Monday 29 August 2011

ருக்ஷ்யப் பொதுவுடைமையாளர்களின் அரசியல் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் பற்றி - ஜே.வி.ஸ்டாலின்

ருக்ஷ்யப் பொதுவுடைமையாளர்களின்
அரசியல் போர்த்தந்திரம் மற்றும்
செயல்தந்திரம் பற்றி
-    ஜே.வி.ஸ்டாலின்
(ஒரு சிறு வெளியீட்டின் சுருக்கம்)
     (அ) கலைச்சொல் வரையறையும் ஆய்வுப்பொருளும்)
1.  அரசியல் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டு எல்லைகளும், அவற்றின் பயன்பாட்டுப் புலமும்
பாட்டாளிவர்க்க இயக்கமானது, “அகவயம் மற்றும் புறவயம்” என்ற இரு பகுதிகளைக் கொண்டுள்ளது எனக் கொண்டால்,பின்பு சந்தேகமின்றி போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் செயல்தளம், இயக்கத்தின் அகவயப்பகுதியின் வரம்புக்கு உட்பட்டதாக இருக்கிறது. புறவயமானது, பாட்டாளிவர்க்கம் அதன் விருப்பம், அதன் கட்சியின் விருப்பம் ஆகியவற்றிற்கு வெளியேயும், பாட்டாளிவர்க்கத்தைச் சுற்றிலும் சுதந்திரமாக நடைபெறும் “வளர்ச்சி முறையை” உள்ளடக்கியுள்ளது. மேலும், இந்த நிகழ் முறையே வளர்ச்சியே (மொ.பெ) – இறுதிப் பகுப்பாய்வில், மொத்த சமூகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. அகவயமானது, பாட்டாளி வர்க்கத்தினுள் புறச்செயற்பாடுகளின் காரணமாக பாட்டாளிவர்க்கத்தின் உணர்வில் தோன்றும் பிரதிபலிப்புக்களின் நிகழ்முறைகளை உள்ளடக்கி யிருக்கிறது. புறச் செயற்பாடுகள், பின் சொன்னதை – அகச் செயற்பாடுகளை – துரிதப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது; ஆனால் அதைத் தீர்மானிப்பதாக உள்ளது.

2.  மார்க்சியக் கோட்பாடானது முதன்மையாக, தன்னுடைய வளர்ச்சியிலும் தாழ்விலும் உள்ள புறவய நிகழ்முறைகளை ஆராய்கிறது. தவிர்க்க இயலாதவாறு அதிகாரத்துக்கு வரும் வகையில் எழுகின்ற வர்க்கம் அல்லது வர்க்கங்களின் அல்லது தவிர்க்க இயலாதவாறு வீழ்ந்து கொண்டுள்ள, வீழ்ந்தாக வேண்டிய வர்க்கம் அல்லது வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது.

3.   செயல்திட்டம்
       இந்தக் கோட்பாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மார்க்சியச் செயல் திட்டமானது, வளர்கின்ற வர்க்க இயக்கத்தின், இந்தக் காலகட்டத்தில், பாட்டாளிவர்க்க இயக்கத்தின் – முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கான, அல்லது முதலாளித்துவக் காலகட்டம் முழுமைக்குமான நோக்கங்களை வரையறுக்கிறது. (குறைந்த பட்ச செயல்திட்டம் மற்றும் அதிகபட்ச செயல்திட்டம்)

