைமைக் குழு (அதாவது கட்சி) – போராட்டத்தின் நோக்கங்களை (இவை உடனடி நோக்கங்களாகவோ தொலைவான எதிர்காலத்திய நோக்கங்களாகவோ இருக்கலாம்) சுருக்கமாகவும் தெளிவாகவும் முறைப்படுத்திக் கூறுவதே முழக்கம் எனப்படும். போராட்டத்தின் வெவ்வேறு குறிக்கோள்களுக்கு ஏற்ப முழக்கங்களும் மாறுபடுகின்றன. குறிக்கோள்கள் ஒரு முழு வரலாற்றுக்காலகட்டத்தின் தனித்தனிக் கட்டங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ மட்டும் தழுவியதாகவோ அமையலாம். 19 ஆம் நூற்றாண்டின் எண்பதுகளில் ‘உழைப்பாளர் விடுதலைக் குழு’ வினரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட முழக்கமான “எதேச்சாதிகாரம் ஒழிக” என்ற முழக்கம் ஒரு பிரச்சார முழக்கம் (Propaganda slogan) ஆகும். அதன் நோக்கம், மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக் குழுக்களையும், தனிமனிதர்களையும் கட்சியின்பால் வென்றெடுப்பதாகும். ரக்ஷ்ய – ஜப்பானிய போர்க்காலத்தில், எதேச்சாதிகாரத்தின் உறுதியற்ற தன்மை தொழிலாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்குக் கிட்டத்தட்ட தெளிவாக தெரிந்த காலகட்டத்தில், இந்த முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கமாயிற்று (agitation slogan). ஏனெனில் அது இப்போது பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுக்க உருவாக்கப்பட்டது. 1917 பெப்ரவரிப் புரட்சிக்குச் சற்றே முந்திய காலகட்டத்தில் மக்கள் திரளினரின் கண்களில் ஜாரிசம் ஏற்கனவே  முற்றிலுமாக மதிப்பிழந்திருந்த போது, ”எதேச்சதிகாரம் ஒழிக” என்ற முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கம் என்ற நிலையிலிருந்து ஒரு நடவடிக்கை முழக்கமாக (action slogan) மாற்றப்பட்டது காரணம், அம்முழக்கமானது அப்போது ஜாரிசத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்குப் பரந்துபட்ட மக்கள் திரளினரைத் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பிப்ரவரி புரட்சியின் போது இம்முழக்கமானது ஒரு கட்சியின் ஆணை (directive) ஆகியது. அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் ஜாரிச அமைப்பின் குறிப்பிட்ட நிறுவனங்களையும் குறிப்பிட்ட ஸ்தானங்களையும் கைப்பற்றுவதற்கான நேரடியான அறைகூவலாயிற்று. ஏனெனில், அது ஏற்கனவே ஜாரிசத்தைத் தூக்கியெறிந்து அதை நிர்மூலமாக்க வேண்டிய விசயமா(க்)*கிவிட்டது. ஆணை என்பது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துகின்ற ஒன்றாகும். அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான கட்சியின் நேரடியான அறைகூவலாகும். இந்த அறைகூவலானது மக்கள் திரளினரின் தேவைகளைச் சரியாகவும் பொருத்தமாகவும் முறைப்படுத்தியிருக்குமேயானால், அதற்கான நேரம் உண்மையாகவே கனிந்திருக்குமேயானால், பரந்துபட்ட உழைப்பாளி மக்களால் அது மேற்கொள்ளப்பட்டுவிடும்.
