Thursday 29 September 2011

அடித்தளமும் மேற்கட்டுமானமும்.மாமேதை கார்ல் மார்க்ஸ்


அடித்தளமும் மேற்கட்டுமானமும்.
மார்க்ஸின் மேற்கோள்
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு
ஒரு கருத்துரையின் முன்னுரையிலிருந்து
    
காரல் மார்க்ஸ்
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு,ஒரு கருத்துரை 1982, முன்னேற்றம் பதிப்பகம், பக். 9-11)
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
 செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 91- 93

என்னை வாட்டிய ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்காக நான் செய்த முதல் ஆராய்ச்சி;
சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவத்தை விமர்சன ரீதியாக (மறுபரிசீலனை) மீளாய்வு செய்ததாகும்…..

சட்ட உறவுகளையோ அல்லது அரசியல் வடிவங்களையோ, தனித்தனியாகவோ அல்லது மனித அறிவின் பொதுவான வளர்ச்சிப் போக்கு என்று சொல்லப்படுகிற அடிப்படையைக் கொண்டோ புரிந்து கொள்ள முடியாது; அதற்கு மாறாக அவை வாழ்க்கையின் பொருளாதாய நிலைமைகளில் பிறக்கின்றன; இவற்றின் முழுத் தொகுதியையே ஹெகல், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில, பிரஞ்சுத் தத்துவஞானிகளின் உதாரணங்களைப் பின்பற்றி “சிவில் சமூகம்” (Civil society) என்ற சொற்களில் அடைக்கிறார்; எனினும் இந்த சிவில் சமூகத்தின் உள்ளமைப்பை அரசியல் பொருளாதாரத்தில் தேடவேண்டும்- என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக  மேற்கூறிய முடிவுகளுக்கு வந்தேன்.

பாரிசில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆனால் திரு கிஸோ என்னைப் பிரான்சிலிருந்து வெளியேற உத்தரவிட்டபடியால் இந்த ஆராய்ச்சியைப் பிரல்ஸல்ஸ் நகரத்தில் தொடர்ந்து செய்தேன். இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை- இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது – பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாதாய சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற  மேற்கட்டுமானம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாதாய வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது.* (அழுத்தம் எமது)  மனிதர்களின் உணர்வு அவர்களது வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாதாய உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருந்த உற்பத்தி உறவுகளோடு – அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வெளிப்படுத்துகிற சொத்துரிமை உறவுகளோடு – இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே விரைந்தோ அல்லது சற்று தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன.

இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது, உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களும் (இயற்கை அறிவியலைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.) சட்டம், அரசியல், சமயம், கலைத்துறை அல்லது தத்துவ அறிவுத் துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காக போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்போதும் அவசியமாகும். ஒரு தனிமனிதர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை மாறாக, அவர் என்னவாக இருக்கின்றார் என்பதைக்கொண்டே முடிவு செய்கின்றோம். அதுபோலவே இப்படி மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாதாய வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை; புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாதாய நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை.
எனவே, மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய பொருளாதாய நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சனையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆரய்கின்ற பொழுது புலப்படும். விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால நிலவுடமை, நவீனமுதலாளிய உற்பத்திமுறைகளைச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளிய உற்பத்தி முறைதான் உற்பத்திமுறையின் சமூக நிகழ்வில் இறுதி முரணியல் வடிவம்  - முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல, தனியாட்களின் வாழ்வாதாரங்களின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே; ஆனால் முதலாளிய சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாதாய நிலைமைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்தச் சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.

6 comments:

  1. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தாக்கத்தை விளக்கும் இந்த மார்க்சின் முனனுரை புதிய வாசகர்கள் படித்து மார்க்சியத்தை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவும். நான் "சமுக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்" என்ற நூலை எழுதியள்ளேன், தங்கள் பார்வைக்கு கிடைத்தா என்பதை அறிய விரும்புகிறேன்,http://abouttamilbooks.blogspot.in/2012/01/blog-post_8069.html

    http://abouttamilbooks.blogspot.in/2012/01/blog-post_3136.html

    அண்மையில் "மதத்தைப் பற்றி மாக்சியம்" என்ற நூலை வெளியிட்டுள்ளேன். எனது நண்பர் எழுதிய "ரிக் வேத சமூகம் ஒரு பார்வை" என்ற நூலும் எனது செந்தழல் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது தங்களின் விமர்சனக் கருத்தை அறிய விரும்புகிறேன்
    அ கா ஈஸ்வரன் 9283275513