4.  போர்த்தந்திரம்
        இது செயல்திட்டத்தால் வழிகாட்டப்படும். தேசிய அளவிலும் மற்றும் சர்வதேசிய அளவிலும் போராடும் சக்திகளின் கணிப்பின் மேல் வகுக்கப்படுவது. போர்த்தந்திரமானது, புரட்சிகர பாட்டாளிவர்க்க இயக்கம், தொடக்க நிலையிலும் வளர்ந்து செல்கின்ற சக்திகளின் உறவின் கீழும் மிகப் பெரும் விளைவுகளைச் சாதிக்கும் நோக்கத்துடன், வழிநடத்திச் செல்லப்பட வேண்டிய, பொதுவான வழியையும் பொதுவான திசையையும் வரையறுக்கிறது. இதற்கு ஏற்றவாறு, இது, சமுதாய முனையில், பாட்டாளிவர்க்கம் மற்றும் அதன் நட்பு சக்திகளின் நிலைப்பாட்டைப் பற்றிய ஒரு வரைபடத்தின் எல்லைக் கோட்டை வரையறுக்கிறது. இது பொதுவான நிலைப்பாடு (General Disposition) ஆகும். “சக்திகளின் நிலைப்பாட்டுத் திட்டத்தை விளக்குதல்” என்பதைப் போர்த்தந்திரம்,செயல்தந்திரம் இவையிரண்டாலும் செயல்படுத்தப்படுகின்ற உண்மையான(பருண்மையான மேலும் நடைமுறையுடன் கூடிய) செயல்பாட்டுச் சக்திகளாக பகிர்தல் ஆகியவற்றோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளுதல் கூடாது. பாட்டாளிவர்க்கப் பாசறையின் வழியையும், போராடும் சக்திகளின் நிலைப்பாட்டையும் வரையறுத்தல் என்ற அளவிற்குப் போர்த்தந்திரமானது சுருக்கப்பட்டுள்ளது என இது குறிக்காது. இதற்கு மாறாக, இது போராட்டத்தை வழிநடத்துகிறது; ஒரு திருப்பத்தின் காலப்பகுதி முழுவதும் கைவசமுள்ள சேமிப்புக்களைத் திறமையுடன் பயன்படுத்தியும், செயல்தந்திரத்தை ஆதரிக்கும் குறிக்கோளுடன் சூழ்ச்சித் திறமையுடன் செயலாற்றியும் அது அப்போதைய செயல்தந்திரத்தில் திருத்தங்களைப் புகுத்துகிறது.
5.  செயல்தந்திரங்கள்  
       போர்த்தந்திரத்தாலும் உள்நாட்டிலும் அண்டைநாடுகளிலும் உள்ள புரட்சி இயக்கங்களின் அனுபவத்தாலும் வழிகாட்டப்படுகிறது; ஒவ்வொரு தருணத்திலும் பாட்டாளி வர்க்கத்துக்குள்ளும் அதன் கூட்டாளிகளுக்குள்ளும் எதிரியின் பாசறையிலும் இருக்கின்ற சக்திகளின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது; (பண்பாட்டின் உயர்ந்த அல்லது தாழ்ந்த மட்டம், அரசியல் உணர்வின் உயர்ந்த அல்லது தாழ்ந்த தரம், நிலவும் மரபுகள், இயக்க வடிவங்கள், தலையாய மற்றும் துணை அமைப்பு வடிவங்கள்) எதிரியின் முகாமில் உள்ள இணக்கமின்மையையும், குழப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பரந்துபட்ட மக்கள் திரளைப் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின்பால் வென்றெடுக்கவும், போர்த்தந்திரத்தின் வெற்றியை மிகமிக நிச்சயமாகத் தயாரிக்கும் வகையில் சமூக முனையில் அவர்களது போரிடும் நிலைகளில் அவர்களை வைக்கவும் திட்டவட்டமான வழியைச் சுட்டிக் காட்டுகிறது. இதற்குப் பொருத்தமாக அவை கட்சியின் முழக்கங்களையும் ஆணைகளையும் வழங்குகின்றன அல்லது மாற்று கின்றன.
6.  போர்த்தந்திரம்
        வரலாற்றின் திருப்பங்களிலும் அடிப்படையான மாற்றங்களிலும் மாறுகிறது; இது ஒரு திருப்பத்திலிருந்து அடுத்த திருப்பம் வரையிலுள்ள (அடிப்படையான மாற்றம்) காலப் பகுதியைத் தழுவுகிறது. எனவே, இக் காலப்பகுதி முழுவதற்கும் பாட்டாளிவர்க்க நலன்களை உள்ளடக்கிய பொதுக் குறிக்கோளின்பால் அது இயக்கத்தை நெறிப்படுத்துகிறது. அதன் நோக்கம் இக் காலப்பகுதி முழுவதின் போதும் தொடுக்கப்படுகின்ற வர்க்கங்களின் போரில் வெல்வதாகும்; எனவே, இந்தக் காலப்பகுதியின் போது அது மாற்றமின்றி இருக்கிறது.
     மறுபுறம், செயல்தந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தின், ஒரு குறிப்பிட்ட போர்த்தந்திரக் காலப்பகுதியின், அடிப்படையிலான ஏற்ற இறக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன; எதிரெதிரே நின்று போரிடும் சக்திகளின் உறவால், போராட்ட (இயக்க) வடிவங்களால், ஒவ்வொரு குறிப்பிட்ட மாவட்டத்திலும் இயக்கத்தின் உணர்ச்சி வேகத்தால் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள போராட்டக் களத்தால் இவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு திருப்பத்திலிருந்து மற்றது வரையிலான காலப்பகுதியின் போது செயல்தந்திரங்கள் கால, இட, நிலைமைகளுடன் பொருந்துமாறு மாறுகிறது; செயல்தந்திரங்கள் போர் முழுவதிலும் இடங்கொள்வதில்லை; போரின் வெற்றி தோல்விக்கு இட்டுச் செல்கிற தனித்தனிச் சண்டைகளில் மட்டுமே இடங்கொள்கின்றன. எனவே, செயல்தந்திரங்கள் போர்த்தந்திரக் காலப்பகுதியின் போது பல தடவை மாறுகின்றன. (மாறலாம்) ஒரு போர்த்தந்திரக் காலப் பகுதி, செயல்தந்திரக் காலப்பகுதியை விட நீண்டதாக இருக்கின்றது. போர்த்தந்திர நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகவே செயல் தந்திரங்கள் உள்ளன. பொதுவாகச் சொன்னால் செயல்தந்திர வெற்றிகள் போர்த்தந்திர வெற்றிகளுக்குத் தயார் செய்கின்றன. போராட்டம் பொதுவாகப் போரில் வெற்றியடையும் வகையில், அதாவது போர்த்தந்திர, வெற்றிக்கென மக்கள் திரளை புதிய நிலைமைக்கு வழிநடத்தும் வகையில் போராட்ட முழக்கங்களை வழங்குவது செயல்தந்திரங்களின் செயல்பாடு ஆகும். ஆனால் ஒரு செயல்தந்திர வெற்றியானது, போர்த்தந்திர வெற்றியை முறியடிக்கச் செய்கிற அல்லது ஒத்திப் போடுகிற சம்பவமாகவும் உண்டு. இத்தகைய விடயங்களில் செயல்தந்திர வெற்றிகளை விட்டுவிட்டு போவது இன்றியமையாததாகும்.
எடுத்துக்காட்டாக, கெரென்ஸ்கியின் கீழ் 1917 தொடக்கத்தில் தொழிலாளர்களிடையேயும், படைவீரர்களிடையேயும் நாம் போரை எதிர்த்து நடத்திய போராட்டத்தைக் கூறலாம். அது ஐயத்துக்கிடமின்றி ஒரு  செயல்தந்திரப் பின்னடைவில் முடிவடைந்தது; ஏனெனில், மக்கள் திரளினர் தமது பேச்சாளர்களை மேடைகளிலிருந்து கீழே இழுத்துப் போட்டு அடித்தனர்; சில நேரங்களில் அவர்களை நார்நாராக கிழித்தனர். மக்கள் திரள் கட்சியை நோக்கி இழுக்கப்படுவதற்கு மாறாக அவர்கள் கட்சியிடமிருந்து விலகி ஓடினர். ஆனால் இந்த செயல்தந்திர தோல்விக்கு மாறாக, இப்போராட்டம் ஒரு பெரிய போர்த்தந்திர வெற்றியை அண்மையில் கொணர்ந்தது; ஏனெனில், போரை எதிர்த்து நாம் போராடியது சரி என்று மக்கள் விரைவிலேயே புரிந்து கொண்டனர்; பின்னர் அவர்கள் கட்சியின்பால் இது உதவி செய்து விரைவுபடுத்தியது.
     மற்றோர் எடுத்துக்காட்டு; இருபத்தொரு நிபந்தனைகளுக்குப் பொருத்தமாக, சீர்திருத்தவாதிகள் மற்றும் மையவாதிகளிடமிருந்து பிரிந்து போய்விட வேண்டுமென்ற காமின்டர்னின் (கம்யூனிஸ்ட் அகிலம்) கோரிக்கை, ஒரு குறிப்பிட்ட செயல் தந்திரம் பின்னடைவைத் தடுக்கிறது; ஏனெனில்,அது பொதுவுடமை அகிலத்தின் “ஆதரவாளர்கள்” எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து அதைப் பலவீனமாக்குகிறது. ஆனால் அது நம்பமுடியாத கூறுகளை உதறித் தள்ளுவதன் மூலம் ஒரு பெரிய போர்த்தந்திர ஆதாயத்துக்கு இட்டுச் செல்கிறது. அது ஐயமின்றி காமின்டர்னை வலிமைப்படுத்தும்; அதன் அணிகளை மிக நெருக்கமாக பிணைக்கும், அதாவது, பொதுவாக அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
7.  கிளர்ச்சி முழக்கமும் செயல் முழக்கமும்
          இவற்றைக் குழப்பிவிடக் கூடாது. அப்படிச் செய்வது அபாயகர மானது. 1917 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் “எல்லா அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்பது கிளர்ச்சி முழக்கமாக இருந்தது; கட்சியின் மையக்குழு அக்டோபர் 10 இல் கூடி “அதிகாரத்தைக் கைப்பற்றுதல்” மீதான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு அது செயல் முழக்கம் ஆனது. ஏப்ரலில் பெத்ரோகிராடில் பெக்டாத்யேவ் குழு செய்த நடவடிக்கையில் முழக்கங்கள் பற்றிய அத்தகைய தவறைச் செய்தது.
8.  ஆணை (Directive) (பொது)
         ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் குறிப்பிட்ட இடத்திலும் செயலில் ஈடுபடுவதற்கு நேரடியாக அறைகூவல் விடுப்பதே ஆணை ஆகும். இது கட்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஏப்ரல் தொடக்கத்தில் “எல்லா அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்பது ஒரு பிரச்சார முழக்கமாகவே இருந்தது. (’ஆய்வுரை`) ஜூனில் அது கிளர்ச்சி முழக்கமாகியது. (அக்டோபர் 10) அக்டோபரில் அது செயல் முழக்கமாகியது. ஆனால் அக்டோபர் முடிவில் அது உடனடி ஆணையாகியது. கட்சி முழுவதற்குமான பொது ஆணை பற்றியே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பொது ஆணைக்கு விளக்கமான உள்ளூர் ஆணைகளும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு சொல்லுகிறேன்.
9.  சிறு உடைமை வர்க்கத்தின் ஊசலாட்டம்.
          குறிப்பாக, அரசியல் நெருக்கடி முற்றித் தீவிரமடையும் காலங்களில் (ஜேர்மனியில் ரெய்க்ஷ்டாக் தேர்தல்களின் போது; ருக்ஷ்யாவில் கெவின்ஸ்கியின் ஏப்ரலில் ஜூனில் மற்றும் ஆகஸ்டில் மீண்டும் ருக்ஷ்யாவில் க்ரான்ஸ்டாட் நிகழ்ச்சிகளின் போது 1921 -இல்) இதைக் கவனமாக ஆராய வேண்டும். இதை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆனால் அதற்கு வளைந்து கொடுப்பது அபாயகரமானது.; பாட்டாளிவர்க்க நோக்கத்திற்குச் சாவுமணி அடித்து விடும். அத்தைகைய ஊசலாட்டங்களால் கிளர்ச்சி முழக்கங்களை மாற்றிவிடக் கூடாது; ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆணையையும், ஒரு (செயல்) முழக்கத்தையும் கூடத்தான் மாற்றவோ. ஒத்திவைக்கவோ வேண்டியது அனுமதிக்கப்படுகிறது; சில சமயங்களில் இது இன்றியமையாததாகிறது. “இரவோடிரவாகச்” செயல் தந்திரத்தை மாற்றுவதென்பது துல்லியமாக ஒரு ஆணையை அல்லது ஒரு செயல் முழக்கத்தைக் கூட மாற்றுவதாகும்;ஆனால் ஒரு கிளர்ச்சி முழக்கத்தை மாற்றக் கூடாது. (1917 ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தைத் திரும்பப் பெற்றதும் அது போன்ற விபரங்களும்).
      10.   போர்த்தந்திரவாதிகளினதும்,செயல்தந்திரவாதிகளினதும்  கலையானது,( The art of the strategist and tactician), ஒரு கிளர்ச்சி முழக்கத்தைத் திறமையுடனும்,தக்க சமயத்திலும் ஒரு செயல் முழக்கமாக மாற்றுவதிலும், ஒரு செயல் முழக்கத்தைத் திறமையுடனும் தக்க சமயத்திலும் வரையறுக்கப்பட்ட பருண்மையான ஆணைகளாக மாற்றுவதிலும் அடங்கியுள்ளது.
ருக்ஷ்யாவின் வளர்ச்சியின் வரலாற்றுத் திருப்பங்கள்
1. 1904-05 திருப்பம் (ருக்ஷ்ய – ஜப்பானிய போர் ஒருபுறம் எதேச்சாதிகாரத்தின் முற்றிலும் போதாத தன்மையையும் மறுபுறம், பாட்டாளிவர்க்கம் மற்றும் உழவர் இயக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியது) மார்க்சியப் போர்த்தந்திரத் திட்டமாக வந்த “இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற புத்தகம் இந்தத் திருப்பத்திற்கானது. முதலாளிய ஜனநாயகப் புரட்சியை நோக்கியதான திருப்பம். (இந்த திருப்பத்தின் சாரம் இதுதான்). காடேட்டுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜாரிசத்துடன் உறவு கொண்டது போன்று இல்லை. ஆனால் (Bourgeoise – democratic revolution) மேலை நாடுகளின் சோசலிச இயக்கத்துக்கு ஒரு தூண்டும் விசையாக அமைந்து, அங்கே புரட்சியைக் கட்ட விழ்த்து விட்டு. பூர்சுவா வர்க்கப் புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சிக்குக் கடந்து செல்ல உதவும் என்பதைத் தொடக்கப் புள்ளியாக இப் போர்த்தந்திரத் திட்டம் மேற்கொண்டது. (மூன்றாவது கட்சிப் பேராயத்தின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளிலும், பேராயத்தின் லெனின் பேச்சுக்களிலும், சர்வாதிகாரம் பற்றிய கருத்தியலைப் பற்றி அவர் பேராயத்திலும் அவருடைய சிறு நூலான “காடேட்டுக்களின் வெற்றி” என்பதிலும் செய்த பகுப்பாய்வுகளிலும் காண்க), எதிரெதிர் நின்று போரிடும் சக்திகள் பற்றிய கணிப்பும், பொதுவாக, இந்தத் திருப்பக் காலப்பகுதியின் பொருளியல் மற்றும் அரசியல் பகுப்பாய்வும் உயர் நிலையானதாகும். “இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற நூலில் வரையப்பட்டுள்ள போர்த்தந்திரத் திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கையாவது செய்ததன் மூலம் பிப்ரவரிப் புரட்சி இந்தக் காலப் பகுதியின் உச்ச நிலையைக் குறித்தது.