முழக்கங்களை ஆணைகளுடன் சேர்த்துக் குழப்புவது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை. ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் இணைத்துக் குழப்புவது என்பது காலம் கனிவதற்கு முன்பு அல்லது காலம் கடந்த பிறகு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கை போல அபாயகரமானது. அது சில சமயங்களில் அழிவேற்படுத்தும்.1917 ஏப்ரலில் வழங்கப்பட்ட “எல்லா அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்கிற முழக்கம் ஒரு கிளர்ச்சி முழக்கமாகும். “ எல்லா அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கத்தின் கீழ் 1917 ஏப்ரலில் பெட்ரோகிராடில் நடந்ததும் பனிக்கால மாளிகையைச் சுற்றி வளைத்த துமான மிகப் பிரபலமான ஆர்ப்பாட்டமானது இம்முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். காலம் கனிவதற்கு முன்னர் செய்யப்பட்ட முயற்சியானதால் அது அழிவை ஏற்படுத்தியது. ஒரு கிளர்ச்சி முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் குழப்புவது பற்றிய ஒரு அபாயகரமான உதாரணமே அது. இந்த ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தவர்களின் மீது கட்சி கண்டனம் தெரிவித்தது சரியானதாகும். ஏனெனில் இம்முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றுவதற்குத் தேவையான நிலைமை இன்னும் தோன்றவில்லை என்பதையும் காலம் கனிந்து வருவதற்கு முன்பு பாட்டாளிவர்க்கம் எடுக்கும் நடவடிக்கை அதன் சக்திகளின் தோல்வியில் போய் முடியும் என்பதையும் கட்சி அறிந்திருந்தது.
      மற்றொருபுறம், பகைவன் விரித்துள்ள வலையில் விழாமல் அணிகளைக் காப்பாற்றுவதற்காக எந்த ஒரு தீர்மானிக்கப்பட்ட முழக்கத்தை அல்லது ஆணையை அதற்கான காலம் கனிந்திருந்த போதிலும் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டிய அல்லது மாற்றி அமைக்க வேண்டிய தேவையை கட்சி எதிர்கொள்ள வேண்டியதும் உண்டு; அல்லது ஆணையை நிறைவேற்றுவதை மேலும் சாதகமான தருணத்திற்கு ஒத்திப்போட வேண்டிய தேவையைக் கட்சி எதிர்நோக்க வேண்டிய சமயங்களும் உண்டு. ஜூன் 1917 பெட்ரோகிராடில் இத்தகைய ஒரு நிகழ்வு ஏற்பட்டது. கவனத்தோடு தயாரிப்பு செய்யப்பட்டிருந்தும் ஜூன் 10 ஆம் நாள் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுமான தொழிலாளர்-போர்வீரர் ஆர்ப்பாட்டத்தை, மாறிய சூழ்நிலையின் காரணமாக நமது கட்சியானது திடீரென ரத்துச் செய்தது.
கிளர்ச்சி முழக்கங்களை நடவடிக்கை முழக்கங்களாகவும் அல்லது நடவடிக்கை முழக்கங்களைத் திட்டவட்டமான ஆணைகளாகவும் திறமையோடு தக்க தருணத்தில் மாற்றுவதும் அல்லது சூழ்நிலைமை கோரினால் எந்த ஒரு குறிப்பிட்ட முழக்கத்தையும் அது சனரஞ்சகமானதாக இருந்த போதும் அதற்கான காலம் கனிந்திருந்த போதிலும் செயல்படுத்துவதை ரத்து செய்வதற்கு தேவையான வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதும் கட்சியின் கடமையாகும்..
                                        11.   போர்த் தந்திரத் திட்டம்
அ. வரலாற்று ரீதியான திருப்பங்கள், போர்த் தந்திரத் திட்டங்கள்.