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேர்கட்டமைப்பும் நூலை படித்தேன் . மிகச்சரியான மார்க்சிய பார்வையை விளக்குகிறது . இப்போதைய தேவையும் அதுதான் . ஆனால் , உங்களின் மதம் குறித்த மார்க்சிய பார்வையில் எனக்கு முரண்பாடு உண்டு . ஏனெனில் நாத்திக பிரச்சாரத்திற்கு பெரியாரிய கருத்துக்களை பயன்படுத்தித்தான் செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை . பெரியாரியம் என்பது கொச்சை பொருள்முதல்வாதம் மட்டுமல்ல ஏகாதிபத்திய ஆதரவு சீர்திருதவாதமும் கூட . மேலும் எந்தவகையிலும் பெரியாரியம் மத மூடநம்பிக்கைகளுக்கும உற்பத்தி நிலைமைகளுக்கும் இடையேயான தொடர்புகளை விளக்குவதில்லை. இந்து மதத்தையும் , பார்பனர்களையும் மட்டுமே காரணம் என்று சொல்கிறது . இதற்கு காரணம் பெரியாரின் வர்க்க தன்மையும் கொச்சை பொருள்முதல்வாதமும் தான் என்பதும் உங்களுக்கு தெரியும் . மேலும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் காலத்திலும் கூட பாயர்பாக் போன்ற இயக்கவியளற்ற பொருள்முதல்வாதிகள் இருந்துள்ளனர் என்பதும் நீங்கள் அறிந்ததே . பாயர்பாக் போன்றவர்களின் கொச்சை போருல்முதல்வாதத்துடன் ஹெகலின் இயக்கவியலையும் இணைத்து தான் மார்க்சியம் பிறந்தது . எனவே பெரியாரியத்தை இணைப்பது என்பது மார்க்சியத்திலிருந்து மீண்டும் பாயர்பாக்கிடம் செல்வது போன்றது தான் .

      Delete
  2. //உங்களின் மதம் குறித்த மார்க்சிய பார்வையில் எனக்கு முரண்பாடு உண்டு// தங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது. ஏன் என்றால் //எந்தவகையிலும் பெரியாரியம் மத மூடநம்பிக்கைகளுக்கும உற்பத்தி நிலைமைகளுக்கும் இடையேயான தொடர்புகளை விளக்குவதில்லை. இந்து மதத்தையும் , பார்பனர்களையும் மட்டுமே காரணம் என்று சொல்கிறது// என்ற தங்களின் கருத்தைத்தான் எனது நூல் விமர்சனத்தோடு பிரதிபலிக்கிறது.

    “இந்து மத எதிர்ப்பு என்பது, பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுவதில்லை. மதத்தின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. தந்தை பெரியார், மத நடவடிக்கையின் வர்க்கத் தன்மையை வலியுறுத்தாமல் போனதால், அவரது மத எதிர்ப்பென்பது பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுகிறது. பார்ப்பனர்கள் சுரண்டும் வர்க்கத்திற்கான அறிவுத்துறைப் பணியினைச் செய்தவர்கள். வர்க்கச் சார்பான அறிவை எதிர்ப்பதோடு, சுரண்டும் வர்க்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.” (பக்கம் 92)
    பெரியாரின் வர்க்கச் சார்பையும், சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து போராடாத அவரது போக்கையும் இங்கு சுட்டப்படுகிறது.

    “சமூக முரணிற்கு காரணமான இந்த சமூக பொருளாதார அமைப்பை அறிந்து கொண்டு, அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், அதற்குத் துணைபுரியும் மதம், அரசாங்கம் போன்றவற்றை மட்டுமே குறிவைக்கும்போது, நடைமுறையில் காணப்படும் சமூக அமைப்பைத் தக்கவைக்கத் துணைபுரிவது போலாகிவிடுகிறது.” (பக்கம் 93)
    பெரியாரின் வர்க்கப் பார்வையற்ற போக்கால் பலனடையப் போகிறவர்கள் யார் என்பது இங்கு சுட்டுகிறது.

    “மக்கள் ஏன் கடவுளை நாடிச் செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கடவுள் நம்பிக்கையால் பணம் எல்லாம் புரோகிதர்களுக்குச் செல்கிறது என்று வருத்தப்படுவதோடு நின்றுவிடுவதால், அதாவது பிரச்சனையின் தோற்றத்திற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியாமல் போகிறது.
    இந்தப் புரோகிதர்களின் செயல்களும், மதப் பிரச்சாரகர்களின் நடவடிக்கைகளும் பணம் படைத்தவர்களின் நலன்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” (பக்கம் 93)
    இங்கு மதத்தின் வர்க்கத் தன்மையற்ற பெரியாரின் பகுத்தறிவுப் பார்வை விமர்சிக்கப்படுகிறது.