2.  சோவியத் புரட்சியை நோக்கியதான 1917 பெப்ரவரி – மார்ச்சில் நேர்ந்த திருப்பம்.
      (ஏகாதிபத்தியப்போர் எதேச்சாதிகாரத்தை துடைத்தழித்தது. முதலாளியத்தின் முற்று முழுதான இயலாமையை வெளிப்படுத்தி, நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தவிர்க்க இயலாத ஒரே வழி சோசலிசப் புரட்சி என்று காட்டியது.) மக்கள், முதலாளியவர்க்கம் மற்றும் ஆங்கிலோ – பிரஞ்சு மூலதனம் கொண்டுவந்த மேன்மைமிக்க பெப்ரவரிப் புரட்சிக்கும், எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிய அக்டோபர் புரட்சிக்கும் இடையிலான வேறுபாடு (இந்தப் புரட்சி காடேட்டுக்களுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தபடியால், பன்னாட்டுச் சூழலில் (Situation) முக்கியத்துவமுள்ள எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. ஏனெனில் இது ஆங்கிலோ- பிரஞ்சு மூலதனத்தின் ஒரு தொடர்ச்சியே ஆகும்.)
   லெனினின்”ஆய்வுரை” யானது புதிய திருப்பத்திற்கு இசைந்த போர்த்தந்திரத் திட்டமாக அமைந்த ஒரே வழி பாட்டாளிவர்க்க சர்வாதி காரம்தான் என்றது. “நாம் ருக்ஷ்யாவில் சோசலிசப் புரட்சியைத் தொடங்குவோம்; நமது சொந்த முதலாளி வர்க்கத்தைத் தூக்கி எறிந்து, இந்த வழியில் மேலைநாடுகளில் புரட்சியைக் கட்டவிழ்த்து விடுவோம்; அதன் பிறகு மேலைநாட்டுத் தோழர்கள் நமது புரட்சி முழுமை பெறச் செய்ய உதவுவார்கள்” என்பதை அத்திட்டம் தொடக்கப் புள்ளியாகக் கொண்டது. இந்தத் திருப்புமுனைக் காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியலையும், அரசியலையும் பகுத்தாராய்வது உயர் நிலையான ஒன்றாகும். (இக்காலப்பகுதி இரட்டை அதிகாரம், கூட்டணிச் சேர்க்கைகள், கெரன்ஸ்கி ஆட்சியின் சாவு அறிகுறியாக கர்னிலோவ் கலகம், போரில் அதிருப்தியடைந்ததால் மேலைநாடுகளில் அமைதியின் மை ஆகியவற்றின் காலப்பகுதியாகும்.)
3.  1917 அக்டோபர் திருப்பம்
     (ருக்ஷ்யாவில் மட்டுமின்றி உலக வரலாற்றின் திருப்பம்) ருக்ஷ்யாவில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுதல்; (அக்டோபர்- நவம்பர்- டிசம்பர் 1917-1918 முதல் பாதி ஆண்டு) இத்திருப்பம் உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பன்னாட்டுச் சமூக முனையில் நேர்ந்த பிளவு ஆகும். இது உலக அளவில் முதலாளியத்தைக் கலைத்து விட்டு சோசலிச அமைப்பை நிறுவுவதை நோக்கியதான திருப்பமாகும். ஏகாதிபத்திய போருக்கு மாறாக உள்நாட்டுப் போர்ச்சகாப்த (ஊழி) தொடக்கமான திருப்பம் இது.(சமாதானம் பற்றிய ஆணை, குலம் பற்றிய ஆணை,  தேசிய இனங்கள் பற்றிய ஆணை, இரகசிய ஒப்பந்தங்களை வெளியிடல், கட்டுமான வேலைத்திட்டம், சோவியத்துக்களின் இரண்டாவது பேராயத்தில் லெனின் பேசிய பேச்சுக்கள், சோவியத் ஆட்சி அதிகாரத்தின் கடமைகள், பொருளியல் கட்டுமானம் பற்றிய லெனினின் சிறுநூல்.)
   பொதுவுடமை அதிகாரத்தில் இல்லாத போது, அது எதிர்க்கட்சியாக இருக்கிற போது, அதன் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரத்துக்கும் பொதுவுடமை அதிகாரத்திலிருக்கும்போது அதன் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரத்துக்கும் இடையிலான வேறுபாட்டை அலசி ஆராய்க.
  பன்னாட்டு நிலைமை, இரண்டு ஏகாதிபத்திய குறுங் குழுக்களிடை யிலான போர்த் தொடர்ந்தமை ருக்ஷ்யாவில் சோவியத் ஆட்சியதிகாரம் நிலைப்பதற்கும் நீடிப்பதற்கும் ஒரு சாதகமான நிலைமை ஆகியது. (பிரெஸ்ட் சமாதானம் முடிவடைந்த பிறகு)

4.  சுருக்கமான அமைதியான கட்டுமான காலப்பகுதிக்குப் பிறகு, பிரெஸ்ட் சமாதானத்துக்குப் பிறகு தொடங்கிய குறுக்கீட்டாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நோக்கிய செல்திசை (Course) (1918 கோடை முதல் 1920 இறுதிவரையில்)இது பிரெஸ்ட் சமாதானத்துக்கு அப்புறம் தொடங்கியது. இது சோவியத் ருக்ஷ்யாவின் இராணுவ பலவீனத்தை எதிரொலித்து சோவியத் புரட்சியின் முதன்மையான காப்பரணகாகச் சேவை செய்வதற்கு ஒரு செம்படையை உருவாக்க வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தியது. செக்கோஸ்லோவாகியர்களின் எதிர் நடவடிக்கை, முர்மான்ஸ்க், அர்ச்சங்கள், விலாடி வாஸ்டாக், மற்றும் பாகுவை எண்டெண்டெ போர் அறிவித்தமை, இவை எல்லாம் புதிய திருப்பத்தைக் குறித்தன – அப்போது தொடங்கிய அமைதியான கட்டுமானத்திலிருந்து இராணுவ நடவடிக்கைகளுக்கும், உலகப் புரட்சியின் மையத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகைவர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலுக்கும் மாறுவதான திருப்பம்.
         (பிரெஸ்ட் சமாதானம் முதலியவை பற்றிய லெனினின் பேச்சுகள்) சோசலிசபுரட்சி நடந்து முடிய நீண்டகாலம் பிடிக்கும்; அத்துடன் நாம் நமது சொந்த மூலவளங்களை மட்டுமே நம்பி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதுவும் குறிப்பாக – மேலே குறிப்பிட்ட மாவட்டங்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு அந்நிலைக்கு ஆளானோம்.  இதற்கு மேலைநாடுகளின் பாட்டாளிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வரவில்லை. அதனால் நாம் அந்த அசிங்கமான பிரெஸ்ட் சமாதானத்தைச் செய்தோம். நாம் ஓய்வெடுத்து, அதே பொழுதில் நமது செம்படையைக் கட்டி நமது சொந்த முயற்சிகளா லேயே சோவியத் குடியரசைத் தற்காத்துக் கொள்வதற்கு அந்த ஓய்வு தேவைப்பட்டது.
     ”எல்லாம் போர் முனைக்கே, எல்லாம் குடியரசின் பாதுகாப்பிற்கே” எனவே பாதுகாப்புக் குழுவை அமைத்தல் முதலியன நடந்தேறிற்று. இது போர்க்காலப் பகுதியாகும். இது தன்முத்திரையை ருக்ஷ்யாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை முழுவதிலும் பதித்தது.
5). ராங்கல் (Wrangal) தோற்கடிக்கப்பட்ட பிறகு, 1921 இன் தொடக்கத்திலிருந்து அமைதியான கட்டுமானத்தை நோக்கிய செல்திசை (Course) பிரிட்டன் போன்ற பல முதலாளிவர்க்க அரசுகளுடனான சமாதான ஒப்பந்தம் போட போர் முடிவடைந்து விட்டது. ஆனால் மேற்கத்திய நாட்டு சோசலிஸ்டுகள் நமது பொருளாதாரத்தை மீட்பதற்கு இன்னமும் உதவ முடியாதவர்களாக இருப்பதால், தொழில் துறையில் நாம், மிகவும் வளர்ச்சியடைந்த முதலாளி வர்க்க அரசுகளால் பொருளியல் ரீதியாகச் சூழப்பட்டிருப்பதால், தனித்தனி முதலாளி வர்க்க அரசுகளுக்குச் சலுகை அளித்து வர்த்தக உடன்படிக்கை போடவும் தனித்தனி முதலாளியக் குழுமங்களுடன் சலுகை உடன்படிக்கை போடவும் நிர்ப்பந்தி க்கப்பட்டோம். இந்தத் (பொருளியல்) துறையில் கூட நாம் நமது சொந்த மூலவளங்களையே நம்பி சூழ்ச்சித் திறமையுடன் செயலாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். எல்லாமே தேசியப் பொருளாதாரத்தை மீட்டமைக்கத்தான். (லெனினின் நன்கறியப்பட்ட பேச்சுக்களையும் சிறுநூல்களையும் காண்க.) பாதுகாப்புக் குழு உழைப்பு மற்றும் பாதுகாப்புக்கான குழுவாக உருமாற்றம் பெற்றது.

6.   1917 வரையான, கட்சியின் வளர்ச்சியில் உள்ள காலகட்டங்கள்.
a)   தலைமைக் கருப்பகுதியை, குறிப்பாக “இஸ்க்ரா” குழுவையும், பிறரையும் பற்றிப் பிணைத்தல், பொருளாதாரவாதத்துக்கு எதிரான சண்டை தி கிரெட (Tha Crede)
b)   அனைத்து ருக்ஷ்ய அளவில் எதிர்காலத்திய தொழிலாளர் கட்சியின் அடித்தளமாக கட்சி ஊழியர்களை உருவாக்குதல். (1895-1903) கட்சியின் இரண்டாவது காங்கிரஸ்.
c)   ஊழியர்களை ஒரு தொழிலாளர் கட்சியாக விரிபுபடுத்துதலும். பாட்டாளி வர்க்க இயக்கக் காலத்தின் போது சேர்க்கப்பட்ட புதிய கட்சி ஊழியர்களால் அத் தொழிலாளர் கட்சிக்கு மேலும் வலுவூட்டுதலும் (1903 -04) மூன்றாவது கட்சிக் காங்கிரஸ்.
d)   கட்சி சாராத மக்கள் திரளிடையே (உழைப்பாளர் பேராயம்) கட்சியைக் கலைத்து கைகழுவும் குறிக்கோளுடன் கட்சி ஊழியர்களுக்கு எதிராக மென்க்ஷ்விக்குகள் போரிட்டது. கட்சியின் அடித்தளமாகக் கட்சி ஊழியர்களைப் பாதுகாப்பதற்காகப் போச்க்ஷெவிக்குகள் சண்டை போட்டனர். இலண்டன் பேராயமும் ஒரு தொழிலாளர் காங்கிரஸூக்கு வக்காலத்து வாங்கியவர்களின் தோல்வியும்.
e)   கலைப்புவாதிகளும் கட்சி ஆதரவாளர்களும் – கலைப்புவாதிகளின் தோல்வி (1908 -10)
f)    1908 முதல் 1916 முடிய சட்டவிரோத நடவடிக்கைகளையும் சட்ட நடவடிகைகளையும் சேர்த்ததும், நடவடிக்கையின் எல்லாத் துறைகளிலும் கட்சி அமைப்புக்கள் வளர்ச்சி அடைந்தமையும்.
7.   சோவியத் அரசுக்குள் பொதுவுடமைக் கட்சி விருது பெற்ற வாள்வீரன் போல இருந்தது. அதன் உறுப்புக்களை நெறிப்படுத்தி, அவற்றின் நடவடிக்கைகளுக்குத் தூண்டுதல் அளித்தது.
இந்த ஆற்றல் மிக்க அமைப்பில் (order) பழைய காவலரின் முக்கியத்துவம், கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக எஃகுறிதியாக்கப்பட்ட புதிய சக்திகளைக் கொண்டு பழைய காவலர்களுக்கு மேலதிக வலுச்சேர்த்தமை
லெனின் இணக்கவாதிகளுக்கு (Concillators) எதிராக சமரசமில்லாத போராட்டத்தைத் தொடுத்தது சரிதானா? ஆம், ஏனெனில் அவர் அவ்வாறு செய்திருக்காவிட்டால் கட்சி நீர்த்துப் போயிருக்கும்; அது உயிருள்ள ஒன்றாக இல்லாமல் பல படித்தான கூறுகளின் கலவையாகி இருக்கும். அது உள்ளுக்குள் அவ்வளவு பற்றிப் பிணைக்கப்பட்டதாகவும், ஒன்றியதாகவும் இருந்திருக்காது. லெனின் அப்படிப் போராடியிக்காவிட்டால் கட்சி இதற்கு முன்னுதாரணம் இல்லாத கட்டுப்பாடும், முன்னர் அறியப்படாத நெகிழ்வும் உடையதாகி இருக்காது. இவ்விரு பண்புகளும் இல்லையெனில் கட்சியும், அது வழிகாட்டுகிற சோவியத் அரசும் உலக ஏகாதிபத்தியத்தைத் தாக்குப் பிடித்து நின்றிருக்க முடியாது. “கட்சிகழிவுகளை வெளியேற்றுவதால் வலிமையுடையதாகிறது” என்றும் லஸ்ஸால் (Lassale) சரியாகவே கூறினார். முதலில் தரம். பிறகு அளவு.
8.   ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி தேவையா இல்லையா, அதன் பாத்திரம் என்ன என்பது பற்றிய கேள்வி. கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் அலுவலர் அணிகளையும் பொதுவான ஊழியர்களையும் கொண்டிருக்கிறது.  இவர்கள் பாட்டாளிவர்க்கத்தின் போராட்டத்தை விதிவிலக்கின்றி எல்லா வடிவங்களிலும், எல்லாத் துறைகளிலும் நெறிப்படுத்துகின்றனர்; இவர்கள் போராட்டத்தின் பல தரப்பட்ட வடிவங்களை ஒரு முழுமையாகச் சேர்க்கின்றனர். ஒரு பொதுவுடமைக் கட்சி தேவையில்லை என்பது பொது ஊழியர்களின்றி (General staff), முதன்மையான உட்கருவும் இல்லாமல் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்பதாகும். இந்த ஊழியர்கள் போராட்ட நிலைமைகளைச் சிறப்பாக ஆராய்ந்து, போரிடுவதற்குரிய முறைகளை வகுக்கின்றனர். ஒரு முட்டாளை வைத்துக் கொண்டு போரிடுவது பொது ஊழியர்களின்றிப் போரிடுவதை விட நல்லது என்பதற்குச் சமமானது இது.