     கட்சியின் போர்த்தந்திரம், நிலையானதும் எல்லாக் ’கட்டத்துக்குமாக நிர்ணயிக்கப்பட்டதுமான ஒன்றல்ல. வரலாற்றின் திருப்பங்களுக்கு ஏற்பப் போர்த் தந்திரமும் மாறுகிறது. போர்த்தந்திரத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் கீழ்க்காணும் உண்மையில் வெளிப்படுத்தப்படுகின்றன: வரலாற்றின் திருப்பம் ஒவ்வொன்றுக்கும் ஏற்ப ஒரு தனிப் போர்த்தந்திரத் திட்டம் உருவாக்கப்படு கிறது. அது அத்திருப்பத்திற்குப் பிறகு மற்றொரு திருப்பம் உருவாகும் வரையுள்ள காலகட்டம் முழுவதிலும் செயல்படக் கூடியதாகிறது. போர்த் தந்திரத் திட்டமானது புரட்சிகரச் சக்திகளால் மேற்கொள்ளப்படும் முதன்மைத் தாக்குதல் எத் திசையில் அமைய வேண்டும் என்பதையும் சமுதாயப் போர்முனையில் தாக்குதலின் திசைக்கு ஏற்பப் பரந்துபட்ட மக்கள் திரளை எங்கெங்கு எப்படி நிறுத்துவது என்பதையும் வரையறுக்கிறது. ஒரு வரலாற்றுக் கட்டம் தனக்கேயுரிய பிரத்தியேக அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே இக்கட்டத்துக்குப் பொருத்தமான ஒரு போர்த்தந்திரத் திட்டம் மாறுபட்ட பிரத்தியேக அம்சங்களைக் கொண்ட மற்றொரு வரலாற்றுக் கட்டத்துக்குப் பொருத்தமானதாக இராது என்பது தெளிவு. வரலாற்றில் நேரும் ஒவ்வொரு திருப்பத்திற்கும் ஏற்றவாறு, அத்திருப்பத்தை சமாளிக்க இன்றியமையாத போர்த்தந்திரத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அத்திருப்பம் கோரும் கடமைகளுக்குத் தக்கபடி அமைக்கப்படும்.
     போர் நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும். கொல்சாக்குக்கு எதிரான போருக்குத் தீட்டப்பட்ட போர்த்தந்திரத் திட்டம் டெனிக்கினுக்கு எதிரான போருக்குப் பொருத்தமானதாக இருந்திருக்க முடியாது. டெனிக்கினுக்கு எதிரான போர் புதிய போர்த்தந்திரத் திட்டத்தைக் கோரியது. இப்புதிய போர்த்தந்திரத் திட்டமும் 1920 இல் போலந்துக்காரர்களுக்கு எதிராக நடந்த போருக்கு ஏற்றதாக இருந்திராது. ஏனெனில் இந்த மூன்று நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் முதன்மைத் தாக்குதலின் திசையும் முக்கிய போர்ப்படைகள் நிறுத்தப்பட்டிருந்த விதமும் வெவ்வேறாகவே இருந்திருக்க முடியும்.
     ரக்ஷ்யாவின் சமீபத்திய வரலாற்றில் மூன்று முக்கியமான திருப்பங்கள் காணப்படுகின்றன. இத் திருப்பங்களின் விளைவாக நமது கட்சியின் வரலாற்றில் மூன்று வெவ்வேறான போர்த்தந்திரத் தந்திரத் திட்டங்கள் தோன்றின. கட்சியின் போர்த் தந்திரத் திட்டங்கள், பொதுவாக எவ்வாறு புதிய வரலாற்று மாற்றங்களுக்கு ஏற்ப மாறுகின்றன என்பதைக் காட்ட இத் திருப்பங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவது அவசியம்.
ஆ. முதல் வரலாற்று ரீதியான திருப்பமும் ரக்ஷ்யாவில் பூர்சுவா    சனநாயகப் புரட்சியை நோக்கிய பாதையும்
     இந்தத் திருப்பமானது, இந்நூற்றாண்டின் துவக்கத்தில், ரக்ஷ்ய-ஜப்பானியப் போர்க்காலகட்டத்தில் துவங்கியது. அப்போது, ஜாரின் படைகளின் தோல்வியும் ரக்ஷ்யத் தொழிலாளர்களின் பெரும் அரசியல் வேலை நிறுத்தங்களும் எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த பொதுமக்களையும் உலுக்கி விட்டு அவர்களை அரசியல் போர்க்களத்திற்குக்குள் உந்தித் தள்ளின. 1917 பிப்ரவரி புரட்சி நாட்களில் இத்திருப்பம் முற்றுப் பெற்றது.