    பெரியாரின் நாத்திக்க் கருத்துக்களை பயன்படுத்தித்தான் கம்யூனிஸ்டுகள் செயல்படவேண்டும் என்று நான் கூறவில்லை. பெரியாரின் பகுத்தறிவு பார்வைக்கும் மார்க்சிய நாத்திகப் பார்வைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எனது நூலில் எழுதியதை நீங்கள் ஏன் கணகில் கொள்ளவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

    “பகுத்தறிவுவாதத்தின் பொதுவான குறைபாடு என்னவென்றால், மதத்தையும் கடவுள் சிந்தனையையும் உடனடியாகச் சித்தாந்தப் போராட்டத்தால் தூக்கி எறிய முயல்வதாகும். மத உணர்விற்கான வேர்கள் புறநிலையாக இருக்கும்போது அதனைப் பிடுங்கி எறிவதென்பது நடவாத காரியம். மத இருப்பிற்கான காரணங்கள் இருக்கும் வரையில் மதம் சமூகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்பதை பகுத்தறிவுவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.” (பக்கம் 98)
    பெரியாரின் நாத்திக் கருத்து தமிழகத்தில் உலாவருவதால் அதனை எவ்வாறு புரிந்து கடந்து செல்ல வேண்டும் என்பதற்கே பெரியாரைப் பற்றி நூலில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. “தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய் நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்கசீயத் தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.” (பக்கம் 89)

      நா.வானமாமலை அவர்களின் இந்த ஆலோசனைப்படி பெரியாரிடம் உள்ள பலம் பலவீனத்தை குறிப்பிட விரும்பினேன். பெரியாரின் நாத்திகத்தில் பலம் என்பது நாத்திக பேச்சு மட்டும்தான் என்பதை அறிந்து அதனை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். பலவீனத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தின் படியே மூலதனத்துக்கும் மத்த்துக்கும் உள்ள தொடர்பை பெரியார் அறிந்திடவில்லை என்பதையும், சமூக முரணுக்கு மதத்தையும் பார்ப்பனர்களையுமே காரணம் காட்டப்படுவதால் யாரை பெரியார் காப்பாற்றுகிறார் என்பதையும் எனது நூல் சுட்டியிருக்க நீங்கள் எனது நூலோடு முரண்பாடு உண்டு என்பது எப்படி என்பது விளங்கவில்லை.
      அத்துடன் //நாத்திக பிரச்சாரத்திற்கு பெரியாரிய கருத்துக்களை பயன்படுத்தித்தான் செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை // என்ற தங்களின் கருத்தும் எனக்கு வியப்பைத் தருகிறது. எங்கெல்ஸ் மற்றும் லெனின் கூறிய படியே பகுத்தறிவு வாதிகளின் நூல்களை பதிப்பிப்பதைப் பற்றி கூறி கருத்தோடு தான் பெரியாரின் படைப்புகளையும் குறிப்பிட்டுள்ளேன். (பக்கம் 99-100)
      அதுமட்டுமல்லாது பெரியாரின் கருத்துக்கள் தமிழக பொதுவுடைமைவாதிகளிடம் ஏன் பொதுவுடைமை கட்சி அமைப்புகளிடமும் மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையில், பெரியாரின் கருத்தக்களைத் தாண்டி எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி எனது நூலில் எழுதியதை நீங்கள் எதோ பெரியாரின் கருத்தை வெளிப்படுத்தித்தான் மார்க்சியவாதிகள் செயற்பட வேண்டும் என்றெல்லாம் நான் கூறியதாக தெரிவிப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.
      எனது நூலில் கூறாதவற்றோடு நீங்கள் முரண்படுகிறீர்கள் என்பதை தெரிவிக்கவிரும்புகிறேன்.
      அ.கா.ஈஸ்வரன்
      9283275513

      Delete
  3. வசந்தம்:

    இதுவரையிலான விவாதங்களில் சிலவற்றை நான் கூற விரும்புகிறேன். பெரியாரின் கூற்று கொச்சைப் பொருள்முதல்வாதம் அல்ல. அது கருத்துமுதல்வாத வகைப்பட்டதே. அவரின் கருத்து ஹெகலின் வகைப்பட்டதோ அல்லது பாயர்பாகின் வகைப்பட்டதோ அல்ல. அவருடைய நாத்திக பிரச்சாரம் கூட நிலையானது அல்ல. இந்துமதத்தை விட மற்ற மதங்கள் முற்போக்கானது என்று பார்த்தார். இஸ்லாம் மதத்தை தழுவவதைப் பற்றிக்கூட அவர் கூறியிருக்கிறார். அவருடைய நாத்திகம் என்பது மூடநம்பிக்கையை எதிர்ப்பதோடும், பார்ப்பனர்களை எதிர்ப்பதோடும் முடிந்துவிட்டது. அவர் எவ்வகையிலும் அனைத்துக் கடவுளையும் சாடும் நிலைக்குகூட செல்லவில்லை. அது ஏகாதிபத்திய எதிர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு மாற்றான வழிமுறையாக தேர்ந்தெடுத்தாரே தவிர அதையே ஒரு அனுபவ அல்லது அறிவின் முடிவாகக் கூட அவர் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதுவரையான பெரியாரைப் பற்றி விவாதங்களின் தொகுப்பை மிகவும் தெளிவாக உள்ளது.

      பெரியாரது பார்வை, பார்ப்பனருக்கு கிடைத்த சலுகைகள் பற்றிய எண்ணத்தின் அடிப்படையில் தான் உருவானது. அதற்கு மேல் அவர் செல்லவில்லை என்பதே உண்மை.

      Delete