         iii.   பிரச்சனைகள் (Questions)
1. ருக்ஷ்ய – ஜப்பானிய போருக்கு முன்னும் பின்னும் எதேச்சாதிகாரத்தின் பாத்திரம்
ருக்ஷ்ய- ஜப்பானியப் போரானது ருக்ஷ்ய எதேச்சாதிகாரத்தின் முழுவதும் அழுகிய தன்மையையும், பலவீனத்தையும் அம்பலப்படு த்தியது. 1905 அக்டோபரில் நடந்த வெற்றிகரமான பொது வேலை நிறுத்தம் இந்தப் பலவீனத்தை முற்றிலும் தெளிவாக்கியது. (களிமண் காலுடைய பேருருவம்) மேலும், 1905 எதேச்சாதிகாரத்தின் பலவீனம் தாராளவாத பூர்க்ஷ்வாக்களின் வலுக்குறைவு, ருக்ஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் வலிமை ஆகியவற்றை அம்பலப்படுத்தியதோடல்லாமல், ருக்ஷ்ய எதேச்சாதிகாரம் ஐரோப்பாவின் காவற்காரனாக இருந்தது. அப்படி ஐரோப்பாவின் காவற்காரனாக இருக்கும் அளவுக்கு வலிமையுடையதாக இருந்தது என்று அப்போது நிலவிய நம்பிக்கையையும் தவறென்று காட்டியது. ருக்ஷ்ய எதேச்சாதிகாரம் ஐரோப்பிய மூலதன உதவி இல்லாமல் தனது சொந்த உழைக்கும் வர்க்கத்தைக் கூட சமாளிக்க முடியாது என்பதை உண்மை நிகழ்ச்சிகள் காட்டின.  சித்தப்பா ஜாரின்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்துக் கொண்டு ருக்ஷ்ய உழைக்கும் வர்க்கம் உறக்கத்திலிருந்த வரைக்கும், ருக்ஷ்ய விவசாயி வர்க்கம் அமைதியாக இருந்த வரையில் ருக்ஷ்ய எதேச்சாதிகாரம் ஐரோப்பாவின் காவற்காரனாக இருக்க முடிந்தது உண்மைதான். ஆனால் 1905 இல் எல்லாவற்றுக்கும் மேலாக 1905 ஜனவரி 9 – இல் நடந்த துப்பாக்கிச் சூடு ருக்ஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை எழுப்பி விட்டது. அதே ஆண்டில் நடந்த விவசாயிகள் இயக்கம் ஜாரின் மீது முயிக்குகள் (Muzhiks) கொண்டிருந்த நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைத்தது, ஐரோப்பிய எதிர்ப்புரட்சியின் மையம் ருக்ஷ்ய நிலப்பிரபுக்களிடமிருந்து ஆங்கிலோ- பிரஞ்சு வங்கி உடைமையாளர்கள், ஏகாதிபத்தியர்களுக்கும் மாறியது. ஐரோப்பாவின் காவற்காரனாகிய ருக்ஷ்ய எதேச்சாதிகாரத்துக்கு எதிரான அப்போர் முற்போக்கானது என்ற சாக்குச் சொல்லித் (1914ல்) தாம் பாட்டாளி வர்க்கத்துக்கிழைத்த துரோகத்தை நியாயப்படுத்த முயன்ற ஜேர்மன் சமூக ஜனநாயகர்கள் (ஜனநாயக வாதிகள்) உண்மையிலேயே கடந்த காலத்தின் நிழலோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,   அவர்கள் நாணயமின்றி அந்த ஆட்டம் ஆடினார்கள்; ஏனெனில் ஐரோப்பாவின் காவற்கார வேலை பார்ப்பதற்குத் தேவையான போதியளவு படைகளையும் நிதியையும் தங்களிடம் வைத்திருந்த மெய்யான காவற்காரர்கள் பெத்ரோகிராடில் இல்லை; அவர்கள் பெர்லினிலும், பாரிசிலும், லண்டனிலும் இருந்தனர்.
    ஐரோப்பா ருக்ஷ்யாவுக்குள் சோசலிசத்தை அறிமுகப்படுத்திய தோடல்லாமல் ஜாருக்கு கடன் வழங்குதல் போன்ற வடிவங்களில் எதிர்ப்புரட்சியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது.  அதே போது அரசியல் அகதிகளுடன் கூடவே ஐரோப்பாவுக்குள் புரட்சியையும் ரக்ஷ்யா புகுத்திக் கொண்டிருந்தது. (இவை எல்லாவற்றிலும் முக்கியமாகப் பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் ஓர் ஆயுதமாகப் பொது வேலை நிறுத்தத்தை 1905 இல் ருக்ஷ்யர்கள் ஐரோப்பாவுக்குள் புகுத்தினர்.)
2. ”பழத்தின் கனிவு”
     புரட்சிகர எழுச்சிக்கான தருணம் எப்போது வாய்க்கிறது என்று தீர்மானிப்பது எவ்வாறு? பழம் கனிந்துள்ளது என்றும், தயாரிப்புக் காலம் முடிந்து விட்டது என்றும், நடவடிக்கை தொடங்கலாம் என்றும் எப்போது சொல்ல முடியும்?
அ.) மக்கள் திரளின் புரட்சிகர மனநிலை தழுப்பி வழிகிறபோதும், நமது செயல்முழக்கங்களும் ஆணைகளும் மக்கள் திரள் இயக்கத்தின் பின்னே தங்கிவிட்ட போதும் (லெனினின் “டூமாவுக்குப் போவதற்காக” என்பதைப் பார்க்க; 1905 அக்டோபர் காலப்பகுதிக்கு முன்பாக) மக்கள் குரலைக் கக்ஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் போதும், அதுவுங்கூட எப்போதும் முடிவதில்லை; எடுத்துக்காட்டாக 1917 இல் நடந்த ஜூலை ஆர்ப்பாட்டத்தின் போது புத்திலோவ் தொழிலாளர்களும், எந்திரத் துப்பாக்கியாளர்களும் (இடதுசாரி கம்யூனிசம் என்ற லெனின் நூலைப் பார்க்கவும்).
ஆ) எதிரிமுகாமில் நிச்சயமின்மையும் குழப்பமும் அழிவும் சிதைவும் உச்சநிலையை எட்டும் போதும்; எதிரி முகாமை விட்டு ஓடுபவர்கள் மற்றும் (ஓடுகாலிகளும்) கொள்கை மாறிகளின் எண்ணிக்கை துள்ளலும் பாய்ச்சலுமாக அதிகரிக்கும் போதும், நடுநிலைச் சக்திகள் எனப்படுகிற நகர்ப்புற மற்றும் கிராமப்புறக் குட்டி முதலாளிகளின் பரந்துபட்ட பெருந்திரள் எதிரியிடமிருந்து (எதேச்சாதிகாரம் அல்லது முதலாளிகளி டமிருந்து), உறுதியாக விலகி பாட்டாளிவர்க்கத்தோடு கூட்டணி சேரவிரும்பும் போதும்; இவற்றின் விளைவாக, எதிரியின் நிர்வாக உறுப்புகளும் அவற்றுடன் கூடவே அடக்குமுறை உறுப்புகளும் செயல் படாமல் நின்று முடங்கிப் பயனற்றுப் போவதுபோன்றே செயல்களால் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் தனது உரிமையைச் செயல்படுத்துவதற்கான பாதையைத் திறந்துவிடும் போதும்.
இ). இவ்விரண்டு காரணிகளும் (அ-வும்,ஆ-வும்) ஒரே நேரத்தில் ஒன்றிணையும் போதும் உண்மையில் இதுதான் நடக்கிறது.
தாக்குதலைத் தொடுப்பதற்கு, அதிகாரத்திலுள்ள வர்க்கம் அழிந்து போதலின் புறவய நிகழ்முறையைக் கவனிப்பதே போதுமானது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. அத்துடன் கூடவே வெற்றிகரமான ஒரு தாக்குதலுக்கு இன்றியமையாத அகவய நிலைமைகளையும் தயாரித்தாக வேண்டும். ஆளும்வர்க்க அதிகாரம் அழிந்து போதலின் புறவய நிகழ்முறைகளோடு பொருந்துமாறு தாக்குதலுக்கான அகவய நிலைமைகளைத் திறமையுடனும், தக்க சமயத்திலும் செய்ய வேண்டியது போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரத்தின் துல்லியமான கடமையாகும்.
3. தருணத்தை தேர்ந்தெடுத்தல்.
       தாக்குதலுக்கான தருணத்தைப் பொறுத்தவரையில் தருணத்தைச் சரியாக தேர்ந்தெடுப்பது கட்சிதானே ஒழிய நிகழ்ச்சிகளால் அது திணிக்கப்படு வதில்லை. இப்படிச் சரியான தருணத்தைத் தேர்ந்தெடுப்பதற்குக் கீழ்க்கண்ட முன்நிபந்தனைகள் தேவை. அ)”பழத்தின் கனிவு” மற்றும் ஆ) ஏதோ ஒரு வெளிப்படையான நிகழ்ச்சி, அரசாங்கத்தின் நடவடிக்கை அல்லது உள்ளூர்த் தன்மையுடைய ஏதோ தன்னெழுச்சியான வெடிப்பு முதல் அடியைத் தொடுப்பதற்கு, தாக்குதலைத் தொடங்குவதற்குத் தகுந்த காரணமாகப் பரந்துபட்ட மக்கள் திரளுக்குத் தெளிவாக விளக்கக் கூடியதாக இது இருக்க வேண்டும். இவ்விரண்டு நிலைமைகளையும் காணத் தவறுவது எதிரியின் மீது அதிகரித்த அளவிலும் வலிமையுடனும் பொதுத் தாக்குதலுக்கான தொடக்கப் புள்ளியாக அந்த அடி இருக்காது என்பதுடன், இடியாய் தாக்கி நசுக்கும் அடியாக அது வளரத் தவறிவிடும். (தக்க தருணத்தைத் தெரிவு செய்வதன் பொருளும் நோக்கமும் துல்லியமாக அதுதான்) அத்துடன் இல்லாமல், அதற்கு மாறாக, அது நகைக்கத்தக்கதோர் எதிர்ப்புரட்சியாக இழிந்து விடும்; அரசாங்கமும் பொதுவாக எதிரியும் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள அதை வரவேற்றுப் பயன்படுத்துவார்கள்; கட்சியை உடைப்பதற்கு அல்லது குறைந்த பட்சம் அதன் மனவுறுதியை அழிப்பதற்கு இது ஒரு சாக்காகவும் தொடக்கப்புள்ளியாகவும் ஆகிவிடலாம். எடுத்துக்காட்டாக, ஜனநாயக மாநாட்டை நிறுவுவதற்கு மையக் குழுவின் ஒரு பிரிவினர் முன்மொழிந்தமையும், ஆனால், (மேலே சொன்ன) இரண்டாவது தேவைக்கு இணங்கத் தவறியதால் (இணங்குவதற்கு முழுமையாக தவறிவிட்டது) மையக் குழு அக்கோரிக்கையை மறுத்துவிட்டதையும், தருணத்தைத் தெரிவுசெய்யும் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் பொருத்தமற்றதாகும்.
        பொதுவாக, முதலாவது அடி (தருணத்தை தெரிவு செய்தல்) ஓர் எதிர்ப் புரட்சியாக மாறாதிருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதைத் தடுப்பதற்கு, மேலே சுட்டிக்காட்டிய இரண்டு நிலைமைகளும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது உயிர்நிலையானதாகும்.
4. வலிமையைச் சோதித்தல்