     இந்தக் காலக்கட்டத்தில் நமது கட்சியில் இரண்டு போர்த்தந்திரத் திட்டங்கள் பிரச்சனைக்குட்பட்டன. ஒன்று, (பிளக்கனே,மார்ட்டோல் 1905 இல் முன் வைத்த) மென்க்ஷெவிக்குகளின் போர்த்தந்திரத் திட்டம்: மற்றொன்று (தோழர் லெனின், 1905 இல் முன் வைத்த) போல்க்ஷெவிக்குகளின் போர்த்தந்திரத் திட்டம்.
     மென்க்ஷெவிக் போர்த் தந்திரம், ஜாரிசத்துக்கு எதிரான முதன்மைத் தாக்குதல், மிதவாத முதலாளிவர்க்கத்துக்கும் பாட்டாளிவர்க்கத்துக்கும் இடையிலான கூட்டணி என்ற மார்க்கத்தின் வழியாகச் செலுத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டது. அச்சமயத்தில் புரட்சியானது, ஒரு பூர்சுவா புரட்சியாகக் கருதப்பட்டது என்ற அடிப்படையில் இந்தப் போர்த்தந்திரத் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டியது மிதவாத முதலாளிய வர்க்கம் என்றும், முதலாளிய வர்க்கத்தின் பின்னால் நின்று கொண்டு முதலாளிகளுக்குச் ‘சொல்லி (க்கொடுக்க வேண்டிய*) த்தர வேண்டிய” ‘தீவிர இடதுசாரி எதிர்க்கட்சி’ என்ற பாத்திரத்தைத்தான் பாட்டாளிவர்க்கம் வகிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. முக்கியப் புரட்சிச் சக்திகளின் ஒன்றான விவசாயி வர்க்கமோ முற்றிலும் அல்லது கிட்டத்தட்ட முற்றிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத் திட்டமானது, ரக்ஷ்யா போன்ற நாட்டிலுள்ள இலட்சக் கணக்கான விவசாயிகளைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாததனால் அது கேடுகெட்ட கற்பனைவாதத் திட்டமாகவே அமைந்தது என்பதைப்புரிந்து கொள்வது கடினமானதல்ல; புரட்சியின் தலைவிதியை மிதவாத முதலாளி  வர்க்கத்திடம் (பூர்சுவா வர்க்கத்திடம் மேலாண்மையை) ஒப்படைத்து விட்டதால் அது பிற்போக்கானது என்பதையும் புரிந்து கொள்வது கடினமானதல்ல; ஏனெனில் புரட்சியில் முழு வெற்றியை சாதிக்கும் அக்கறை மிதவாத முதலாளி வர்க்கத்திற்கு இல்லை; ஜாரிசத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க அது எப்போதும் தயாராக இருந்தது.
     போல்க்ஷெவிக் போர்த்தந்திரமோ (தோழர் லெனினின் “சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகத்தின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற நூலைப் பார்க்கவும்) ஜாரிசத்துக்கு எதிரான முதன்மைத் தாக்குதலைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாய வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டணி என்ற பாதையின் வழியாகச் செலுத்த வேண்டும் என்றும், மிதவாத முதலாளிய வர்க்கத்தைச் செயலற்றதாக்க வேண்டும் என்றும் திட்டமிட்டது. பூர்சுவா சனநாயகப் புரட்சியில் முழு வெற்றியைச் சாதிப்பதில்மிதவாத முதலாளிய வர்க்கத்திற்கு அக்கறை இல்லை என்பதையும் புரட்சி வெற்றி அடைவதை விட தொழிலாளர்- விவசாயிகள் நலன்களைக் கைவிட்டு ஜாரிசத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதையே அது அதிகம் விரும்பியது என்பதையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட இந்தப் போர்த்தந்திரத் திட்டமானது, ரக்ஷ்யாவிலுள்ள முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம் என்ற வகையில் பாட்டாளிவர்க்கத்திற்குப் புரட்சி இயக்கத்தின் மேலாண்மையை வழங்கியது. இத் திட்டம் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதற்குக் காரணம், அது புரட்சியின் உந்து சக்திகளைச் சரியாகக் கணக்கிட்டது மட்டுமல்ல, பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் (பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை) பற்றிய கருத்தைக் கருநிலையில் கொண்டு இருந்தது என்பதும் ரக்ஷ்யாவில் புரட்சியின் அடுத்த, மேலும் உயர்ந்த  கட்டத்தைத் தீர்க்கமாக முன்கூட்டியே பார்த்து, அக்கட்டத்தை நோக்கிச் செல்வதை எளிதாக்கியது என்பதாகும். பிற்பாடு 1917 பிப்ரவரி வரை புரட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியானது இந்தப் போர்த்தந்திரத் திட்டம் சரியானது என்பதை முற்றிலும் நிரூபித்தது.