   சில நேரங்களில் கட்சி தீர்மானகரமான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, போதிய சேமிப்புக்களைச் சேமித்ததாகக் கருதும்; எதிரியின் வலிமையைச் சோதிக்கவும், தனது சொந்த சக்திகள் நடவடிக்கைக்குத் தயாராக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளவும் ஒரு சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளுதல் சூழ்வினைத் திறமையுடையதாக இருக்கும் என்று சிந்திக்கலாம். அத்தகைய வலிமைச் சோதனை கட்சியால் தன்விருப்பப்படி ஆராய்ந்து தீர்மானிக்கப்படலாம். (1917, ஜூன் 10 இல் நடத்த இருந்து, பின்னர் ஜீன் 18 இற்குத் தள்ளி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்): அல்லது சூழ்நிலைகளாலோ பொதுவாக (ஆகஸ்ட் 17 இல் நடந்த கார்னிலோவ் (Karnilo) கலகம் மற்றும் பொதுவுடமைக் கட்சியின் எதிர் நடவடிக்கை, இது சிறந்ததொரு வலிமைச் சோதனையாக விளங்கியது.) வலிமைச் சோதனையை ஒரு மே நாள் ஆர்ப்பாட்டம் போன்ற ஆர்ப்பாட்டமாக மட்டும் கருதிவிடக் கூடாது; எனவே, அதைச் சக்திகள் பற்றிய கணிப்பீடு ஆக மட்டுமே விவரித்து விடலாகாது; அதன் முக்கியத்துவத்தையும், நேரக்கூடிய விளைவுகளையும் பொறுத்த வரையில், அது எழுச்சியை (uprising) விடவும் குறைவானது என்ற போதிலும் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்தை விடவும் அதிகமானது என்பதில் ஐயமில்லை. அது ஓர் ஆர்ப்பாட்டத்துக்கும் ஒரு எழுச்சி அல்லது பொது வேலை நிறுத்ததிற்கும் இடைப்பட்டதாகும். சாதகமான நிலைமைகளின் கீழ் அது முதல் அடியாக (தருணத்தைத் தெரிவு செய்தல்) எழுச்சியாக (அக்டோபர் இறுதியில் நம் கட்சியின் நடவடிக்கை) மேம்படக் கூடும்; சாதகமற்ற நிலைமைகளின் கீழ்க் கட்சி உடைந்து சிதறும் உடனடி அபாயத்தில் அக் கட்சியைத் தள்ளிவிடும். (1917 ஜூலை 3-4 ஆர்ப்பாட்டம்). எனவே, “பழம் கனிந்த நிலை”யில் இருக்கும் போது; எதிரியின் முகாம் போதிய அளவு மன உறுதி கலைந்திருக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேமிப்புகளைச் சேகரித்த போது; சுருக்கமாக; கட்சி ஒரு மேற் தாக்குதல் தொடுக்கத் தயாராக இருக்கும் போது; வலிமையைச் சோதிப்பதானது முதல் அடி கொடுப்பதாகவும், அதன் பிறகு எதிரிக்கு எதிரான பொதுத் தாக்குதலாகவும் ஆகுமளவுக்குச் சூழ்நிலைகள் ஆக்கிவிடும் வாய்ப்பைக் கண்டு கட்சி அஞ்சாத போது, வலிமையைச் சோதிப்பது மிகமிகச் சூழ்வினைத் திறன் உடையதாகும்.வலிமைச் சோதனை நடத்தும் போது கட்சி எல்லா விதமான எதிர்பாராத நிகழ்ச்சிகளுக்கும் தயாராக இருத்தல் வேண்டும்.
          5.  சக்திகளைக் கணித்தல்  
   சக்திகளைக் கணித்தல் என்பது ஓர் எளிய ஆர்ப்பாட்டமாகும். இதைப் பெரும்பாலும் எந்த நிலைமையிலும் மேற்கொள்ள முடியும். (எடுத்துக் காட்டாக, ஒரு மே நாள் ஆர்ப்பாட்டத்தைக் கூறலாம். இது ஒரு வேலைநிறுத்தத்துடனோ, வேலைநிறுத்தம் இன்றியோ நடக்கலாம்.) ஒரு வெளிப்படையான பேரெழுச்சியின் போது சக்திகளைக் கணிக்காமல், கிட்டத்தட்ட”அமைதியான” காலத்தில் கணித்தால் அது அரசாங்கத்தின் போலீஸ் அல்லது துருப்புக்களுடனான சிறுசிறு போர்களில் முடியும். இதில் கட்சிக்கோ அல்லது எதிரிக்கோ தாங்க முடியாத இழப்புக்கள் ஏற்படாது. எனினும் எழுச்சி அண்மையில் ஏற்பட இருக்கிற போதுள்ள கடுமையான வெள்ளையாட்சி நடக்கின்ற சூழலில் சக்திகளைக் கணித்தால், அது கட்சியை எதிரியுடனான பக்குவப்படாத தீர்மானகரமான மோதலில் ஈடுபடுத்தி விடலாம்; மேலும் கட்சி அப்போதும் பலவீனமாகவும் அத்தகைய மோதலுக்குத் தயாரின்றியும் இருந்தால், எதிரி அத்தகைய “சக்திகளைக் கணிக்கும்” செயலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாட்டாளி வர்க்கச் சக்திகளை நசுக்கிவிட முடியும். (இதனால்தான் 1917 செப்டம்பரில் கட்சி திரும்பத் திரும்ப உங்களைச் “சினமூட்ட இடங் கொடுக்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தது.) எனவே, ஏற்கனவே புரட்சிகர நிலைமை கனிந்திருக்கின்ற சூழலில் சக்திகளைக் கணிக்கும் முறையை மேற்கொள்ளும் போது, மிகவும் கவனமுடன் இருப்பது இன்றியமையாததாகும்; கட்சி வலுக்குன்றியிருந்தால் எதிரி அத்தகைய கணிப்பை ஓர் ஆயுதமாக மாற்றிவிட முடியும்; அந்த ஆயுதத்தைக் கொண்டே பாட்டாளிவர்க்கத்தைத் தோற்கடிக்கவோ அல்லது குறைந்த பட்சம் கடுமையாக வலுக்குன்றவோ செய்ய முடியும். அதற்கு மாறாக, கட்சியானது நடவடிக்கைக்குத் தயாராக இருந்து எதிரியின் அணிகள் வெளிப்படையாகவே மனவுறுதி குலைந்து இருந்தால், அப்புறம் “சக்திகளைக் கணிக்கத்” தொடங்கிய பிறகு “வலிமையைச் சோதனை” செய்வதற்கு (இதற்கான நிலைமைகள் பழம் கனிந்தமை போன்றவை உள்ளன என்று அனுமானத்தில்) அடுத்துப் பொதுவான தாக்குதலைத் (assault) தொடுக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது.  

6.   தாக்குதல் செயல் தந்திரம்
     பாட்டாளிவர்க்கம் ஏற்கனவே அதிகாரத்தை எடுத்துக் கொண்ட நிலையில் விடுதலைப் போர்களின் செயல் தந்திரம்.

7.  முறையாக பின்வாங்கும் செயல் தந்திரம்  
   ஐயத்துக்கு இடமின்றி மேல்நிலையிலுள்ள எதிரிப் படைகளை எதிர் கொள்ளும் போது படையில் பெரும்பகுதியை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் அதன் ஊழியர்களையாவது காப்பாற்றும் பொருட்டு எப்படித் திறமையுடன் உட்பகுதிக்கு பின்வாங்குவது (இடதுசாரி கம்பூனிசம்….என்ற லெனினின் நூலைப் பார்க்கவும். விட்டே துபா சோவ் டூமா (Witte-DubaSou Duma) வைப் புறக்கணித்த காலத்தில் நாம் எவ்வாறு இறுதியாக பின்வாங்கினோம் என்பதை எடுத்துக்காட்டாக கூறலாம்.) பின்வாங்கும் செயல் தந்திரத்துக்கும் ஓட்டம் பிடிக்கும் “செயல்தந்திரத்துக்கும்” இடையிலான வேறுபாட்டை அறிய வேண்டும். (மென்க்ஷிவிக்குகளை ஒப்பிடுக.)