இ) இரண்டாவது வரலாற்று ரீதியான திருப்பமும் ரக்ஷ்யாவில் பாட்டாளிவர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்றமையும் பாதையும்.
1917 பெப்ரவரி புரட்சியுடன், ஜாரிசம் தூக்கியெறியப்பட்ட பிறகு இரண்டாவது திருப்பம் தொடங்கியது. அப்போது ஏகாதிபத்தியப் போரானது உலகம் முழுவதும் முதலாளியத்தை அரித்து, அதன் உயிரைப் போக்கிக் கொண்டிருந்த சீர்கேடுகளை அம்பலப்படுத்தியிருந்தது; நாட்டின் உண்மையான அரசாங்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதிருந்த மிதவாத முதலாளிவர்க்கம் பெயரளவு அதிகாரத்தை (தற்காலிக அரசாங்கம்) வைத்திருப்பதற்கு மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. தொழிலாளர், மற்றும் போர்வீரர் பிரதிநிதிகளின் சோவியத்துக்கள், தம்கரங்களில் உண்மையான அதிகாரத்தைப் பெற்றவுடன் அதைத் தேவையான முறையில் பயன்படுத்துவதற்கான அனுபவமோ, மனவுறுதியோ இல்லாமலிருந்தன. போர்முனையில் போர்வீரர்களும், பின்புறத்தில் தொழிலாளரும் விவசாயிகளும் போரினாலும் பொருளாதாரச் சீர்குலைவினாலும் தாங்க முடியாத துன்பத்தில் அலற்றிக்* கொண்டிருந்தனர். “இரட்டை அதிகார” மற்றும் ”தொடர்புக்குழு” ஆட்சியானது உள் முரண்பாடுகளால் பிளவுண்டு, போரை நடத்தவும் முடியாமல், சமாதானத்தைக் கொண்டுவரவும் முடியாமல் எதைச் செய்யவும் இயலாமல் இட்டுக்கட்டான நிலையினின்று மீளும் வழி காணத் தவறியதோடல்லாமல் நிலைமையை மேலும் குழப்பத் துக்குள்ளாக்கியது. இந்தக் காலகட்டம் 1917 அக்ரோபர் புரட்சியுடன் முற்றுப் பெற்றது.
     அச்சமயத்தில் சோவியத்துக்களின் இரு போர்த்தந்திரத் திட்டங்கள் பிரச்சனைக்கு வந்தன. மென்க்ஷெவிக்-சோசலிசப் புரட்சியாளர் திட்டம் ஒன்று; போல்க்ஷெவின் திட்டம் மற்றொன்று. மென்க்ஷெவிக்-சோசலிசப் புரட்சியாளர் திட்டம், முதலில் சோவியத்துக்களுக்கும் தற்காலிக அரசாங்கத் துக்குமிடையேயும், புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. பிறகு சனநாயக மாநாடு துவக்கப்பட்ட (செப்டம்பர், 1917) சமயத்தில் இறுதிவடிவம் எடுத்தது. சோவியத்துக்களிடமிருந்த அதிகாரத் தைப்படிபடியாக, ஆனால் ஒரு நிலையாக அவற்றிடமிருந்து அகற்றி நாட்டில் எல்லா அதிகாரத்தையும் ஒரு எதிர்கால பூர்சுவா நாடாளுமன்றத்தின் முன்மாதிரியான “பூர்சுவா பாராளுமன்றத்தின்”  கரங்களில் குவிக்கும் வழியை மேற்கொண்டது. சமாதானமா போரா என்கின்ற பிரச்சனைகள், விவசாய-தொழிலாளர் பிரச்சனைகள், தேசியப் பிரச்சனைகள் ஆகியன அரசியல் நிர்ணயசபைக் கூட்டம் கூடும்வரை தள்ளிப் போடப்பட்டன. அரசியல் நிர்ணயசபைக் கூட்டமோ ஓர் வரையறையற்ற காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. “அரசியல் நிர்ணயசபைக்கே எல்லா அதிகாரமும்”- சோவியத் புரட்சியாளர்களும் மென்க்ஷெவிக்குகளும் இப்படித்தான் தங்கள் போர்த்தந்திரத் திட்டத்தை வகுத்தனர். அது, ஒரு பூர்சுவா வர்க்க சர்வாதிகாரத்துக்கு வழிகோலும் திட்டமாகும்; நன்றாக சோடிக்கப்பட்ட “பரிபூரண சனநாயக” சர்வாதிகாரம்தான் அது என்பது உண்மை; ஆனால் அது ஒரு பூர்சுவா வர்க்க சர்வாதிகாரமே.
     போல்க்ஷெவிக் போர்த்தந்திரமோ (1917 ஏப்ரலில் பிரசுரிக்கப்பட்ட தோழர் லெனினின் “ஆய்வுரைகளைப் பார்க்கவும்) பாட்டாளிவர்க்கம், ஏழைவிவசாயிகளின் ஆகியோரின் ஒன்றுபட்ட சக்திகளைக் கொண்டு முதலாளிவர்க்கத்தின் அதிகாரத்தை அழித்தொழிக்கும் மார்க்கத்தினூடே, சோவியத் குடியரசு என்ற வடிவத்தில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை ஒழுங்கமைத்தல் என்ற மார்க்கத்தினூடே முதன்மைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது. ஏகாதிபத்தியத்தோடு முறிவேற்படுத்திக் கொண்டு போரிலிருந்து விலகுதல்; முன்னாள் ரக்ஷ்யப் பேரரசிலிருந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை விடுதலை செய்தல்; நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்; சோசலிசப் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதற்கான நிலைமைகளுக்கான தயாரிப்பு செய்தல்- அக்காலகட்டத்தில் போல்க்ஷெவிக் போர்த்தந்திரத் திட்டத்திலிருந்த அம்சங்கள் இத்தகையன. இத் திட்டம் முக்கியத்துவம் உடையதாக இருப்பதற்கான காரணம், ரக்ஷ்யாவில் புதிய, பாட்டாளிவர்க்கப் புரட்சியின் உண்மையான உந்துசக்திகளை அது சரியாக கருத்தில் கொண்டது என்பது மட்டுமல்ல; மேற்கத்திய நாடுகளில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டவிழ்த்து விடவும் உதவியது., அவ்வாறு கட்டவிழ்த்து விடுவதை விரைவுபடுத்தியது என்பதாகும். அக்டோபர் புரட்சிவரை பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிகள் இந்த யுத்த தந்திரத் திட்டத்தின் சரியான தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தின.