8.  தற்காப்புச் செயல் தந்திரம்
எதிர்காலச் சண்டைகளை எதிர்பார்த்து ஊழியர்களைப் பாதுகாக்கவும் சக்திகளைச் சேகரிக்கவும் இன்றியமையாத ஒன்றாகத் தற்காப்புச் செயல் தந்திரம் உள்ளது. தீர்மானகரமான சண்டைகள் தொடங்கும் போது எந்தக் களம் முதலாவது போர்க்களமாகும் அல்லது எந்த வடிவிலான இயக்கம் அல்லது எந்த வடிவிலான அமைப்பு தொடக்கப் புள்ளியாகவும், பாட்டாளிவர்க்கத்திற்கு எட்டக் கூடிய ஆயுதமாகவும் ஆகும் என்பதை எவராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே விதிவிலக்கின்றிப் போராட்டத்தின் எல்லாக் களங்களிலும் நிலைகொள்ளுதல் மிகவும் அற்பமாகத் தெரிவது உட்பட எந்த ஒன்றையும் உதறித் தள்ளாமல் எல்லாவகையான ஆயுதங்களையும், அதாவது எல்லா வகையான அமைப்பு (நிறுவனங்) க்களையும் உரிய முறையில் வளர்த்தல் ஆகிய கடமையை அவை கட்சியின் மேல் சுமத்துகின்றன.  வேறு சொற்க ளில் கூறினால்; தற்காப்புச் சக்திகளைச் சேகரிக்கும் காலப் பகுதியில் தீர்மானகரமான சண்டைகளை, முன்கூட்டியே எதிர்பார்த்துக் கட்சி முற்றிலும் தயார்நிலையில் இருக்க வேண்டும். சண்டைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து….. இதன் பொருள் கட்சி கையைக் கட்டிக் காத்துக் கொண்டு ஒரு சோம்பேறிப் பார்வையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை; ஒரு புரட்சிகர கட்சி என்ற நிலையிலிருந்து (அதன் எதிர்க் கட்சியாக இருந்தால்) சீரழிந்து காத்திருந்து பார்க்கும் கட்சியாக மாறக் கூடாது. இல்லை, அது இன்னமும் தேவையான அளவு சக்தியை சேகரிக்காவிட்டாலும் அல்லது நிலைமை அதற்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் அத்தகைய காலப்பகுதியில் அது சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் சாதகமான நிலைமைகளில் எதிரிக்குத் தீங்காக முடியும் என்றால் எதிரியின் மீது ஒரு சண்டையைத் திணிப்பதற்கும், எதிரியை மாறாத ஒரு நெருக்கடி நிலையில் வைக்கவும், எதிரியின் சக்திகளைப் படிப்படியாக சிதறடித்து மனவுறுதி குலையச் செய்யவும் பாட்டாளி வர்க்கத்தின் அன்றாட நலன்களைப் பாதிக்கும் சண்டைகளில் படிப்படியாகப் பாட்டாளிவர்க்கச் சக்திகளைப் பயிற்றுவிக்கவும், இந்த வழியில் அதன் சொந்த சக்திகளை அதிகரிக்கவும் அது எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் மட்டுமே,தற்காப்பு மெய்யான செயலூக்கமுள்ள (active) தற்காப்பாகவும், நடவடிக்கைக்கான உண்மையான தன்மைகளைப் பாதுகாக்கின்ற கட்சியாகவும், ஆழ்ந்து நினைத்து எதிர்பார்த்துக் காத்திருக்கிற கட்சியாக அல்லாமலும் இருக்க முடியும். அப்போது மட்டுமே கட்சி தீர்மானகரமான நடவடிக்கைக்கான தருணத்தைத் தவறவிடாத கட்சியாகவும், கண்டும் காணாதிருக்கிற போக்கின்றியும், எதிர்பாராத நிகழ்ச்சிகளுக்கு உள்ளாகாத கட்சியாகவும் இருக்க முடியும். காவுத்ஸ்கியும் அவரைச் சேர்ந்தவர்களும் “அறிவார்ந்த” ஆழ்ந்து நினைத்துக் காத்திருக்கின்ற போர்த்தந்திரம் மற்றும் செயலற்ற அமைதியான “மிக அறிவார்ந்த” தன்மை ஆகியவற்றால் மேற்கில் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கான தருணத்தைக் காணத் தவறியமை ஒரு நேரடி எச்சரிக்கையாகும். அல்லது மீண்டும் கூறினால், முடிவற்றுக் காத்திருத்தல் மற்றும் சமாதானம் ஆகிய பிரச்சனைகள் மீதான தங்களுடைய போர்த்தந்திரம் காரணமாக மென்க்ஷ்விக்குகளும் சோசலிக்ஷ்ட் புரட்சியாளர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டமையும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறுபுறம், செயலூக்கமுள்ள தற்காப்புச் செயல்தந்திரம், நடவடிக்கைச் செயல்தந்திரம், தவறாகப் பயன்பட்டுவிடக் கூடாது. ஏனெனில் அது பொதுவுடமைக் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைச் செயல்தந்திரத்தைப் “புரட்சிகர” உடற்பயிற்சி விளையாட்டுச் செயல்தந்திரமாக மாற்றிவிடும். அதாவது, பாட்டாளிவர்க்க சக்திகளைச் சேகரிப்பதற்கும் அவை நடவடிக்கை க்கு மேலதிகத் தயார்நிலையில் இருப்பதற்கும் இவ்வாறாக, புரட்சியை முடுக்கி விடுவதற்கும், வழிகாட்டும் செயல்தந்திரமாக ஆக்காமல், பாட்டாளிவர்க்க சக்திகளை வீணடிக்கவும், அவை நடவடிக்கைக்குத் தயார்நிலையில் இல்லாமல் மோசமாக்கவும், எனவே புரட்சி நோக்கத்தைத் தடுக்கவும் ஆன செயல் தந்திரமாக மாற்றிவிடும்.
9.   பொதுவுடமைப் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரத்தின் பொதுக் கோட்பாடுகள் (Principles). அத்தகைய கோட்பாடுகள் மூன்று உள்ளன.

அ). மார்க்சியத் தத்துவத்தின்படி வந்தடைந்து முதலாளிய நாடுகளிலான புரட்சிகர நடைமுறையால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவின் அடிப்படையில் ஏற்கப்படுகிறது. பாட்டாளிவர்க்கம் மட்டுமே ஒரே புரட்சிகர வர்க்கம் ஆகும். முதலாளியத்திடமிருந்து மனித குலத்தை முழுவதும் விடுதலை செய்வதில் அது ஆர்வம் கொண்டுள்ளது. எனவே, முதலாளியத்தைத் தூக்கி எறியும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்கள் திரள்களின் தலைவராக இருப்பதே அதன் வாழ்க்கைப் பணியாகிறது. இதன் விளைவாக பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்தை நிறுவுவதை நோக்கி எல்லா வேலைகளையும் திசை திருப்ப வேண்டும்.  

ஆ). மார்க்சியத் தத்துவத்தின்படி வந்தடைந்து, புரட்சிகர நடைமுறையால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவின் அடிப்படையில் ஏற்பட்டது அது. அதாவது, எந்த ஒரு நாட்டின் பொதுவுடைமைக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும், அவை”அவர்களது சொந்த” நாட்டின் “அவர்களது சொந்தத்” தாய்நாட்டின், “அவர்களது சொந்தப்” பாட்டாளி வர்க்கத்தின் நலன்களோடு மட்டும் குறுகிப் போய்விடாமல் இருக்க வேண்டும்; ஆனால் அதற்கு மாறாக, அவர்களது சொந்த நாட்டின் நிலைமைகளையும், சூழலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போதே, அவை சர்வதேசிய பாட்டாளி வர்க்க நலன்களையும், மற்ற நாடுகளின் புரட்சியின் நலன்களையும், ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, சாரத்தில் உயிரோட்டமாக அவர்கள் சர்வ தேசிய கண்ணோட்டமுடையவர்களாக இருக்க வேண்டும்; “எல்லா நாடுகளின் புரட்சிக்கான வளர்ச்சி, ஆதரவு,விழிப்புணர்வுக்காக ஒரு (அவர்களது சொந்த) நாட்டில் தங்களால் இயன்றதை எல்லாம் அவர்கள் செய்ய வேண்டும்.” அப்போதுதான் அந்த ஒரு நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் சரியானதாக இருக்க முடியும். (”பாட்டாளிவர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்”) என்ற லெனின் நூலைப் பார்க்கவும்.

இ). போர்த்தந்திரத்தையும் செயல்தந்திரத்தையும் மாற்றும் போது புதிய போர்த் தந்திரத் திட்டங்களையும், செயல்தந்திர வழிகளையும் வகுக்கும் போது (காவுத்ஸ்கி, அக்ஸல்ராடு, பொக்கனோவ், புக்காரின்) எல்லா வரட்டு சூத்திரங்களையும் (இடது மற்றும் வலது) மறுதலித்தல்; ஒன்றையே திரும்பச் சொல்லி அதிலேயே ஆழ்ந்துவிடும் முறையை மறுதலித்தல், நூல் வாசகங்களை மேற்கோள் காட்டுதல், வரலாற்று இணை நிகழ்வுகளையும், செயல் திட்டங்களையும் உயிரற்ற சூத்திரங்களையும் (ஆக்ஸ்ல்ராடு, பிளக்கானவ்) வரைதல் ஆகியவற்றை மறுதலித்தல்; மார்க்சிய நோக்கு நிலையின் “மேல் படுத்துக் கிடப்பதல்லாமல்” அதன் நோக்குநிலையில் நிற்றலே இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்ளல்: உலகை “வெறுமனே விளக்கிக் கொண்டிராமல்” அதை “மாற்றுவதே” இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்ளல், பாட்டாளிவர்க்கத்துக்குத் தலைமை தாங்கி நடத்துவதும், உணர்வு மழுங்கிய நிகழ்முறையின் உணர்வுபூர்வமான விளக்கமாகவும் இருப்பதே இன்றியமையாது என்பதைப் புரிந்து கொள்ளுதல்; “பாட்டாளி வர்க்கத்தின் முதுகுப்புறத்தில் சிந்தித்துக் கொண்டிராமல்” நிகழ்ச்சிகளுக்கு வால்பிடித்துச் செல்லாமல் இருப்பதே இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இது ஏற்கப்படுகிறது. (லெனின் “தன்னெழுச்சியும் உணர்வுபூர்வமும் (Consciousness) என்ற கட்டுரையையும், பொதுவுடைமையாளர்கள்தான் பாட்டாளிவர்க்கத்தின் மிகவும் தொலை நோக்கு பார்வையுடைய முன்னேறிய பிரிவு ஆவர் என்ற மார்க்சின் நன்கறியப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் பகுதியையும் பார்க்கவும்).
     இந்த ஒவ்வொரு கோட்பாட்டையும் ருக்ஷ்யாவிலும், மேலைநாடுக ளிலும் உள்ள புரட்சி இயக்கங்களிலிருந்து பெறப்படும் உண்மை நிகழ்ச்சிகளோடு விளக்க வேண்டும். குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கோட்பாட்டை விளக்குக.

10. கடமைகள்
அ).பாட்டாளிவர்க்க முன்னணிப் படையினரைப்                                     பொதுவுடைமையின் பக்கம் வென்றெடுத்தல்
(அதாவது, ஊழியர்களை வளர்த்தெடுத்தல், பொதுவுடைமைக் கட்சியை உருவாக்குதல், வேலைத் திட்டத்தை உருவாக்குதல், செயல் தந்திரக் கோட்பாடுகள்) முதன்மை வடிவமாக பிரச்சாரம் இருக்கும்.