ஈ.மூன்றாவது வரலாற்று ரீதியான திருப்பமும் ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சியை நோக்கிய பாதையும் 
     மூன்றாவது திருப்பம் அக்டோபர் புரட்சியுடன் தொடங்கியது. அப்போது மேற்கு நாடுகளில் இரு ஏகாதிபத்திய கூட்டுக்களிடையே நடந்த ஜீவமரணப் போராட்டம் தன் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. மேற்குநாடுகளில் புரட்சிகர நெருக்கடிகள் தீவிரமடைந்து கண்கூடாகிக் கொண்டிருந்தது.; ரக்ஷ்யாவில், பூர்சுவா அரசாங்கம் ஓட்டாண்டியாகி, முரண்பாடுகளில் சிக்கித் தவித்து பாட்டாளிவர்க்கப் புரட்சியின் தாக்குதலால் வீழ்ந்திருந்தது. வெற்றிகரமான பாட்டாளிவர்க்கப் புரட்சி ஏகாதிபத்திய உறவை முறித்துக் கொண்டு, போரிலிருந்து விலகி, இதன் காரணமாக மேற்கு நாடுகளில் ஏகாதிபத்தியக் கூட்டணிகள் என்ற வடிவெடுத்த கடும் பகைவர்களைப் பெற்றிருந்தது; நிலப்பிரபுக்களின் நிலங்களைக் கைப்பற்றவும், முதலாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்யவும், தேசிய இனங்களை விடுதலை செய்யவும் புதிய சோவியத் அரசாங்கம் பிறப்பித்த ஆணைகள் உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான உழைபாளிகளினதும் நம்பிக்கையை ஈட்டியிருந்தன. இந்தத் திருப்பம் சர்வதேச அளவிலானது. ஏனெனில், முதன்முறையாக  மூலதனத்தின் சர்வதேச முனையில் உடைப்பேற்படுத்தப்பட்டது. முதலாளியத்தைத் தூக்கியெறிதல் என்ற பிரச்சனைக்கு முதன்முறையாக ஒரு நடைமுறைத் தீர்வு வழங்கப்பட்டது, இது அக்டோபர் புரட்சியை. ஒரு தேசிய, ரக்ஷ்ய சக்தி என்ற நிலையிலிருந்து ஒரு சர்வதேச சக்தியாக உருமாற்றியது. ரக்ஷ்யத் தொழிலாளர்களைச் சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் பிற்பட்டப் படைப்பிரிவு என்ற நிலையிலிருந்து அதன் முன்னணிப்படை என்ற நிலைக்கு மாற்றியது. ரக்ஷ்யப் பாட்டாளிவர்க்கம் முழு ஈடுபாட்டுடன் நடத்திய தனது போராட்டங்களின் மூலம் மேற்குநாடுகளின் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட கீழைநாடுகளையும் தட்டியெழுப்பியது. இந்தத் திருப்பத்தின் வளர்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. ஏனெனில் அது இன்னும் ஒரு சர்வதேச அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் அதன் உள்ளடக்கமும் பொதுத்திசையும் ஏற்கனவே போதுமான அளவு தெளிவாகியுள்ளன.
     அச் சமயத்தில் ரக்ஷ்யாவில் அரசியல்  வட்டாரங்களில் இரு போர்த் தந்திரத் திட்டங்கள் பிரச்சனையாயிருந்தன. ஒன்று எதிர்ப்புரட்சியாளர்களின் திட்டம்; இவர்கள், மென்க்ஷெவிக்குகள், சோசலிசப் புரட்சியாளர்கள் ஆகியோரில் செயலாற்றல் மிகுந்த பிரிவுகளைத் தங்கள் அமைப்புக்களில் ஈர்த்திருந்தனர். மற்றொன்று போல்க்ஷெவுக்குகளின் திட்டம்.
     எதிர்ப்புரட்சியாளர்களும் செயலாற்றல் மிக்க சோசலிச புரட்சியாளர் களும் மென்க்ஷெவிக்குகளும் புரட்சியினால் அதிருப்தியுற்ற சக்திகள் அனைத்தையும் ஒரே முகாமுக்குள் ஐக்கியப்படுத்தும் மார்க்கத்தையொட்டித் திட்டம் ஒன்றை வகுத்தனர். போர்முனையிலும் பின்புறத்திலும் இருந்த பழைய இராணுவ அதிகாரிகள்; எல்லைப் பிரதேசத்திலிருந்த பூர்சுவா- தேசிய அரசாங்கங்கள்; புரட்சியால் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த முதலாளிகளும் நிலப்பிரபுக்களும்; தலையீட்டுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த நேசநாடுகளின் கையாட்கள்; இன்ன பிறரே அதிருப்தியுற்ற சக்திகள், கலகங்கள் மூலமோ அந்நிய தலையீட்டின் மூலமோ சோவியத் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து ரக்ஷ்யாவில் முதலாளிய அமைப்பைத் திரும்பவும் கொணரும் பாதையை நோக்கித் தம் திட்டத்தை இவர்கள் செலுத்தினர்.
     அதற்கு மாறாக போல்க்ஷெவிக்குகளோ, ரக்ஷ்யாவில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நாட்டுக்குள் வலுப்படுத்தி, உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ரக்ஷ்ய பாட்டாளிகளின் முயற்சிகளை ஐரோப்பியப் பாட்டாளிகளின் முயற்சிகளுடனும் ஒடுக்கப்பட்ட கீழைத்தேசங்களின் முயற்சிகளுடனும் ஒருங்கிணைப்பதன் மூலம் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடைபெறும் களத்தின் பரப்பினை உலகின் எல்லா நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது என்ற மார்க்கத்துனூடே திட்டமிட்டனர். இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது, “பாட்டாளிவர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்” என்ற பிரசுரத்தில் தோழர் லெனின் இந்தப் போர்த்தந்திரத் திட்டம் பற்றி வழங்கியுள்ள சரியான, துல்லியமான விளக்கமாகும். அதாவது “எல்லா நாடுகளிலும் புரட்சியை வளர்க்கவும் ஆதரிக்கவும் எழச் செய்யவும் வேண்டி ஒரு நாட்டில் (ஒருவரது சொந்த நாட்டில்- ஜே.ஸ்டாலின்) உயர்ந்த பட்சம் இயன்றது அனைத்தையும் செய்தல்.” இந்தப் போர்த்தந்திரத்தின் மதிப்பு, அது உலகப் புரட்சியின் உந்துசக்திகளைச் சரியாகக் கருத்தில் கொண்டது என்பதில் மட்டும் பொதிந்திருக்கவில்லை; சோவியத் ரக்ஷ்யா, உலகம் முழுவதிலும் உள்ள  புரட்சிகர இயக்கங்களின் கவனத்தின் குவிமுனையாக, மேற்கு நாடுகளின் தொழிலாளர்கள், கீழைக் காலணிநாடுகள் ஆகியவற்றின் விடுதலைக்கான பாதையாக பின்னர் உருமாறப் போவதை முன்கூட்டியே பார்த்து, அந்த உருமாற்றப் போக்கைச் சாத்தியமாக்கியது என்பதிலும் இந்தப் போர்த்தந்திரத்தின் மதிப்பு அடங்கியுள்ளது.  
     உலகம் முழுவதிலும் புரட்சியின் பின்னர் வளர்ந்ததும் ரக்ஷ்யாவில் சோவியத் அதிகாரம் ஐந்தாண்டுகளாக நிலவிவருவதும் இந்தப் போர்த்தந்திரத் திட்டத்தின் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளன. ஒரு பக்கம் சோவியத் அரசாங்கத்தைத் தூக்கியெறிய பலமுயற்சிகளைச் செய்த எதிர்ப்புரட்சியாளர்களும் சோசலிசப் புரட்சியாளர்களும் மென்க்ஷெவிக்குகளும் இப்போது வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள் என்பதும், இன்னொரு பக்கம் சோவியத் அரசாங்கமும் சர்வதேச பாட்டாளிவர்க்க அமைப்பும் உலகப் பாட்டாளிவர்க்கக் கொள்கையை நிர்ணயிக்கும் முக்கிய கருவிகளாக ஆகிவருகின்றன என்பதும், இது போன்ற இதர உண்மைகளும் போல்க்ஷெவி க்குகளின் போர்த்தந்திரத் திட்டத்துக்கு ஆதரவான கண்கூடான சான்றுகளாகும்.
===================================================================
மூலம் :
பிராவ்தா எண் ;- 5 மார்ச் 14, 1923 ஒப்பம் ; ஜே.ஸ்டாலின் ஸ்டாலின் தொகுப்பு நூல் எண். 5

பாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்ற
-ஒரு தொகுப்பு (லெனின், ஸ்டாலின், மாவோ) சமரன் தமிழ் வெளியீடு 1988,  பக்கங்கள் 1-22
இணையத் தமிழ்ப் பதிப்பு: பாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி மேற்கோள்-1
==================================================================

No comments:

Post a Comment