ஆ).தொழிலாளர்கள்,உழைப்பாளர்கள் ஆகியோரின் பெருந்திரளை முன்னணிப் படையின் பக்கம் வென்றெடுத்தல்
(மக்கள் திரளைப் போரிடும் நிலைக்குக் கொண்டு வருதல்). நடவடிக்கையின் முதன்மை வடிவம் –தீர்மானகரமான போர்க்களங்களுக்குப் பீடிகையாக நடைமுறைச் செயல்.
  11. விதிகள்
அ) விதிவிலக்கின்றி பாட்டாளி வர்க்கத்தின் எல்லா அமைப்பு வடிவங்களிலும் போராட்ட இயக்கத்தின் எல்லா வடிவங்களிலும் தேர்ச்சி பெறுக. (இயக்க வடிவங்கள், பாராளுமன்ற மற்றும் பாராளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட சட்டரீதியான மற்றும் சட்டவிரோத வடிவங்கள்).
ஆ). இயக்கம் சில வடிவங்களிலிருந்து வேறுவடிவங்களுக்கு விரைந்து மாறும் போது அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவும் சில வடிவங்களை வேறு வடிவங்களுக்குப் பின்னால் சேர்த்து நிரப்பவும் கற்றுக் கொள்ளவும்: சட்டரீதியான வடிவங்களைச் சட்டவிரோதமானவற் றோடும், பாராளுமன்ற வடிவங்களை பாராளுமன்றத்துக்குப் புறம்பான வடிவங்களோடும் இணைப்பதற்கும் கற்றுக் கொள்ளவும், (எடுத்துக்காட்டு, ஜூலை1917-ல் சட்டரீதியான வடிவங்களிலிருந்து சட்டவிரோதமான வடிவங்களுக்கு போல்க்ஷ்விக்குகள் விரைந்து மாற்றிக்கொண்டமை; லேனா நிகழ்ச்சிகளின் போது டூமாவில் செயல்பட்டுக் கொண்டே பாராளுமன்றத் துக்கும் புறம்பான நடவடிக்கைகளை அத்துடன் இணைத்தமை)
12. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னும் பின்னும்,   பொதுவுடைமைக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் 
நான்கு தனிச்சிறப்புகளாவன.
அ) அக்டோபர் புரட்சிக்கும் பின்னால் பொதுவாக ஐரோப்பாவிலும், குறிப்பாக ருக்ஷ்யாவிலும் எழுந்த நிலைமையின் மிகமிக முக்கியமாக தனிச்சிறப்பியல்பு, ருக்ஷ்யப் பாட்டாளிவர்க்கத்தால் ருக்ஷ்யப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, சர்வதேசிய சமூக முனையில் உண்டான பிளவு (ருக்ஷ்ய முதலாளிகள் மீதான வெற்றியின் விளைவால் உண்டானது. ஏகாதிபத்தியத்துடனான முறிவு (rupture) இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டமை ஏகாதிபத்திய போரைத் தவிர்த்து உள்நாட்டுப்போர்புரிந்தமை, நேசங்காட்டுமாறு படைத் துருப்புக்களுக்கு அறைகூவல் விட்டமை, அவர்களுடைய அரசாங்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு தொழிலாளர்களுக்கு அறைகூவல் விட்டமை). இந்தப் பிளவு சர்வதேசிய ஏகாதிபத்திய மாளிகையையே நேரடியாக உலுக்கி விட்டது. மேலைநாடுக ளில் சச்சரவிட்டுக் கொண்டிருந்த சக்திகளுக்கு இடையிலான உறவை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்துக்குச் சாதகமாக தலைகீழாக மாற்றியது; இக்காரணங்களால் இந்தப் பிளவு உலக வரலாற்றில் ஒரு திருப்பத்தைக் குறித்தது. ருக்ஷ்யப் பாட்டாளி வர்க்கமும்,பொதுவுடைமைக் கட்சியும் ஒரு தேசிய சக்தி என்ற அளவிலிருந்து சர்வதேசிய சக்தியாகவும், அவற்றின் முந்தைய கடமையாகிய தம் சொந்த நாட்டு தேசிய முதலாளிகளைத் தூக்கியெறிவதென்பதன் இடத்தை சர்வதேச முதலாளிகளைத் தூக்கியெறிவ தென்ற புதிய கடமை கைப்பற்றிவிட்டது. சர்வதேசிய முதலாளிவர்க்கம் தனக்கு நேரவுள்ள மரண அபாயத்தை உணர்ந்து கொண்டது; எனவே அது ருக்ஷ்யப்பிளவைச் சரிக்கட்டுவதை உடனடிக் கடமையாக மேற்கொண்டு சோவியத் ருக்ஷ்யாவுக்கு எதிரான அதன் சேமிப்பு (வேறு வேலைகளில் ஈடுபடாத) சக்திகளைக் குவித்தது; இதனால் ருக்ஷ்யா தன் பங்குக்கு, தனது எல்லாச் சக்திகளையும் தற்காப்புக்குக் குவித்தது தவிர்க்க இயலாததாகி விட்டது; சர்வதேசிய முதலாளி வர்க்கத்தின் முக்கிய அடியைத் தன்மீது வாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதெல்லாம் சேர்ந்து மேலைநாட்டுப் பாட்டாளிவர்க்கம் தம் சொந்த நாட்டு முதலாளிகளுக்கு எதிராகத் தொடுத்துக் கொண்டிருந்த போராட்டத்தை பொருமளவில் எளிதாக்கியது. சர்வதேசிய பாட்டாளிவர்க்கத்தின் முன்னேறிய போராளியாகிய ருக்ஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின்பால் அவர்களுக்கு இருந்த அனுதாபத்தை பத்துமடங்கு இது அதிகரித்தது.
     இவ்வாறு ஒரு நாட்டின் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிகின்ற கடமையைச் செய்து முடிப்பதென்பது, சர்வதேசிய அளவில் போரிடுதல், வேறுதளத்தில் போரிடுதல் – எதிரி முதலாளிய அரசுகளுக்கு எதிராகப் பாட்டாளிவர்க்கம் தொடுத்த போர் என்ற புதிய கடமைக்கு இட்டுச் சென்றது. இதுவரை சர்வதேசிய பாட்டாளிவர்க்கப் படைப்பிரிவுகளில் ஒன்றாக இருந்த  ருக்ஷ்ய பாட்டாளிவர்க்கம் இது முதற்கொண்டு சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைவீரனாக ஆனது.
     இவ்வாறாக ருக்ஷ்யப் புரட்சியை எளிதாக்குவதற்கு, அதாவது ருக்ஷ்யப் புரட்சியை முழுமை பெறச் செய்யும் கடமையாற்றுவதற்காக மேலைநாடு களில் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடும் கடமை ஒரு விருப்பம் என்ற நிலையிலிருந்து அன்றைய கலப்பற்ற நடைமுறைக் கடமையாக மாற்றப்பட்டது. உறவுகளில் (குறிப்பாக சர்வதேசிய உறவுகளில்) அக்டோப ரால் கொண்டுவரப்பட்ட இம்மாற்றம் முற்றிலும் அக்டோபரிலேயே கொண்டு வரப்பட்டதாகும். பிப்ரவரிப் புரட்சி சர்வதேசிய உறவுகளை கிஞ்சிற்றும் பாதிக்கவில்லை.
     ஆ). அக்டோபருக்குப் பிறகு ருக்ஷ்யாவில் எழுந்த நிலைமையின் இரண்டாவது முக்கிய சிறப்பியல்பு ருக்ஷ்யாவுக்குள் பாட்டாளி வர்க்கம் மற்றும் கட்சியின் நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். முன்னதாக அக்டோபருக்கு முன்பு, முதலாளி வர்க்கத்தைத் தூக்கி எறியும் பொருட்டுச் சண்டையிட எல்லாச் சக்திகளையும் அமைப்பாக திரட்டுவதே பாட்டாளி வர்க்கத்தின் தலையாய அக்கறையாக இருந்தது; அதாவது அதன் கடமை முதன்மையாக விமர்சிப்பதாகவும், அழிவுப் பண்புடையதாகவும் இருந்தது. இப்போது, அரசு பாட்டாளி வர்க்க அரசாக மாறிவிட்டது; இப்போது பழைய கடமை விடுபட்டுவிட்டது. ஒருபுறம் புதிய சோவியத் ருக்ஷ்யாவையும் அதன் பொருளியல் மற்றும் இராணுவ அமைப்புக்களையும் மறுபறம் தூக்கியெறியப்பட்ட, ஆனால் இன்னும் முழுமையாக நசுக்கப்படாத முதலாளிவர்க்கத்தின் தடையை நசுக்கவும் ருக்ஷ்யாவின் எல்லா உழைக்கும் மக்களையும் (உழவர்கள், வினைஞர்கள், அறிவாளிகள், சோவியத் ருக்ஷ்ய சமக்ஷ்டிக் குடியரசில் உள்ள பின்தங்கிய தேசிய இனங்களையும்) அமைப்பு ரீதியாகத் திரட்ட வேண்டிய புதிய கடமை பழைய கடமையின் இடத்துக்கு வந்துவிட்டது.*
* அத்துடன் சில பழைய இயக்க வடிவங்கள் கைவிடப்பட்டுள்ளன – எடுத்துக்காட்டாக வேலைநிறுத்தங்கள், பேரெழுச்சிகள் முதலியன. இத்துடன் தொழிலாளிவர்க்க அமைப்புக்களின் (கட்சி, சோவியத்துக்கள், தொழிற் சங்கங்கள் பண்பாடு மற்றும் பொழுது போக்கு நிறுவனங்கள்) பண்பும் வடிவங்களும் கூட மாறிவிட்டன.

இ) ருக்ஷ்யாவுக்குள்ளே பாட்டாளிவர்க்க நிலைமை மாறியதற்கேற்ப, புதிய கடமையோடு ஒத்துவரும் வகையில் முதலாளி வர்க்கம் குட்டி முதலாளிவர்க்கக் குழுக்கள் மற்றும் ருக்ஷ்ய மக்கள் தொகையின் பல்வேறு அடுக்கினர் ஆகியோரைப் பற்றிய கொள்கையில் ஒரு மாறுதல் நேர்ந்திருக் கிறது. முன்னதாக (முதலாளி வர்க்கம் தூக்கியெறியப்பட்ட சமயத்தில்) முதலாளி வர்க்கக் குழுக்கள் எதனுடனும் தனித்தனி உடன்படிக்கைக்குப் பாட்டாளி வர்க்கம் மறுத்து விட்டது. ஏனெனில் அத்தகைய கொள்கை அப்போது அதிகாரத்தில் இருந்த முதலாளிவர்க்கத்தை வலுப்படுத்தி யிருக்கும். எனினும் இப்போது பாட்டாளி வர்க்கம் தனித்தனியான உடன்படிக்கைகளுக்குச் சாதகமாக உள்ளது;
ஏனெனில் அவை இப்போது அதிகாரத்தை வலுப்படுத்துகின்றன; முதலாளி வர்க்கத்தின் தனித்தனிக் குழுக்களைப் பழக்கப்படுத்துவதற்கும் அவற்றை உட்கிரகித்துக் கொள்வதற்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவை உதவுகின்றன. சீர்திருத்தவாதத்துக்கும் தனித்தனி, உடன்படிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு (முன்னது புரட்சிகர நடவடிக்கை முறை அனைத்தையும் மறுக்கிறது; பின்னது மறுக்கவில்லை; புரட்சியாளர்கள் உடன்படிக்கைகளைப் பயன்படுத்தும்போது அவர்கள் அதைப் புரட்சிகர முறையின் மீது செய்கிறார்கள்; முன்னது குறுகியது; பின்னது விரிந்த செயல் வாய்ப்பு டையது). (”சீர்திருத்தவாதமும் உடன்படிக்கைக் கொள்கையும்” என்பதைப் பார்க்கவும்).
     ஈ) பாட்டாளிவர்க்கமும் பொதுவுடைமைக் கட்சியின் திறமைகளும் மாபெரும் அளவில் வளர்ந்தமைக்கு ஏற்ப, பொதுவுடைமைக் கட்சியின் போர்த் தந்திர நடவடிக்கைகளின் செயல்வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. முன்னதாக இயக்கத்தின் வெவ்வேறு வடிவங்கள், பாட்டாளிவர்க்க அமைப்புக்களின் வடிவங்கள் ஆகியவற்றுக்கிடையிலும் இயக்கத்தின் வெவ்வேறு கோரிக்கைகளுக்கு (முழக்கங்கள்) இடையிலும், சூழ்ச்சித் திறமையுடன் செயலாற்றுவதற்காகப் போர்த் தந்திரத் திட்டத்தை வரைதல், சிலவற்றை முன் தள்ளுதல், பிறவற்றை மாற்றுதல், வெவ்வேறு வர்க்கங் களுக்கிடையிலான முரண்பாடுகளின் வடிவில் போதாததாக உள்ள சேமிப்புக்களைப் பயன்படுத்துதல் என்ற வரம்புக்குள்தான் பொதுவுடைமைக் கட்சியின் போர்த்தந்திரம் இருந்தது. கட்சி பலவீனமாக இருந்த காரணத்தால் இந்த சேமிப்புக்களைப் பயன்படுத்தும் செயல் எல்லைகளும் வாய்ப்புக்களும் குறுகிய வரம்புக்குள்தான் தடைப்பட்டிருந்தன. எனினும், அக்டோபருக்குப் பிறகு இப்போது முதலாவதாக இந்த சேமிப்புக்கள் வளர்ந்துள்ளன. (ருக்ஷ்யாவுக்குள்ளேயுள்ள சமூக குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளும், சுற்றியுள்ள அரசுகளிலுள்ள வர்க்கங்களுக்கும் தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும், மேற்கில் வளர்ந்து வருகிற சோசலிசப் புரட்சியும், கிழக்கிலும் பொதுவாகக் குடியேற்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்ற புரட்சிகர இயக்கமும் போன்றவை). இண்டாவதாக, சூழ்ச்சித் திறனுடன் செயலாற்றுவதற்கான வழிமுறைகளும் வாய்ப்புகளும் அதிகரித்து ள்ளன. (பழைய வழிமுறைகள் புதியவற்றில் இட்டு நிரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அரச தந்திர நடவடிக்கை, மேலைநாட்டு சோசலிச இயக்கம் மற்றும் கீழைநாட்டு புரட்சிகர இயக்கம் ஆகியவற்றோடு மேலும் பயனுள்ள தொடர்புகளை நிறுவுதல் ஆகியவற்றின் வடிவில் இவை இட்டு நிரப்பப்படுகின்றன); மூன்றாவதாக, பாட்டாளிவர்க்கம் ருக்ஷ்யாவில் தனக்கே யுரிய ஆயுதப்படைகளையுடைய ஆதிக்க அரசியல் சக்தியாகிவிட்டது; சர்வதேசிய அளவில் அது உலகப் புரட்சிகர இயக்கத்தின் முன்னணிப் படை ஆகிவிட்டது. இவ்வாறு பாட்டாளி வர்க்கத்தின் வலிமையும் திறமையும் அதிகரித்து விட்டன; இதனால் சேமிப்புகளைப் பயன்படுத்துவதற்கான புதிய மற்றும் விரிந்த வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
13. சிறப்பானது
     அ) இயக்கத்தின் உணர்ச்சிவேகம் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தைத் தீர்மானிப்பதில் அதன் பாத்திரம் பற்றிய பிரச்சனை.
     ஆ) சீர்திருத்தவாதம், உடன்படிக்கை பற்றிய கொள்கை மற்றும் இவற்றுக்கிடையிலான உறவு ஆகியவை பற்றிய பிரச்சனை.
14. “சீர்திருத்தவாதம்” (சமரசம்), “உடன்படிக்கைகள்” பற்றிய கொள்கை, மற்றும் “தனித்தனி உடன்படிக்கைகள்`` ஆகியவை மூன்று வெவ்வேறு விக்ஷயங்களாகும். (ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதவும்). மென்க்ஷ்விக்குகள் செய்த “உடன்படிக்கைகள்” சீர்திருத்தவாதத்தின் மீதமைந்தவை – அதாவது அவை புரட்சிகர நடவடிக்கையை மறுதலிப்பவை – ஆதலால் அவை ஏற்கத்தக்கதல்ல. ஆனால் போல்க்ஷ்விக்குகளின் உடன்படிக்கைகள் புரட்சிகர நடவடிக்கைகளுக்கான தேவையை ஒட்டி அமைந்தவை. அந்தக் காரணத்தினாலேயே மென்க்ஷிவிக்குகள் செய்த உடன்படிக்கைகள் ஓர் ஏற்பாடாக (system) ஓர் உடன்படிக்கைகளின் கொள்கையாக மாற்றப்படுகின்றன. ஆனால் போல்க்ஷ்விக்குகள் தனித்தனியான, பருண்மையான நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். அவற்றை உடன்படிக்கைகளுக்கான ஒரு சிறப்புக் கொள்கையாக ஆக்குவதில்லை.
15. ருக்ஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் வளர்ச்சியில் மூன்று காலப்பகுதிகள்:
     அ) பாட்டாளிவர்க்க முன்னணிப் படையை (கட்சியை) உருவாக்கிய காலப்பகுதி, கட்சி ஊழியர்களைத் திரட்டிய காலப்பகுதி (இந்தக் காலப்பகுதியில் கட்சி வலுக்குன்றியிந்தது; அது ஒரு வேலைத் திட்டத்தையும், செயல்தந்திரப் பொதுக்கோட்பாடுகளையும் பெற்றிருந்தது. ஆனால் மக்கள் திரள் நடவடிக்கை கட்சி என்ற வகையில் அது வலுக்குன்றி இருந்தது).
     ஆ) பொதுவுடைமைக் கட்சியின் கீழ் புரட்சிகர மக்கள் திரள் போராட்டம் நடந்த காலப்பகுதி, இந்த காலப்பகுதியில் ஒரு மக்கள் திரள் கிளர்ச்சிக்கான அமைப்பு என்பதிலிருந்து மக்கள் திரள் நடவடிக்கைக்கான ஓர் அமைப்பாகக் கட்சி உருமாற்றம் பெற்றது; தயாரிப்புக் காலப்பகுதியின் இடத்தை புரட்சிகர நடவடிக்கைக் காலப்பகுதி கைப்பற்றியது.
16. ருக்ஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அரசியல் வலிமை, பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் (முதலாளி வர்க்கத் தலைமையின் கீழல்ல) உழவர்களின் விவசாயப் புரட்சி (Peasant agrarian revolution) – நிலப்பிரபுத்துவத்தை தூக்கியெறிதல்) நடை பெற்றது – என்பதில் அடங்கியுள்ளது. இதன் விளைவாக முதலாளிவர்க்க ஜனநாயகப் புரட்சியானது பாட்டாளிவர்க்கப் புரட்சியின் முகப்பாக (Prologue) பணியாற்றியது. உழவர்களின் கூலிஉழைப்புப் பிரிவினருக்கும் பாட்டாளிவர்க்கத்திற்கும் இடையிலான தொடர்பும், பாட்டாளிவர்க்கம் உழவர்களுக்குக் கொடுத்த ஆதரவும், அரசியல் ரீதியாகப் பாதுகாக்கப்பட்டது மட்டுமின்றி, சோவியத்துக்களில் அமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டது என்பதிலும், மக்கள் தொகையில் பரந்த பெரும்பான்மைப் பகுதியினரின் அனுதாபத்தை பாட்டாளிவர்க்கத்திற்காக இது தட்டியெழுப்பியது. (நாட்டின் தனிப் பெரும்பான்மையாகப் பாட்டாளி வர்க்கம் இல்லாவிடினும் கேடில்லாமல் போனது இதனால் தான்) என்பதிலும் ருக்ஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் அரசியல் வலிமை அடங்கியிக்கிறது.
     ஐரோப்பாவில் (கண்டத்தில்) பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பலவீனம், அங்கே பாட்டாளிவர்க்கம் நாட்டுப்புறத்தின் இந்தத் தொடர்பையும், இந்த ஆதரவையும் பெற்றிருக்கவில்லை; அங்கே முதலாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் உழவர்கள் நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். (அப்போது பாட்டாளிவர்க்கம் வலுக்குன்றி இருந்தமையால் பாட்டாளிவர்க்கத் தலைமை இல்லை). இதுவும், சமூக ஜனநாயகவாதிகள் நாட்டுப்புற நலன்களின்பால் கருத்துச் செலுத்தாமையும் சேர்ந்து உழவர்களில் பெரும்பான்மையினர் முதலாளி வர்க்கத்தின்பால் நீண்ட காலத்துக்கு அனுதாபம் உடையவர்களாக ஆவதற்கு உதவியது.*
ஜூலை,1921
*இந்தக் கட்டுரைச் சுருக்கம் ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்” என்ற 1924-ல் வெளியிடப்பட்ட நூலுக்கு ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்டது. இது ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் தொகுதி 6-உள்ளது. 1923-ல் வெளியிடப்பட்ட”ருக்ஷ்யப் பொதுவுடைமையாளர்களின் போர்த் தந்திரமும் செயல் தந்திரமும் பற்றிய பிரச்சனை பற்றி” என்ற கட்டுரையில் இதன் முதற்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த் தந்திரமும் செயல் தந்திரமும் பற்றி -ஒரு தொகுப்பு
சமரன் பதிப்பகம். பக்கங்கள் 23 – 48

No comments:

Post a Comment